தாதா சாகேப் சூப்பர் ஸ்டார்!
67-ஆவது தேசிய திரைப்பட விருது விழா அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளருக்கான "தாதா சாகேப் பால்கே' விருதும் வழங்கப்பட்டது. தமிழ் திரைத்துறையில் சிவாஜிகணேசன் மற்றும் இயக்குநர் பாலசந்தருக்குப் பிறகு இந்த விருதினைப் பெறும் மூன்றாவது நபர் ரஜினிதான்.
இதுதவிர, தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களுடன், படங்களும் விருதுகளைத் தட்டிச்சென்றன. அதன்படி, சிறந்த தமிழ்ப்படமாக "அசுரன்' தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதற்கான விருதினை துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இருந்து தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் பெற்றுக்கொண்ட னர். அதேபோல, சிறந்த படத்திற் கான நடுவர் குழுவின் விருதினை பார்த்திபனின் "ஒத்த செருப்பு' படம் தட்டிச் சென்றது. மேலும், இப்படத்திற்காகச் சிறந்த ஒலி அமைப்புக்கான தேசிய விருதினை ரசூல் பூக்குட்டி வென்றார்.
இந்த இரண்டு படங்களைத் தவிர, தமிழ் திரையுலக கலைஞர்கள் பலரும் தேசியளவிலான விருதுகளை இவ்விழாவில் பெற்றனர். அதன்படி, இந்திய அளவில் சிறந்த நடிகருக் கான விருதினை மனோஜ் பாஜ்பாயுடன் பகிர்ந்துகொண்டார் நடிகர் தனுஷ். இதனைத் தவிர, சிறந்த துணை நடிகருக்கான விருதினை "சூப்பர் டீலக்ஸ்' படத்திற்காக விஜய் சேதுபதியும், சிறந்த இசையமைப் பாளருக்கான விருதினை "விஸ்வாசம்' படத்திற்காக டி.இமானும் வென்றனர். "மணிகர்ணிகா' மற்றும் "பங்கா' படங்களுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்கரில் தமிழ்ப் படம்!
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படமான "கூழாங்கல்' இந்தியா சார்பில் ஆஸ்கருக்கான ரேஸில் கலந்துகொள்ள உள்ளது. அறிமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றிருந்த நிலையில்... தற்போது இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு போட்டியிட இப்படம் தேர்வாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கருக்கான இந்தியாவின் பரிந்துரைப் பட்டியலில் மொத்தம் 14 படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 15 பேர் கொண்ட தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். யோகிபாபுவின் "மண்டேலா', "சர்தார் உத்தாம்', ‘"ஷேர்னி', "நாயாட்டு'’உள்ளிட்ட 14 திரைப்படங்கள் அடங்கிய இந்த பட்டியலில் இருந்து இப்படத்தைத் தேர்வு செய்துள்ளது நடுவர் குழு. தன்னுடனான பிரச்சினை காரணமாகத் தாய் வீட்டிற்குச் சென்ற மனைவியைத் திரும்ப அழைத்து வருவதற்காக நாயகனும் அவரது மகனும் மேற்கொள்ளும் பயணமே இப்படத்தின் கதையாம். ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான’ பிரிவில் ஆஸ்கருக்கான போட்டியில் இருக்கும் இப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"மாநாடு' எப்போது?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள "மாநாடு'’படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்... படத்தின் ரிலீஸை நவம்பர் 25-ஆம் தேதிக்குத் தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அறிவித்தார்.
"மாநாடு'’ திரைப்படம் தீபாவளி வெளியீட்டி லிருந்து பின்வாங்கியது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், சிம்புவின் பட வெளியீட்டுக்குச் சிலர் நெருக்கடி கொடுப்பதாக சிம்புவின் தந்தையும் நடிகருமான டி. ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ராஜேந்தர் இரு வரும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அண் மையில் புகார் ஒன்றை அளித்தனர். புகாரளித்த பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீதும், தமிழ்த் திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த அருள்பதி என்பவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், இதற்கு நேர்மாறாக நடிகர் சிம்பு, டி.ராஜேந்தர், உஷா டி.ராஜேந்தர் ஆகியோர் மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், "நடிகர் சிம்பு நடித்த ‘"அன்பானவன், அசராதவன், அடங்காதவன்'’ படத்தின் மூலம் நான் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளேன். "மாநாடு' திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடத் தடை விதித்திருப்ப தாகவும், மாஃபியா போல் மாமூல் கேட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் பொய்யான குற்றச்சாட்டை டி.ராஜேந்தர் அளித்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி "மாநாடு' படம் வெளியீடு தள்ளிப் போனதற்கான காரணத்தைக் கூறிய நிலையில், அவர்கள் என் மீது தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளனர். நடிகர் சிம்பு பொய்யான உறுதியளித்து ஏமாற்றி, என்னை நஷ்டத்தில் தள்ளிவிட்டார். இதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். பழைய பாணியிலிருந்து மெல்ல மாறி, தற்போது படம் நடிப்பதில் சிம்பு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ள சூழலில்... சிம்புவை சுற்றி எழுந்துள்ள இந்த புதிய சர்ச்சை அவரது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளதாம்.
-எம்.கே.