சண்டைக்கு தயாராகும் சமந்தா!

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்படும் சமந்தா, ராஜ் மற்றும் டீ.கே. இயக்கத்தில் வெளியான "தி பேமிலிமேன் 2'’வெப் தொடர் மூலம் இந்தி திரையுலகிலும் என்ட்ரி கொடுத்தார். இந்த தொடர் வெளியாகிப் பரபரப்பைக் கிளம்பினாலும், சமந்தாவின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து "தி பேமிலிமேன்'’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கும் மற்றொரு வெப் தொடரில் வருண் தவானுடன் நடிக்கவுள்ளார் சமந்தா.

cinema

Advertisment

இந்த தொடர் முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறதாம். மேலும் இதில் வருண் தவானுக்கு இணையான சண்டைக் காட்சிகள் சமந்தாவுக்கும் இருப்பதால், இருவரும் தற்காப்புக் கலை பயிற்சி பெற்று வருகிறார்கள். இதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சண்டை இயக்குநர் ஒருவர் பயிற்சியளித்து வருகிறாராம். "தி பேமிலிமேன் 2'’ வெப் தொடரைப் போன்றே இந்தத் தொடரும் சமந்தா விற்கு நல்ல பெயரை வாங்கித் தருமெனவும், இந்த தொடர் வெளியான பிறகு சில இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வருமெனவும் சமந்தா தரப்பில் நம்பப்படுகிறது.

"தல' படத்தின் தலைப்புச் செய்தி!

"வலிமை'’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் "ஏ.கே. 61'’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதில் அஜித்துக்கு ஜோடி யாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம். மேலும், இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க கே.ஜி.எஃப் புகழ் சஞ்சய்தத்தையும் படக்குழு நாடியுள்ளதாம். இதனிடையே படத்தின் தலைப்பு குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாக வி சென்ட்டிமெண்டை தனது தலைப்புகளில் கடைப்பிடித்துவரும் அஜித், இந்த படத்திற்கு எந்த மாதிரியான தலைப்பைத் தேர்வு செய்திருப்பார் என்று தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை அடுத்த மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனை படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்தினர் உறுதி செய்ததோடு, படத்தின் பணிகளைத் துரித கதியில் முடித்து கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

10 மொழிகளில் பிரமாண்டம்!

cc

சூர்யா, பாலா இயக்கத்தில் "வணங்கான்'’படத்தில் நடித்துவருகிறார். கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் "வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது ஜல்லிக் கட்டு சம்பந்தமான படம் என்பதால் சூர்யா சொந்தமாகக் காளை மாடுகளை வாங்கி, அதனுடன் பழகிவருகிறார். வெற்றிமாறன் தற்போது "விடுதலை' படத்தில் கவனம் செலுத்தி வருவதால் "வாடிவாசல்' படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என சொல்லப்படுகிறது

இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் "சூர்யா 42'’புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சூர்யா என்று தற்காலிகமாக பெயரிடப்படுள்ள இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்ற நிலையில் இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்தும், கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கோவா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளதாம். இரண்டு பாகங்களாகப் பிரமாண்ட படமாக 10 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. மேலும், செப்டம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

வாரிசுக்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் "வாரிசு'. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை என மாறி மாறி நடைபெற்று வருகிறது. இதனிடையே "வாரிசு' படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கசிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த படக்குழு, படப்பிடிப்பு தளத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித் திருந்தது.

இந்த நிலையில்தான் "வாரிசு'’படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நெறி முறைகளை மீறி, தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாவது படக்குழுவினரை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளதாம். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பில் பாதுகாப்பை அதிகரிக்கக் கூடுதல் ஆட்களை கண்காணிப்புப் பணியில் அமர்த்தவும் படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

-அருண்பிரகாஷ்