டோலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் ராஷிகண்ணா. அதர்வாவுக்கு ஜோடியாக "இமைக்கா நொடிகள்' படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக "அடங்க மறு', விஷாலுக்கு ஜோடியாக "அயோக்யா', விஜய் சேதுபதிக்கு ஜோடியாக "சங்கத்தமிழன்' என பல்வேறு ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இப்போது சுந்தர்.சி இயக்கும் "அரண்மனை 4' படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் சித்தார்த்துக்கு ஜோடியாக "டெஸ்ட்' படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத் தை தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குகிறார். சித்தார்த்துடன் இணைந்து நயன்தாரா, மாதவன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் கிரிக்கெட்டைமையப் படுத்தி உருவாகிறது. தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
கீர்த்தி கால்ஷீட்!
"பொன்னியின் செல்வன் 2' ரிலீசிற்காக காத்திருக்கும் கார்த்தி, தற்போது ராஜுமுருகன் இயக்கும் "ஜப்பான்' படத்தில் நடித்துவருகிறார். கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய்மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதையடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதனால் இப்படத்தின் கதாநாயகி தேடும் வேட்டையில் படக்குழு இறங்கியுள்ளது. முதற்கட்டமாக இந்தி நடிகை காயத்ரி பரத்வாஜை அணுகியுள்ளனர். சில காரணங்களால் அவர் மறுத்துவிட்டாராம். அடுத்ததாக தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டியை கேட்டுள்ளார்கள். கீர்த்தி ஷெட்டி ஓ.கே. சொல்ல, படக்குழு விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளது. இசை சந்தோஷ் நாராயணன். முன்னதாக கீர்த்திஷெட்டி, பாலா இயக்கும் "வணங்கான்' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி, கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகிவிட்டார். இப்போது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார்.
பிரமாண்ட அனுமான்!
"ஆர்.ஆர்.ஆர்' படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படம் ஆக்ஷன், அட்வெஞ்சர் ஜானரில் உருவாகிறது. இதற்கான ஸ்க்ரிப்ட் எழுதும் பணிகளில் படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஈடுபட்டு வருவதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கவுள்ளது. படத்தின் ஹீரோ கதாபாத்திரம் ஹனுமான் கதாபாத்திரத்தை தழுவி எழுதப்பட்டுள்ளது. மேலும் மூன்று பாகங்களாக உருவாக்கி 2025ல் திரையில் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. எஸ்.எஸ். ராஜமௌலியின் முந்தைய படங்களும் புராணக் கதைகளின் கதாபாத்திரத்தில் இருந்து எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புராண இதிகாசங்களிலிருந்து கதையின் கருவை எடுத்துக்கொண்டு தற்காலத்திற்கு தகுந்தாற்போல் பார்வையாளர்களை கவருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பெரும்பான்மையான மக்களின் வரவேற்பை பெற்றாலும் அவருடைய படங்களின் கதாபாத்திரங்கள் தன்மை விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டும் வந்திருக்கிறது. இந்த நிலையில் ஹனுமனை வைத்து உருவாக உள்ள படம் சர்ச்சைக்குள்ளாகுமா என்ற ரீதியில் பேசப்பட்டு வருகிறது.
வெற்றிமாறனின் புதிய கூட்டணி!
"விடுதலை' படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தின் இறுதி பணிகளைத் தொடங்கியுள்ளார் வெற்றிமாறன். தமிழை தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படத் தின் முதல் பாகம் நல்ல வர வேற்பை பெற்று வருகிறது. இதனிடையே ஜூனியர் என்.டி.ஆரை வைத்து வெற்றிமாறன் ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இத்தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ள வெற்றிமாறன், "அசுரன் படத்திற்குப் பிறகு, ஊரடங்கு சமயத்தில் ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்துப் பேசினேன். படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நிச்சயம் ஒரு படம் சேர்ந்து பண்ணுவோம். அப்படம் திரைக்கு வர காலதாமதம் ஆகும். ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்குச் செல்ல நிறைய நேரம் எடுத்துக் கொள்வேன். அதுதான் பிரச்சனையே. ஸ்டார் வேல்யூக்காகவோ, காம்பினேஷனுக்காகவோ படம் செய்யமாட்டேன். கதைக்காகத்தான் படம் பண்ணுவேன். நான் வைத்துள்ள ஒரு கதைக்கு ஜூனியர் என்.டி.ஆர். போன்ற ஸ்டார் தேவைப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆருடன் அதுசம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது'' என்றார்.
-கவிதாசன் ஜெ.