நட்சத்திரத்தைக் காணலாம்!

கௌதம்மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யாராஜேஷ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்டகாலமாக உருவாகிவரும் படம் "துருவ நட்சத்திரம்'. கௌதம்மேனனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் மேலும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அவ்வப்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டினாலும் இறுதியில் ஏமாற்றத்தை தான் அளித்துவந்தது. இந்த ஏமாற்றம் இனி இருக்கப்போவதில்லை. ஒருவழியாக இப்படம் ரிலீஸாகவுள்ளது. இப் படத்தை லியோ பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தருமான லலித் வாங்கி ஜூலை 14ல் வெளியிடுகிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜோ ஜோடி?

லோகேஷ் கனகராஜ் இயக்கும் "லியோ' படத்தில் நடித்துவருகிறார் விஜய். காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏ.ஜி.எஸ். தயாரிக்கும் படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. முன்னதாக "குஷி', "திருமலை' உள்ளிட்ட படங்களில் இவர்களின் ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து "விஜய் 68' படத்திலும் தொடரும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisment

நானே வில்லன்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, தற்போது "மார்கழித் திங்கள்' என்ற தலைப்பில் படம் இயக்கிவருகிறார். இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சுசீந்திரன் இதில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து சுசீந்திரனின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். கிட்டத்தட்ட இத்தகவலை உறுதி செய்துள்ளனர். மேலும், கதாபாத்திரம் நல்ல வலுவான கதாபாத்திரம் என்றும், சுசீந்திரன் பொருத்த மாக இருப்பதாக மனோஜ் பாரதிராஜா எண்ணியுள்ளதாக கூறுகின்றனர். சுசீந்திரன், இயக்குநராக அறிமுகமான நிலையில் 'ஜீவா' படம் மூலம் தயாரிப் பாளராகவும் மாறினார். "நாம்', "தீபாவளி' உள்ளிட்ட படங்களில் தலையைக் காண்பித்த அவர் "சுட்டுப் பிடிக்க உத்தரவு' மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது அடுத்தகட்டமாக வில்லனாக நடித்து வருகிறார்.

சாண்டிக்கு சான்ஸ்!

Advertisment

ff

"பிரேமம்' பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் "கோல்டு' படத்தை தொடர்ந்து தற்போது ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் ஒரு படம் பண்ண கமிட்டாகியுள்ளார். அதற்கான பணிகளில் பிசியாக உள்ள அவர், இதில் ஹீரோவாக விஜய்சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி செய்தார். அவரிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அது கைகூடவில்லை. இந்நிலையில் நடன இயக்குநர் சாண்டியை இப்படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் செய்துள்ளார். தொடர்ந்து மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்துவருகிறார்.

cc

சீதை ஓ.கே!

ராமாயணக் கதை, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களாக முன்னரே வெளிவந்துள்ள நிலையில் தற்போது பாலிவுட்டில் திரைப்படமாக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு மதுமந்தனா தயாரிப்பில் நிதேஷ்திவாரி இயக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்புடன் தொடங்கியது. ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்க ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் யஷ் நடிப்பதாக தகவல் வெளியானது. மேலும் சீதை கதாபாத்திரத்திற்கு ரன்பீர்கபூரின் மனைவி மற்றும் நடிகையான ஆலியாபட் நடிக்க ஓ.கே. சொல்லியிருந்தார். பின்பு கால்ஷீட் பிரச்சினை காரணமாக பின்வாங்கிவிட்டார்.

இதைத் தொடர்ந்து சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்தது. சாய்பல்லவி சில காரணங்களால் படக்குழுவுக்கு நோ சொல்ல, மற்ற முன்னணி நடிகைகளிடம் படக்குழு அணுகியது. அது எதுவும் கைகூடாததால் தற்போது மீண்டும் ஆலியாபட்டிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இருவரும் ரியல் லைஃப் ஜோடி என்பதால் திரையில் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்அவுட் ஆகும் என படக்குழு நினைக்கிறது. அதனை புரிந்துகொண்ட ஆலியா பட் படக்குழுவுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார். படப்பிடிப்பு இந்தாண்டு டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

-கவிதாசன் ஜெ.