முருகதாஸ் ஹேப்பி!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் பண்ணவுள்ள நிலையில் அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். இப்படம் மூலம் நிச்சயம் கம் பேக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முழு கவனத்தையும் அதில் செலுத்தி வருகிறார். கதாநாயகியாக மிருணாள் தாக்கூரை கமிட் செய்துள்ளார். படப்பணிகளில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் முருகதாஸ், தற்போது இன்னும் ஹேப்பியாக உள்ளாராம். அதாவது தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி, தாமாக முன்வந்து தன்னுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என ஏ.ஆர் முருகதாஸிடம் பேசியுள்ளாராம். ரஜினி, விஜய், அஜித், சூர்யா என டாப் ஹீரோக்களுடன் பயணித்த நிலையில் மீண்டும் அவர்களை இயக்கும் வாய்ப்பு வராமல் இருந்ததால் வருத்தத்தில் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது சிரஞ்சீவியுடன் மீண்டும் பணிபுரியும் வாய்ப்பு வந்ததால் உற்சாகத்துடன் காணப்படுகிறாராம். சிரஞ்சீவியின் 'ஸ்டாலின்' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் ஏ.ஆர்.முருகதாஸ். பின்பு "கத்தி' படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்திருந்தார்.
ஹீரோயின் ஓ.கே!
கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பிறகு தயாராகிவருகிறது '7ஜி ரெயின்போ காலனி 2'. "நானே வருவேன்' படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் இப்படம் உருவாக, முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். ஏ.எம் ரத்னம் தயாரிக்கிறார். படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் வேளையில் நடிகர், நடிகைகள் தேர்வும் அதே வேகத்தில் நடக்கிறது. அந்த வகையில் ஹீரோயினாக அதிதி ஷங்கர் ஓகே சொன்ன நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இழுபறியில் இருந்தது. இந்நிலையில் அவர் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வளர்ந்து வரும் மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் த்ரிஷாவின் "ராங்கி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு நடன இயக்குநர் பிருந்தா இயக்கிய "தக்ஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ராமாயண இழுபறி!
மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதை தயாராகி வருகிறது. ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்க கமிட்டானார். சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அது கைகூடாமல் போக, ஆலியாபட் தேர்வானார். ராவணனாக "கே.ஜி.எஃப்' புகழ் யாஷிடம் நீண்ட காலமாக தற்போது வரை பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில் கதாபாத்திர லுக் டெஸ்ட் மேற்கொண்ட நிலையில் எல்லாம் ஓ.கே.வாகி இந்தாண்டு டிசம்பரில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆலியாபட் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகியுள்ளாராம். அதனால் வேறு ஹீரோயினை படக்குழு தேடிவருகிறது. அதேபோல் யாஷும் படக்குழுவுக்கு பிடி கொடுக்க வில்லையாம். அவரும் விலகுவதாக இருக்கிறாராம்.
குவியும் நட்சத்திரங்கள்!
"லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம், மல்டி ஸ்டார் படமாக உருவாகிறதாம். இப்போதைக்கு அதுதான் ட்ரெண்ட் என்பதால் அதையே இவர்களும் பாலோ செய்கிறார்கள். அதனால் ஏகப்பட்ட நடிகர் நடிகைகளை படக்குழு தேர்வு செய்து வருகிறது. அதன்படி ஏற்கனவே படத்தில் இரண்டு விஜய் என்றும், அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா வும் மற்றொரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் ஜெய்யும் கமிட்டாகியுள்ளனர். மேலும் பிரபு தேவாவிடமும் மாதவனிடமும் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக ஒரு தகவல் உலா வருகிறது. இந்நிலையில் புது தகவலாக நடிகை அபர்ணா தாஸ், ஜெய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
ஜெயிலர் மார்க்கெட்!
"ஜெ'யிலர் பட வெற்றி, இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதனால் அதில் கேமியோவாக நடித்த மற்ற மொழி முன்னணி நடிகர்கள், பல்வேறு ரசிகர்களின் மனதை வென்றுள்ளனர். அதில் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார், தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது தமிழ் இயக்குநரான ரவி அரசு இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார்.. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகள் முழுவீச்சில் நடக்க... சிவராஜ்குமாருக்கு தமிழிலும் தற்போது மார்க்கெட் உருவாகியுள்ளதால் அதற்கேற்றவாறும் காட்சிகளை சேர்த்து வருகிறதாம் இயக்குநர் டீம்.
-கவிதாசன் ஜெ.