பாசிட்டிவ் அகர்வால்!
சாக்ஷி அகர்வால் ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். இதுவரை அவர் கதாநாயகியாக நடித்த படங்கள் வந்த சுவடே இல்லாமல் போனது. பெரிய நடிகர்களான ரஜினி (காலா) மற்றும் அஜித் (விஸ்வாசம்) படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தது கொஞ்சம் பெயர் பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் புதிதாக அவர் நடிக்கும் "சாரா' படத்தை பெரிதும் நம்புகிறார். ஏனென்றால் டைட்டில் ரோலில் நடிக்கிறார். அவரை சுற்றித்தான் கதை நகர்வதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் த்ரில்லர் ஜானர் கதை என்பதால் நடிப்புக்கு நல்ல ஸ்கோப் இருப்பதாக உணர்கிறார். கூடுதலாக ஆக்ஷன் காட்சிகளும் அவருக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்தவாரம் நடந்த பட துவக்க விழாவில் இளையராஜா கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளார். இப்படி பல விஷயங்கள் அவருக்கு பாசிட்டிவாக அமைந்துள்ளதால், இந்த படம் கண்டிப்பாக தனது கரியர் மற்றும் இமேஜை உயர்த்தும் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் கூறிவருகிறார். இந்தப் படத்தில் விஜய்விஷ்வா ஹீரோவாக நடிக்க ரஜித்கண்ணா இயக்குகிறார். யோகிபாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
அன்புக் கட்டளை!
விஜய்யை இயக்கிய கையோடு அடுத்ததாக ரஜினியை இயக்க கமிட்டாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ். "லியோ' பட இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்திவரும் லோகேஷ், உடனடியாக ரஜினி படத்தை ஆரம்பிக்கவுள்ளாராம். "லியோ' அடுத்த மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், வெளியீட்டிற்குப் பிறகு ரஜினி படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளை தொடங்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் உருவாகிறது. படப்பிடிப்பை அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்க திட்டமிட்டுள்ளார். மேலும் ரஜினியும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அடுத்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டம் தீட்டியுள்ளார்களாம். பட வேலைகளை அதற்குள் முடித்துக் கொடுக்க லோகேஷ் கனகராஜுக்கு கட்டளையிட்டுள்ளார் களாம். அதனால் படத்தை அவர்கள் சொன்ன தேதியில் முடிக்க இப்போதே நேரம் கிடைக்கும் பொழுது ரஜினி பட பணிகளையும் கவனித்து வருகிறாராம்.
ஆள் மாறாட்டம்!
அஜித்தின் "விடாமுயற்சி' படக்குழு, இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கண்டிப்பாக படப்பிடிப்பைத் தொடங்க பணிகளை தீவிரப் படுத்தி வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க மெயின் வில்லனாக சஞ்சய்தத் மற்றும் சிறிய வில்லனாக அர்ஜுன்தாஸும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நடிகர்கள் தேர்வு செய்து வைத்த லிஸ்ட்டில் சிறு மாற்றம் நிகழ்ந்துள்ளதாம். அதாவது நடிகை ஹுமாகுரேஷி இதில் நடிக்கவுள்ளதாக முன்பு கூறப்பட்ட நிலையில் அது கிட்டத்தட்ட உறுதியாம். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் அர்ஜுன்தாஸ் படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் ஆரவ்வை நடிக்க தேர்வு செய்துள்ளார்கள். இவர் ஏற்கனவே மகிழ்திருமேனி இயக்கிய "கலகத் தலைவன்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
கூட்டணி ரெடி!
ரஜினியை வைத்து பெரிய ஹிட் கொடுத்துவிட்ட நெல்சன், தற்போது தென்னிந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார். அதனால் அடுத்து அவர் யாரை வைத்து இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் நெல்சனின் டைரக்ஷன் ஸ்டைல் தெலுங்கு நடிகரான அல்லுஅர்ஜுனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். அதனால் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் ஏதாவது கதை இருக்கா என கேட்க உடனே ஒரு கதையை கூற, கதை நன்றாக இருப்பதாக அல்லு அர்ஜுன் கூறியுள்ளார். இதற்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யலாம் என யோசனை சொல்லியுள்ளார். தன்னுடைய படத்திற்கு எப்போதும் அனிருத்தான் இசையமைப்பாளர் என்ற நோக்கத்துடன் படம் இயக்கிவரும் நெல்சன், யோசிக்காமல் அதற்கும் ஓ.கே. சொல்லியுள்ளார். இதனால் விரைவில் நெல்சன் -அல்லுஅர்ஜுன் -அனிருத் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தெரிகிறது.
-கவிதாசன் ஜெ.