ரஜினி பட எக்ஸ்க்ளுசிவ்!
"காலா'வின் வெற்றிச் செய்தியுடன் "சன் பிக்சர்ஸ்' கலாநிதி மாறன் தயாரிக்கும் அடுத்த படத்திற்காக, மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் டேரா போட்டிருக்கிறார் ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷன் பண்ணும் இப்படத்தின் பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். (விஜய்யின் ‘"சர்கார்'’ டைட்டிலுக்குப் போட்டியாக ரஜினியின் புதுப்படத்திற்கு ‘"சக்கரவர்த்தி'’ என டைட்டில் வைக்கலாம் என்கிற பேச்சு பலமாக அடிபடுகிறது)
டைட்டிலைவிட, இப்போதைக்கு இரண்டு முக்கிய செய்திகளில் முதல் செய்தி. தொடர்ந்து 40 நாட்கள் நடக்கும் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து 1500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்-நடிகைகள் டார்ஜிலிங் சென்றுள்ளனர். முதல் மூன்று நாட்கள் நடித்தவர்களில் முக்கால்வாசிப் பேர், நான்காம் நாளிலிருந்து அங்குள்ள குளிருக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னைக்கே திரும்பிவிட்டனராம். அசராத தயாரிப்பு நிர்வாகிகளோ, பெங்கால் சினிமா லேபர் யூனியனிலிருந்தும் பக்கத்து மாநில யூனியனிலிருந்தும் தொழிலாளர்களை இறக்கி, ஷூட்டிங்கை ஜரூராக நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
இரண்டாவது செய்தி. இப்படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறாராம் ரஜினி. இவருக்கு மனைவி சிம்ரன், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஷூட்டிங் தங்கு தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக, இரண்டு பெரிய கல்லூரிகளை 40 நாட்களுக்கு வாடகைக்குப் பேசிவிட்டதாம் சன் பிக்சர்ஸ்.
"சர்கார்'’ நிஜ ஃபைட் நியூஸ்!
அதே "சன் பிக்சர்ஸ்' கலாநிதி மாறன் தயாரிப்பில், முக்கால்வாசி முடிந்துவிட்ட படம் விஜய்யின் ‘சர்கார். பக்கா அரசியல் கதையான இதை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ட் பண்ணி வருகிறார். நிஜ அரசியல்வாதிகளான பழ.கருப்பையாவும் ராதாரவியும் படத்திலும் விஜய்யுடன் மோதும் அரசியல்வாதிகளாக வருகிறார்கள். படத்தின் சில காட்சிகள் சமீபத்தில் லீக்கானது. ஆனால் வெளியே லீக்காகாத நியூஸ் இது.
ஹீரோ விஜய்யை வில்லன் ஆட்கள் பைக்கில் துரத்துவது போல சேஸிங் சீன்களை சென்னையின் பல பகுதிகளிலும் பத்து நாட்களாக, இரவு நேரத்தில் படமாக்கினார்கள். பைக் சேஸிங்கிற்கு ஏராளமான இளைஞர்கள் தேவைப்பட்டதால், சென்னை -சட்டக் கல்லூரி மாணவர்களை ஏற்பாடு செய்துள்ளனர். ஸ்டண்ட் நடிகர்களுடன் இணைந்து மாணவர்களும் சேஸிங் சீனில் மிரட்டலாக விரட்டியுள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் ஒருநாள் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, ஸ்டண்ட் நடிகர்கள் சிலர், “"நாங்கெல்லாம் காலம் காலமா உயிரைக் கொடுத்து நடிச்சிக்கிட்டிருக்கோம். நீங்க என்னடான்னா முன்னூறு, நானூறு ரூபாயை வாங்கிக்கிட்டு, முன் வரிசையில வந்து நிக்கிறீங்களா, போங்க பின்னாடி'’என மாணவர்களைப் பார்த்து வார்த்தைகளை வீசியதும், டென்ஷனான மாணவர்கள் பதிலுக்கு சவுண்ட்விட்டபடியே, யூனிட் வேன்கள் மீதும் செட் பிராபர்ட்டிகள் மீதும் சரமாரியாக கற்களை வீசி, ஏக ரணகளம் பண்ணிவிட்டார்களாம்.
அன்றையதினம் ஸ்பாட்டில் விஜய் இல்லாததால் நிலவரம் கலவரமாகிவிட்டதாம். பதறியடித்தபடி ஓடி வந்த தயாரிப்பு நிர்வாகிகள் பெரும்பாடுபட்டு, மாணவர்களை சமாதானப்படுத்தினார்களாம். ஸ்பாட்டில் டைரக்டர் முருகதாஸும் ஸ்டண்ட் மாஸ்டரும் இருந்தும் இருட்டில் பம்மிவிட்டார்களாம்.
விஷால் குழப்ப நியூஸ்!
சமீபத்தில் ரிலீசான "இரும்புத்திரை'யின் பிஸினஸ் ரிசல்ட் ஓ.கே. என்றாலும் சுணக்க மனநிலையிலேயே இருக்கிறாராம் விஷால். லிங்குசாமி டைரக்ஷனின் "சண்டக்கோழி-2'வை தயாரித்து வருகிறார் விஷால். மதுரையின் கிராமத்தை, சென்னை -பின்னி மில்லில் செட் போட்டு, இரண்டுகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்தது.
"அடுத்ததாக காரைக்குடி ஏரியாவில் படப்பிடிப்பு நடத்த வேண்டும்... எப்ப கிளம்பலாம்?' என லிங்குசாமி கேட்கும்போதெல்லாம், "இந்த வாரம் கிளம்புவோம், அடுத்த வாரம் கிளம்புவோம்' எனச் சொல்லியே இரண்டு மாதங்களை கடத்திவிட்டாராம் விஷால். இவரின் நாள் கடத்தலால், மற்ற நடிகர்களின் கால்ஷீட்டும் வீணாகிக்கொண்டிருக்கிறதாம்.
"என்னன்னு தெரியல... கொஞ்ச நாளாவே சைலண்ட் மோடுலேயே இருக்காரு விஷால். நடிகர் சங்கத்துலயும் தயாரிப்பாளர்கள் சங்கத்துலயும் தலைமைப் பொறுப்புல இருக்குறதால, ஏகப்பட்ட குடைச்சல்கள், பஞ்சாயத்துகள். மதுரை அன்புகிட்ட பட்ட கடன் வேற பாடாப்படுத்துது. எல்லாம் சேர்ந்த மனக் குழப்பமா, பணக் குழப்பமான்னு புரியல'’என்கிறது விஷாலின் நட்பு வட்டம்.
வரலட்சுமியின் லேட்டஸ்ட் நியூஸ்!
ஜூன் மாசம் முடியப்போற நேரத்திலும் சென்னையில எகிறி அடிக்குது வெய்யிலு. ஆனா வரலட்சுமியின் காட்டிலோ அடைமழைதான். ‘"வெல்வெட் நகரம்',’"சண்டக்கோழி-2', விஜய்யின் ‘"சர்கார்'’என கைவசம் ஒன்பது படங்கள் வைத்திருக்கிறாராம் வரலட்சுமி. லேட்டஸ்டாக ‘"ராஜ பார்வை'’படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக வரலட்சுமி நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். "ராஜ பார்வை'’டைட்டிலைப் பெற கமலிடம் அப்ளிகேஷன் போட்டிருக்கிறார்களாம்.
-ஈ.பா.பரமேஷ்வரன்