புது கூட்டணி!
"ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பிசியாகவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். தனது அடுத்த படத்திற்காகத் தெலுங்கு நடிகர் நானியிடம் கதை கூறினார். எந்த தகவலும் வரவில்லை. சில வருடங்களுக்கு முன்னர், ஹிட் கொடுத்த பின் விஜய்யைச் சந்தித்து கதை கூறினார். அப்போது விஜய்யிடமிருந்து ரெட் சிக்னல் வந்ததால், விஜய்யை இயக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் அவ்வப்போது விஜய்யை சந்தித்துக் கதை கூறி வந்தார். அந்த வகையில் விஜய்யின் 69வது படத்திற்காக கதை கூறியுள்ளார். இந்தமுறை விஜய்யிடமிருந்து கிரீன் சிக்னல் வந்துள்ளது. அதனால் அடுத்தகட்ட வேலைகளில் இறங்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இருவரும் முதல் முறையாக கூட்டணி வைத்துள்ளதால், தற்போது தயாரிப்பாளருக்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. விஜய் தனது 68வது படமான ‘"தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'’ படத்தில் நடித்துவருகிறார். வெங்கட்பிரபு இயக்கிவரும் இப்படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் முடிந்தவுடன் கார்த்திக் சுப்புராஜ் படம் டேக் ஆஃப் ஆகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சேரன் மறுப்பு!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சேரன், "ஜர்னி' வெப் தொடரை தொடர்ந்து, பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். சத்யஜோதி தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சேரன் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க, ராமதாஸ் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிப்பதாக ஒரு தகவல் உலாவந்தது. ஆனால் சேரன் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் சரத்குமாரை வைத்து மற்றொரு படம் இயக்கவுள்ளதாகவும், இப்படம் அது இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அதனால் ராமதாஸ் கதாபாத்திரத்திற்கான நடிகர் தேர்வும் மற்ற துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கான தேர்வும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லட்சுமிமேனனின் நம்பிக்கை!
கோலிவுட்டில் குறுகிய காலத்திற்கு ஜொலித் தவர் லட்சுமி மேனன். கடந்த சில வருடங்களாகப் படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு "சந்திரமுகி 2' படத்தில் நடித்திருந்தார். அப்படம் தோல்வியடைந்ததால் அவரும் வெளிச்சத்திற்கு வரமுடியாமல் போனது. இருப்பினும் யோகிபாபுவின் "வானவன்', "ஆதியின் சப்தம்' உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்திருக்கும் அவர், அடுத்ததாக ஆரி நடிக்கும் புது படத்தில் கதாநாயகியாக கமிட் டாகியுள்ளார். இப்படத்தை வசந்தபாலனிடம் இணை இயக்குநராக இருந்த ராஜசேகர் இயக்குகிறார். ‘"மாடர்ன்'’ என இப்படத் திற்குத் தலைப்பு வைக்கப் பட்டுள்ள நிலையில் மதுரை யில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 2024ல் வெளியாகும் படங்கள், தனக்குக் கைகொடுக்கும் எனவும், அதன் மூலம் மீண்டும் ஜொலிப்பேன் எனவும் தனது நெருங்கிய வட்டாரங்களில் நம்பிக்கையுடன் கூறி வரு கிறார் லட்சுமிமேனன்.
-கவிதாசன் ஜெ.