ரகசியம் அம்பலமாச்சு!
ஷங்கர் தற்போது கமலின் "இந்தியன் 2', ராம் சரணின் "கேம் சேஞ்சர்' என இரண்டு படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கியாரா அத்வானி ஹீரோயினாகவும் எஸ்.ஜே,சூர்யா வில்லனாகவும் நடித்துள்ள ‘"கேம் சேஞ்சர்'’ படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் "இந்தியன் 2' படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக யார் நடித்துவருகிறார் என்ற தகவலை ரகசியமாக ஷங்கர் வைத்திருந்த நிலையில் தற்போது அது கசிந்துள்ளது. அந்த ரகசிய வில்லன் வேறு யாரும் அல்ல எஸ்.ஜே.சூர்யாதான். முதல் முறையாக கமலுடன் இணைந்து நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா போர்ஷன் படப்பிடிப்பு முழுவதும் சத்தமே இல்லாமல் ஷங்கர் நடத்தி முடித்துள்ளார். இதற்காக எஸ்.ஜே. சூர்யாவுக்கு அவர் கரியரில் வாங்காத சம்பளம் கொடுக்கப் பட்டுள்ளது.
கோலிவுட் கங்கனா!
"எமர்ஜென்சி' படத்தை இயக்கி நடித்துள்ள கங்கனா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் "சந்திரமுகி 2' படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படத்தின் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிக்கிறார். ஹீரோவாக மாதவன் நடிக்கவுள்ளார். தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாக படக்குழு திட்டமிட்டுள்ளது. மாதவனும் கங்கனாவும் ஏற்கனவே "தனு வெட்ஸ் மனு'’என்ற இந்திப் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட வரவு!
கன்னடத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் சிவராஜ்குமார், ரஜினியின் "ஜெயிலர்' படம் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கிறார். மேலும் தனுஷின் "கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கிறார். ஜெயிலரில் வில்லனாகவும் கேப்டன் மில்லரில் முக்கிய ரோலில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இப்படங்கள் வெளியான பிறகு தமிழிலும் சிவராஜ்குமாருக்கு மார்க்கெட் உயர்ந்துவிடும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. அதனால் சிவராஜ்குமாரின் வாசலைத் தேடி தமிழ் இயக்குநர்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். அங்கு சென்றவர்களுக்கு ஷாக் தரும் செய்தியாக, சிவராஜ் குமார் ஏற்கனவே ஒரு தமிழ் இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். அந்த இயக்குநர் யார் என்று விசாரிக்கையில் கே.எஸ்.ரவிக்குமார் என்றும், இவர்களுக்கு முன்பாகவே சிவாராஜ்குமாரை சந்தித்து கதை கூறி ஓ.கே. வாங்கியுள்ளா. இருப்பினும் அடுத்த படத்திற்கான கதையை கூறி வருகிறார்களாம் மற்ற இயக்குநர்கள். கே.எஸ்.ரவிக்குமார் மூலம் முதல் முறையாக நேரடி தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
அடுத்த படம்!
சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்தை தவிர்த்துவிட்டு ஹீரோவாக மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி. இப்போது கோகுல் இயக்கும் "சிங்கப்பூர் சலூன்' படத்தில் நடித்து வருகிறார். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து "சொர்க்கவாசல்' என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை அறிமுக இயக்குநர் சித்தார்த் என்பவர் இயக்குகிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளது. நடிகர் மற்றும் நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
த்ரிஷாவின் கால்ஷீட்!
"கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வரும் தனுஷ், தனது 50வது பட பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க தனுஷே இயக்கி நடிக்கவுள்ளார். இதுவரை காளிதாஸ் ஜெயராம், விஷ்ணுவிஷால் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரை கமிட்செய்து வைத்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்தீப் கிஷனும் இணைந்துள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில் ஹீரோயினாக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூக மாக முடிந்துள்ளது. முன்னதாக 'கொடி' படத்தில் நடித்திருந்தார்.
-கவிதாசன் ஜெ.