மீண்டும் வில்லன்!
ரஜினி -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதைப் பூர்த்திசெய்யும் வகையில் லோகேஷ் கனகராஜ், பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறார். அந்த திட்டத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸ், சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரை படக்குழு தேர்வு செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில்... அண்மையில் ரன்வீர்சிங் கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது, இவர்களைத் தொடர்ந்து தற்போது விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வில்லன் கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறது
பாலிவுட் ரீ-என்ட்ரி!
இயக்குநர் விஷ்ணுவர்தன், அதர்வாவின் தம்பி ஆகாஷ்முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார். இதில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் இந்தியில், அங்கு முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கானை வைத்து படமெடுக்கவுள்ளார். இப்படத்தை கரண்ஜோகர் தயாரிக்க, ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. மேலும் ஆக்ஷன் ஜானரில் பெரிய பொருட் செலவில் இப்படத்தை உருவாக்கி, அடுத்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்கள். அதனால் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகளில் பிசியாக இருக்கிறார் விஷ்ணுவர்தன். கதாநாயகியாக தென்னிந்திய நடிகைகளான த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். த்ரிஷாவிடமிருந்து க்ரீன் சிக்னல் வந்துள்ளது. அதனால் அனேகமாக முதல் முறையாக சல்மான்கானுடன் ஜோடி போட வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் த்ரிஷா பாலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
எகிறும் எதிர்பார்ப்பு!
"மாமன்னன்' படத்திற்கு பிறகு வடிவேலு -ஃபகத் ஃபாசில் இருவரும் மீண்டும் ஒரு படத்திற்காக கைகோர்த்துள்ளனர். இப்படத்தை சூப்பர்குட் ஃபிலிம்ஸ், அவர்களது 98வது படமாக தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். "மாமன்னன்' படம் அரசியல் டிராமா ஜானரில் அமைந்த நிலையில் இப்படம் வேறொரு கதைக்களத்தில், பயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளது. பெரிய ஹிட் படத்தைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தெலுங்கில் காமெடி!
பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான "சலார்' கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது இந்தியில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் "கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு தெலுங்கில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், நிதி அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. யோகிபாபு இதில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் மூலம் தெலுங்கில் யோகிபாபு அறிமுகமாகிறார். ஹாரர் காமெடியில் உருவாகும் இப்படத்தில் தற்போது புதுவரவாக அம்மு அபிராமி இணைந்துள்ளதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் அம்மு அபி ராமி கவனம் செலுத்தி வருவதால் அவர் பொருத்த மாக இருப்பார் என அவரைத் தேர்வு செய் துள்ளதாம் படக்குழு.
குஷியான ஆண்டு!
நடிகை ரகுல் ப்ரீத்சிங், பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார். இவர்களின் காதல் அடுத்தகட்டத்திற்கு நகர்கிறது. அடுத்த மாதம் இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இதனால் ரகுல் ப்ரீத்சிங் குஷியோடு காணப்படுகிறார். காரணம், நீண்ட ஆண்டுகளாக அவர் நடிப்பில் உருவாகி வரும் "அயலான்', "இந்தியன் 2' ஆகிய இரு படங்களுமே இந்த ஆண்டு வெளியாகிறது. அதனால் இந்த ஆண்டு ஒரு மறக்கமுடியாத ஆண்டாக அமையும் என தனது நெருங்கிய வட்டாரத்தில் ரகுல் ப்ரீத்சிங் கூறிவருகிறாராம்.
-கவிதாசன் ஜெ.