காஸ்ட்லி?) சேலை!
"பொன்னியிச் செல்வன்' 2-ஆம் பாகம் ஆடியோ வெளியீட்டில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பைவிட... விழாவிற்கு த்ரிஷா கட்டிவந்த சேலையை பற்றியே அதிகம் பேசப்பட்டதாம். அவர் கட்டியிருந்த ப்ளூ கலர் சேலையின் விலை மட்டுமே பல லட்ச ரூபாய் இருக்கும் என்று பிரமிப்பாய் பேசிக்கொண்டார்களாம் விழாவுக்கு வந்திருந்தவர்கள். ஆனால் விஷயம் அறிந்தவர்களோ... "அதெல்லாம் இல்லை. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் கீதிகா தனது மாடலிங்கிற்காக அணிந்து அழகு பார்த்ததைத்தான், இந்த விழாவில் த்ரிஷாவிற்கும் அணிவித்து அனுப்பியிருக்கிறார் என்றதோடு. அந்தச் சேலையை மாடலிங் பெண் அணிந்திருப்பதைப் பாருங்கள்'' என்றும் கலாய்த்து வருகிறார்களாம்.
குழப்பம் தீர்த்த கமல்!
ஷங்கர் இயக்கும் "இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்திவரும் கமல், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தைவான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்குப் பறக்கவுள்ளார். படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஜூன் மாதத்திற்குள் முடிவடைகிறது. ஏற்கனவே மணிரத்னம், மகேஷ்நாராயணன், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே அ.வினோத், வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் கமல், அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்துவருகிறது. இந்த நிலையில் ரசிகர்களின் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்ததாக அ.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கமல். அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்திலும், அதனை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.
சீறிப்பாயும் சூரி!
காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாக உருவெடுத்துள்ள சூரி, தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் "கொட்டுக்காளி' படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். "விடுதலை' பட வெற்றியால் சூரிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சித்துவருகின்றனர். ஏற்கனவே "விடுதலை' பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இவரை வைத்து ஒரு படம் பண்ண கமிட் செய்துள்ளார். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார் சூரி. இப்படத்தை "கொடி', 'பட்டாஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்குகிறார். சந்தானத்தின் "பாரிஸ் ஜெயராஜ்' படத்தைத் தயாரித்த குமார் என்பவர் தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
விஷால் ஓ.கே!
"பசங்க', "வம்சம்', "கடைக்குட்டி சிங்கம்' என குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். கடைசியாக சூர்யாவை வைத்து "எதற்கும் துணிந்தவன்' படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அடுத்து இவர் இயக்கும் படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் விஷாலை சந்தித்து தனது அடுத்த படத்திற் கான கதையைக் கூறியுள்ளார். கதையைக் கேட்ட விஷால், நன்றாக இருப்பதாகக் கூறி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதனால் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் தனது உதவி இயக்குநர்களுடன் ஈடுபட்டு வருகிறார் பாண்டிராஜ். இப்படத்தை ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன் சார்பாகத் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கிறார். ஏற்கனவே விஷால்- பாண்டிராஜ் கூட்டணியில் "கதகளி' படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதனால் இப்படம் நிச்சயம் தனக்கு வெற்றிப்படமாக அமையும் என நம்பிக்கையில் உள்ளார் பாண்டிராஜ்.
கங்கனாவின் ஆசை!
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் "தாம் தூம்' படத்திற்குப் பிறகு தனது இரண்டாவது தமிழ் படமாக "சந்திரமுகி' இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தனது போர்ஷனை முடித்துவிட்டு பாலிவுட்டிற்குத் திரும்பிய கங்கனா, படம் நன்றாக வந்திருப்பதாகவும் பி.வாசு சிறப்பாக இயக்கியுள்ளதாகவும் அவரது நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறார். இதனால் பி.வாசு இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கவேண்டும் என முடிவெடுத்த கங்கனா, அவரிடம் இதைச்சொல்லி "ஏதாவது கதை இருக்கிறதா?' என்று கேட்டுள்ளார். பி. வாசு, "சந்திரமுகி 2' படத்தை முடித்துவிட்டு இந்தியில் ஒரு படம் பண்ண நினைத் துள்ளார். அதனால் அந்த கதையை கங்னாவிடம் சொல்ல, உடனே ஓ.கே. சொல்லிவிட்டார் கங்கனா. "சந்திரமுகி 2' படம் வெளியானவுடன் இப்படத்தைத் தொடங்க முடிவெடுத்துள்ளார் பி.வாசு. 1999ஆம் ஆண்டு அஜய்தேவ்கன் நடிப்பில் வெளியான "ஹோகி பியார் கி ஜீத்' படம் மூலம் இந்தி திரையுலகில் காலடி வைத்தார் பி.வாசு. அதன் பிறகு எந்த படமும் அங்கு இயக்காத நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கங்கனா நடிக்கும் படம் மூலம் தனது இரண்டாவது படத்தை இந்தியில் இயக்கவுள்ளார்.
-கவிதாசன் ஜெ.