""கேமராவை பொருத்திக்கொண்டா போக முடியும்?''

-சந்தேகங்களுக்குப் பதில் தரும் ஸ்ரீரெட்டி!

தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும் ஸ்ரீரெட்டி, விஜயவாடாவைச் சேர்ந்தவர். முதலில் பியூட்டி பார்லர் நடத்திக்கொண்டிருந்தார். அதன்பின் பார்லருக்கு வந்த நண்பர் ஒருவர் மூலம் மீடியா உலகிற்கு வந்தார். சில ஆண்டுகள் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அந்தச் சமயம் சூர்யா உள்ளிட்ட பிரபல நடிகர்களை பேட்டி எடுத்துள்ளார். அப்போது சூர்யா ரசிகையாக இருந்த ஸ்ரீரெட்டி, இப்போது அஜித் ரசிகை.

தெலுங்கு நடிகர்கள் நானி, விவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், இயக்குநர்கள் சேகர் கம்முலு, கொரட்டல சிவா, கதாசிரியர் கோனா வெங்கட் ஆகியோர் மீது செக்ஸ் புகார் தெரிவித்தார். டாக்டர் ராஜசேகரால் வேறு சில பெண்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Advertisment

srireddy

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப் கிஷன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி ஆகியோரையும் பாலியல் சர்ச்சையில் சேர்த்தார்.

Advertisment

லேட்டஸ்ட்டாக ‘"மிருகம்',’"ஈரம்', "அரவான்'’ படங்களில் நடித்த ஆதியையும் ஹோட்டலில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டில் நாலாவித சந்தேகங்களை எழுப்புகிறார்கள் பொதுவானவர்கள். அதற்கு விளக்கத்தையும் கொடுத்துவருகிறார் ஸ்ரீரெட்டி.

இப்படி பெரியபெரிய ஆட்கள் மீதெல்லாம் பாலியல் குற்றம் சுமத்துகிறீர்களே?

""தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் என்னைப்போல வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தால்... அவர்கள் சொல்கிற லிஸ்ட்டைக் கேட்டு... நீங்கள் செத்தே போய்விடுவீர்கள்.''

பெரிய நட்சத்திரங்கள் இப்படியான தொடர்பில் இருந்தால் எப்படியாவது சிக்கியிருப்பார்களே...?

""உள்ளூரில் தங்களுக்கு இருக்கும் நற்பெயரை கெடுத்துக்கொள்ளக் கூடாது என்பதால்தான் ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பையாவது வெளிநாட்டில் வைத்துக்கொண்டு... அங்கே தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்கிறார்கள். தமிழ்த் திரையுலகினர் இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஹைதராபாத்தை தேர்வு செய்கிறார்கள்.''

உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர்களில் இதுவரை எந்த வம்பிலும் பேர் அடிபடாத சில நல்லவர்களும் இருக்கிறார்களே?

""உங்கள்முன் நல்லவர்களாக இருப்பவர்கள்... நாலு சுவருக்குள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை நீங்கள் அறிய வாய்ப்பில்லை.''

ஒருமுறை அல்லது இருமுறை ஏமாறலாம். ஆனால் நீங்கள் இத்தனை முறை ஏமாந்ததாகச் சொல்றீங்களே... நம்பும்படியாகவா இருக்கு?

""நான் வீட்டைவிட்டு வெளியேறி தனியே வசிக்கிறேன். அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் தேவைப்படுகிறது. எப்படியாவது சினிமாவில் வாய்ப்புகளைப் பெறவேண்டும் என்பதால்தான் பிரபலங்களின் அழைப்பிற்கு உடன்பட்டேன்.''

இவ்வளவு பேர்களுடன் தொடர்பு என்றால்... உங்களுக்கு உடல்ரீதியாக பாதிப்பு....?

""செக்ஸ் பற்றிய புரிதல் எனக்கு உண்டு. ஆணுறை எதற்கு இருக்கிறது. அதுவுமில்லாமல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நான் மெடிக்கல் செக்-அப் செய்துகொள்வேன்.''

நீங்கள் பிரபலங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கா?

""நான் சத்தியத்தைச் சொல்கிறேன். அதற்காக இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என் மர்ம அங்கங்களில் நான் கேமராவை பொருத்திக்கொண்டிருக்க முடியுமா...''

"ஸ்ரீரெட்டி ஆதாரமில்லாமல் பேசுகிறார், தான் பாதிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையில் புகார் அளிக்கலாம்...' என நடிகர்சங்க பொருளாளர் கார்த்தி சொல்லியுள்ளாரே?

""நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறேன். மதிப்பிற்குரிய கார்த்தியின் வார்த்தைகள் என்னைப் புண்படுத்துகிறது. என் வலியை அவர்களுக்கு (நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு) உணர்த்துவேன்.''

வாய்ப்புத் தராமல் ஏமாற்றியதால்தான் முன்பு நடந்ததை இப்போது வெளியில் சொல்கிறீர்களா?

""அதுமட்டுமில்லை... சினிமா உலகுக்கு வரும் பெண்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதற்காகவும் சொல்கிறேன்.''

-ஆர்.டி.எ(க்)ஸ்