இயக்குநருக்கு மரியாதை!
"அனிமல்' படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா மந்தனா, தற்போது தனுஷின் 51வது படம், அல்லு அர்ஜுனின் "புஷ்பா 2', லீட் ரோலில் "ரெயின்போ' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். அனைத்து படங்களின் படப்பிடிப்பும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடித்துவரும் ராஷ்மிகா, பிரபாஸ் புதிதாக நடிக்கவுள்ள "ஸ்பிரிட்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை அனிமல் பட இயக்குநர் சந்தீப்ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். "அனிமல்' படம் பல விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. இந்தியில் ராஷ்மிகாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது. இதனால் சந்தீப்ரெட்டி வங்கா மேல் ராஷ்மிகாவுக்கு மிகுந்த மரியாதை. எனவே அவர் கேட்டுக் கொண்டவுடனே ஓ.கே. சொல்லியுள்ளார். அதோடு பிரபாஸின் 25வது படம் என்பதும் ஓ.கே. சொல்ல இன்னொரு காரணமாம்.
சென்டிமெண்ட் நம்பிக்கை!
"ஜப்பான்' பட தோல்வியால் அப்செட்டில் இருக்கிறார் இயக்குநர் ராஜுமுருகன். இதனால் அடுத்த படப் பணிகளை கொஞ்சம் கவனத்தோடு கையாண்டுவந்தார். அப்படி உருவாக் கிய கதையை எஸ்.ஜே.சூர்யாவைச் சந்தித்து சமீபத்தில் சொல்லியுள்ளார். அவரும் க்ரீன் சிக்னல் கொடுக்க... தற்போது முழுமூச்சில் ஆரம்பகட்டப் பணிகளை கவனித்து வருகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் தனக்கு பெரிய வெற்றிப் படமாக அமையும் என ராஜுமுருகன் நம்புகிறார். காரணம், தோல்விப் படங்களை கொடுத்து வந்த விஷால் மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும், எஸ்.ஜே.சூர்யாவுடன் கைகோர்த்த "மார்க் ஆண்டனி', "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' அவர்களுக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் அந்த சென்டிமெண்ட் தனக்கும் ஒர்க்அவுட் ஆகும் என கணக்கு போட்டுள்ளார்.
வினோத் ரெடி!
கமலுக்காக காத்திருந்த இயக்குநர் வினோத், அது தள்ளிக்கோண்டே போனதால் தற்போது அடுத்த படம் எடுக்க சிரமப்படுகிறார். கார்த்தியை வைத்து "தீரன் 2' எடுக்கத் திட்டமிட்டார். உடனே ஆரம்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பின்பு யோகிபாபுவை வைத்து சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் பண்ண முயற்சி எடுத்தார். அதுவும் இப்போதைக்கு டேக் ஆஃப் ஆகவில்லை. இதனிடையே விஜய்யின் கடைசி படத்திற்கு கதை கூறி அதற்காகவும் காத்திருக்கிறார். இந்தச் சூழலில் அவருடைய அடுத்த படம் யாருடன், எப்போது தொடங்கும் என்ற கேள்வியை முன்வைத்து வினோத்தின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்ததில்.... தனுஷை வைத்து படமெடுக்க வினோத் தயாராகி வருவதாகவும், ஜூன் அல்லது ஜூலையில் படப்பிடிப்புக்கு திட்ட மிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கிறார்.
கதை சொல்லுங்க!
தசை அலர்ஜி நோயால் சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார் சமந்தா. பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் "குஷி' படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் "காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் "சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இதன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். தன் நண்பருடன் இணைந்து உடல்நலம் குறித்த "பாட்கேஸ்ட்' ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில் உடல்நிலையை சரிசெய்து மீண்டும் கதை கேட்கத் தொடங்கியிருக்கிறார் சமந்தா. அதனால் சமந்தாவிற்காக கதை எழுதிய இயக்குநர்கள் மற்றும் அவரை வைத்து படமெடுக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர்கள் எல்லோரும் தற்போது சமந்தா அலுவலகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
-கவிதாசன் ஜெ.