செல்வி... நீ ஜெயிச்சிட்ட
ஆக்ஷன் ஹீரோவான ரஜினி... தனது ஆரம்பகால சினிமாக்களில் டைரக்டர்களின் நடிகராக இருந்தார். மிக நீண்ட வருடங்களுக்குப்பின்... "காலா'வில் டைரக்டரின் நடிகராக... "காலா'வாகவே நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.
"காலா' ரஜினியை ரசித்து மகிழ்பவர்கள்... அதற்கு இணையாக "செல்வி' கதாபாத்திரத்தையும் சிலாகித்து மகிழ்கிறார்கள்.
1990-ல் "கவிதைபாடும் அலைகள்' படம் மூலம் "ஜனனி' என்கிற பெயரில் சினிமாவில் அறிமுகமானவரை 1997-ல் "ராமன் அப்துல்லா' படம் மூலம் ஈஸ்வரி ராவ் என்கிற பெயரில் மறு அறிமுகம் செய்து வைத்தார் பாலு மகேந்திரா.
நல்ல நடிப்புத் திறமை இருந்தபோதும்... "கருவாச்சி' என்பதால்... கதாநாயகியாக ஈஸ்வரி ராவுக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. பல படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நடித்திருந்தாலும்... 12 வருடங்களாக சினிமாவில் நடிக்காமலிருந்த ஈஸ்வரி ராவ்... தன்னைத் தேடி வந்த "காலா' வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஸ்கோர் செய்திருக்கிறார்.
இதை நாம் சொல்லவில்லை. ரஜினியே ஈஸ்வரி ராவ்விடம் தெரிவித்திருக்கிறார்.
""நான் ரெண்டு வாட்டி "காலா' படம் பார்த்திட்டேன். உன்னோட நடிப்பு பிரமாதம். நீ ஸ்கோர் பண்ணீட்டே'' என ஈஸ்வரி ராவ்வை பாராட்டியிருக்கிறார் சிவாஜி ராவ்.
உள்ளமெல்லாம் வெகுளித்தனம்... ஆனாலும் உடல் மொழியில் ஓர் அலட்சிய பாவம்... என "செல்வி'யாக வாழ்ந்திருக்கிறார் ஈஸ்வரி ராவ்.
காலா-செல்வி இடையேயான முதிர்ந்த காதல் சுவாரசியமானதாக இருக்கிறது.
பழைய காதலி ஹூமா குரோசிக்கு "காப்பியில் சீனி கம்மியாக போடச் சொல்லி' ரஜினி சொல்லும்போது... ஈஸ்வரி ராவ் ஒரு பார்வை பார்ப்பதும், ரஜினி அந்த பார்வைக்கு பம்முவதும் அசத்தலான கட்டம்.
ஹூமாவை ரஜினி சந்தித்துவிட்டு... "இப்ப என் மனசு முழுக்க செல்விதான் இருக்கா' எனச் சொல்லிவிட்டு வரும் ரஜினியிடம்... "படிக்கிற காலத்தில் தன்னையும் ஒருவன் காதலித்ததாகவும், அவனைப் பார்க்கப் போவதாகவும்' ஈஸ்வரி ராவ் காட்டுகிற பொய்க்கோபம்... அழகு... அன்பின் உச்சம்.
மகன் வீட்டைவிட்டு வெளியேறுகிறபோது... மகனுக்காக பரிந்துபேசுவதுபோல் பேசி... கணவனை விட்டுக்கொடுக்காத அந்த இடமும்... அழுத்தமான காதலின் வெளிப்பாடு.
ஒப்பனையில்லாத முகமும், வெடிப்பாக வசனம் பேசுகிற பாணியும் ஈஸ்வரி ராவ்வை... "காலா' படம் பார்க்கிற ஒவ்வொருவர் மனதிலும் உட்காரச் செய்துவிடும்.
ரஜினியின் "லவ் யூ'வை காதுகளைப் பொத்திக்கொண்டு ரசிக்கிற வேளையில் அவர் கொல்லப்படுவது ரசிக மனசுகளை பதற வைக்கிறது.
"செல்வி கொல்லப்பட்டிருக்க வேண்டுமா?' என்கிற பரிதவிப்பு பெண் ரசிகைகளின் மனதில் பெரும் கேள்விகளாக எழுந்திருப்பதே... ஈஸ்வரி ராவ்வின் நடிப்பிற்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.
செல்வி நீ ஜெயிச்சிட்டே!
மச்சினன்டா...!
படம் நெடுக "காலா'வுடனேயே பயணிக்கும் வள்ளியப்பனும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
"காலா'வில் ரஜினியும், வள்ளியப்பனாக சமுத்திரக்கனியும் சேர்ந்து நடித்த முதல் நாள் காட்சி எடுக்கப்பட்டதும்... தன் வீட்டுக்கு போன் செய்த சமுத்திரக்கனி... ""சினிமாவில் எனக்கு இந்தப் பெருமை போதும். இனிமே கிடைக்கிற பெருமைகளும், வாய்ப்புகளும் எனக்கு போனஸ்தான்'' எனச் சொல்லி மகிழ்ந்தார்.
அவர் சொன்னபடியே... சரக்கும், சரக்கும்’கொண்ட வள்ளியப்பனாக வந்து வசீகரித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
தமிழர்களின் உணவாக முன்பு... கள் இருந்ததை தன் அக்கா ஈஸ்வரி ராவ்விடம் சொல்லும் காட்சிகள் ரகளை.
"மலைக்குப் போனாலும் மச்சினன் துணை வேணும்' என்பது சொல்வழக்கு. "காலா' என்கிற மலைக்கு மச்சினனாக தனக்குத் தரப்பட்ட வாய்ப்பில் சிறப்புடன் பரிணமித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
-ஆர்.டி.எ(க்)ஸ்