ஆச்சர்ய அறிவிப்பு!
நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு "கோப்ரா' படம் முடிந்த திருப்தியில் இருக்கும் விக்ரம், பா.ரஞ்சித் படத்திற்காக தயாராகிவருகிறார். கே.ஜி.எஃப் பேக்ட்ராப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கான ப்ரீ-ப்ரோடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரு கின்றன. அண்மையில் நடிகர் விக்ரம் ட்விட்டரில் தடாலடியாக எண்ட்ரி கொடுத்தார். அவரை ஒரு லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் ஃபாலோ செய்துவரும் நிலையில், ட்விட்டர் ஸ்பேஸ் தளம் வாயிலாக தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது தன்னுடைய முந்தைய படங்கள் மற்றும் அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசிய விக்ரம், "கோப்ரா' இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ண இருப்பதாக தெரிவித்தார். 2019-ஆம் ஆண்டே பூஜையுடன் தொடங்கப்பட்ட "கோப்ரா', ஒருவழியாக இந்தமாத இறுதியில் வெளியாகவுள்ளது. மூன்றாண்டுகளாக படம் புரொடக்ஷனில் இருந்ததால் படத்திற்காக தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்கான வட்டியே பல மடங்கு எகிறியுள்ளதாம். தெளிவான திட்டமிடல் இல்லாமல் இயக்குநர் படப்பிடிப்பு நடத்தியதுதான் இதற்கு காரணமாம். இது தொடர்பாக தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே ஏற்கனவே பனிப்போர் நிலவிவருகிறது. விக்ரமுக்கும் அஜய் ஞானமுத்துவுக்கும் இடையே கூட சிறு மனஸ்தாபம் இருப்பதாக இருவருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இப்படியான சூழலில் விக்ரமின் இந்த அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டர்டி பிக்சர்ஸ்-II
தன்னுடைய காந்தக் கண்ணாலும் கவர்ச்சியான நடிப்பாலும் கிறங்கடித்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட "டர்டி பிக்சர்ஸ்' திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது. படத்தில் சில்க் ஸ்மிதாவாக வித்யாபாலன் நடிக்க, மிலன் லூத்ரியா இயக்கியிருந்தார். இந்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் செகண்ட் பார்ட்டை உருவாக்கும் முயற்சியில் தற்போது படக்குழு இறங்கியுள்ளதாம். செகண்ட் பார்ட்டில் லீடாக வித்யாபாலன் நடிப்பாரா அல்லது வேறு யாரேனும் நடிக்க உள்ளனரா என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும். முதல் பாகம் இந்தியில் மட்டும் எடுக்கப்பட்ட நிலையில், சமீபத்திய பேன்இந்தியா ட்ரெண்டிற்கு ஏற்ப செகண்ட் பார்ட் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாம்.
போதைக்கு "நோ'!
"புஷ்பா' வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் லைன்அப் டைட்டாகியுள்ளது. இதுவரை டோலிவுட் நடிகராக அறியப்பட்ட அல்லுவிற்கு இந்திய ஸ்டார் அந்தஸ்து கொடுத்திருக்கிறது "புஷ்பா.' மோஸ்ட் வாண்டட் நடிகராகிவிட்ட பிறகு, சினிமா வாய்ப்பு மட்டுமின்றி அவருக்கு விளம்பர வாய்ப்புகளும் குவிகிறதாம். அந்த வகையில், குட்கா, பான்மசாலா நிறுவனம் ஒன்று தங்களுடைய விளம்பரத்தில் நடிக்க அல்லு அர்ஜுனை அண்மையில் அணுகியிருக்கிறது. ஆனால், அவர் மறுத்துவிட்டாராம். முன்னதாக, போதைப்பொருட்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்க யாஷ், சிம்பு மறுத்த நிலையில், தற்போது அல்லு அர்ஜுனும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறார்.
மீண்டும் லூசிபர்!
ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் "லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான முதல் படமே ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் நடிக்க வந்த சில வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு, இரண்டாம் பாகத்திற் கான வேலைகளில் ஈடுபட்டுவந்தார். இந்த நிலையில், செகண்ட் பார்ட்டிற்கான வேலைகள் தொடங்கிவிட்டதாக படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு ’"எம்புரான்'’ என பெயர் வைத்துள்ளனர்.
வெல்கம் டார்லிங்!
கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவர் பேபி அனிகா. மல்லுவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, தமிழில் "என்னை அறிந்தால்', "விஸ்வாசம்' படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்துப் பிரபலமானார். அவரது போட்டோஷூட்டுக்கும் சோசியல் மீடியாக்களில் எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு. இனி அனிகா குழந்தை நட்சத்திரம் இல்லையாம். தற்போது அவர் ஹீரோயினாகிவிட்டார் என்பதுதான் லேட்டஸ்ட் நியூஸ். ஆல்ஃப்ரெட் சாமுவேல் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் "ஓ மை டார்லிங்' படத்தில்தான் அவர் ஹீரோயினாக நடிக்கிறார்.
-இரா.சிவா