தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்து... புதுப்படங்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன. ஸ்டிரைக்கால் ரிலீஸாகாமல் இருந்த சுமார் இருபது படங்கள் ரிலீஸுக்கு அணிவகுக்க... இந்த அணிவகுப்பில் கமலின் "விஸ்வரூபம்-2'ம், ரஜினியின் "காலா'வும் இருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் ஓர் உறுதியான முடிவை எடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.
ஒரு தயாரிப்பாளர் தனது படம் இப்போது வெளியாக வேண்டாம் என பின்வாங்கலாமே தவிர... மற்றபடி ரிலீஸுக்கு ரெடியான சீனியாரிடிப்படிதான் வெளியாக வேண்டும். அதிலும் வாரத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே வெளியாக வேண்டும்... என்பதுதான் அந்த முடிவு.
இதனால்தான் "ஏப்ரல் 27-ந் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட "காலா' படம்... நாற்பது நாட்கள் தாண்டி, ஜுன் 7-ந் தேதி வெளியாகும்' என அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால் "காலா'வுக்கு முன் கமலின் "விஸ்வரூபம்-2' வெளியாக வேண்டும். ஆனால் "காலா'வுக்குப் பிறகு "விஸ்வரூபம்-2'வை வெளியிட கமல் திட்டமிடுகிறார்.
மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டனர்.
அந்த நிர்வாகிகள் தமிழகத்திலுள்ள 59 ஆயிரம் வாக்குச் சாவடிகளுக்கு ஒரு வாக்குச் சாவடிக்கு ஐந்து பேர் வீதம் கொண்ட பூத் கமிட்டியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
கமல் தனது "மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு இன்னும் பொறுப்பாளர்களை நியமிக்கவில்லை. தனது கமல் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகளிலிருந்து மாவட்டத்துக்கு ஒருவரைத் தேர்வு செய்து... அவர்களை மாவட்ட பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறார். அவர்கள் உறுப்பினர் சேர்க்கையில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள். முடிந்த அளவு உறுப்பினர்களைச் சேர்த்த பிறகுதான் கட்சி நிர்வாகிகள் நியமனம் என்பதில் உறுதியாக உள்ளார் கமல்.
செக்ஸ் குற்றச்சாட்டுகளைக் கூறி... தெலுங்கு சினிமா உலகை மிரள விட்டுக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
"தன் கணவர் நடிகர் டாக்டர் ராஜசேகருக்காக அவரின் மனைவி நடிகை ஜீவிதா, இளம்பெண்களை ஏற்பாடு செய்தார்' என சமூக சேவகி ஒருவர் கூறிய குற்றச்சாட்டு... ஜீவிதா மறுப்புத் தெரிவித்த நிலையில்... "அம்புட்டுக்கும் என்கிட்ட ஆதாரம் இருக்கு' என ஸ்ரீரெட்டி போட்டுத் தாக்கியிருக்கிறார்.
இதனிடையே... "சேனலுக்குப் போனால் செய்திதான் கிடைக்கும். கோர்ட்டுக்குப் போனால்தான் நீதி கிடைக்கும்' என பிரபல ஹீரோவும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் அட்வைஸ் செய்தார் ஸ்ரீரெட்டிக்கு.
இதை ஏற்காத ஸ்ரீரெட்டி "பவனை அண்ணனாக நினைத்த என் புத்தியை...' என தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டதுடன்... பவனை கடுமையாக விமர்சித்தார். இதனால் பொங்கி எழுந்த பவன் ரசிகர்கள்... ஸ்ரீரெட்டிக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள்.
""என்னோட செல்வாக்கை சரிக்க... பத்து கோடி ரூபாய் அளவில் பேரம் நடந்துள்ளது'' என பவன் ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்