ஏ.ஆர்.முருகதாஸ் -விக்ரம் கூட்டணி!
"மகான்' படத்தைத் தொடர்ந்து "கோப்ரா' மற்றும் "பொன்னியின் செல்வன்' படங்களின் பணிகளை முடித்துள்ள விக்ரம், அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். விக்ரமின் 61-வது படமான இது, விளையாட்டை மையப்படுத்திய படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், விக்ரமின் 62-வது படம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி யுள்ளது. அதன்படி, பா.ரஞ்சித்தின் படத் தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக் கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் "தர்பார்' படத்தை இயக்கியிருந்த முருகதாஸ், தனது அடுத்த படம் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்துவந்தார். இந்நிலையில், தற்போது அவர் தயார் செய்துள்ள கதை ஒன்றை விக்ரமுக்கு சொல்லியிருக்கிறார். விக்ரமுக்கு இந்த கதை பிடித்துப்போகவே, அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். பா.ரஞ்சித் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு இப்படத்தில் விக்ரம் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.
மீண்டும் பிரபாஸ்-அனுஷ்கா!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருந்து வந்த அனுஷ்கா, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்துவந்தார். "பாகுபலி' படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான அவருக்கு, அடுத்தடுத்து வெளியான "பாகமதி', "நிசப்தம்' உள்ளிட்ட படங்கள் கைகொடுக்க வில்லை. அதேநேரம் உடல் எடை தொடர்பான பிரச்சினையாலும் படங்களில் நடிப்பதை அனுஷ்கா தவிர்த்துவந்தார். படங்கள் ரிலீசாகி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம் அவர். இளம் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள அனுஷ்கா, அடுத்ததாக பிரபாஸுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளி யாகியுள்ளன. தற்போது "சலார்', "ஆதிபுருஷ்', "ப்ராஜெக்ட் கே' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்திவரும் பிரபாஸ், அடுத்ததாக இயக்குநர் மாருதி இயக்கத்தில் "ராஜா டீலக்ஸ்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில்தான் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளாராம். ஏற்கனவே பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியான "பாகுபலி', "மிர்ச்சி' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்ற சூழலில், இப்படத்திலும் இந்த சூப்பர்ஹிட் ஜோடியை ஒன்றாக நடிக்க வைக்கப் படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.
அசுர வேகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். "டாக்டர்' வெற்றியைத் தொடர்ந்து, தற்போது "டான்' படத்தில் நடித்து முடித்துள்ளார் இவர். அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், கல்லூரியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ளது. இந்நிலை யில், மே 13-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை உதயநிதியின் "ரெட் ஜெயண்ட் மூவீஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. "காத்துவாக்குல ரெண்டு காதல்', "பீஸ்ட்', "விக்ரம்' என பல முன்னணி நடிகர்களுடைய படங்களின் வெளியீட்டு உரிமைகளைக் கைப்பற்றியுள்ள "ரெட் ஜெயண்ட் மூவீஸ்', தற்போது சிவகார்த்திகேயனின் இந்த படத்தையும் கைப்பற்றியுள்ளது.
புதிய கெட்டப்பில் அஜித்!
அஜித்தின் 61-ஆவது படத்தையும் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கவுள்ளார். சதுரங்க வேட்டை பாணியில் எடுக்கப்படவுள்ள இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. சென்னை யின் அண்ணாசாலை உள்ளிட்ட பல இடங்களில் இக்கதை நடப்பது போல காட்சிகள் உள்ளதால், இதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இப்படத்திற்காக அஜித் உடல் எடையைக் குறைத்து, நீளமான தாடி வளர்த்து புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார். அஜித்துக்காக முதன்முதலில் வினோத் சொன்ன கதை இதுதான் என தகவல்கள் வெளியாகியுள்ளதால், இது ஒரு அக்மார்க் வினோத் படமாக இருக்கும் என இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது. அதேபோல நீண்ட காலத்துக்குப் பிறகு நெகட்டிவ் ஷேட் கொண்ட கேரக்டரில் அஜித் நடிக்க உள்ளதும் ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு எதிர்பார்ப்பு களுக்கு இடையே, இம்மாத மத்தியில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தற்போது அஜித் ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். செட் அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழு, இந்த பணிகள் முடிந்ததும் முழு வீச்சில் படப்பிடிப்பைத் தொடங்க வுள்ளதாம்.
-எம்.கே.