இயக்குநர் ஷங்கர், தற்போது கமல்ஹாசன் நடிக்கும் "இந்தியன் 2' படத்தையும் ராம் சரண் நடிக்கும் "ஆர்.சி. 15' படத்தையும் இயக்கிவருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்புகள் மாறி, மாறி ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குநர் ஷங்கர், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளாராம். பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருடன் ரன்வீர்சிங்கும் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது.
ஏற்கனவே ஷங்கரும், ரன்வீர்சிங்கும் "அந்நியன் 2' படத்திற்காக கைகோர்த்தனர். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக அப்படம் கைவிடப்பட்டது. இப்படத்தின் மூலம் மீண்டும் ரன்வீர்சிங், ஷங்கருடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்... அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அப்செட் சமந்தா!
தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து இந்தியிலும் தனது மார்க்கெட்டை உயர்த்த முயற்சி செய்து வரும் சமந்தா, தற்போது மிகவும் கவலையில் உள்ளாராம். ஏனென்றால், சமீபகாலமாக தசை அலர்ஜி நோயால் மிகவும் அவதிப்பட்டுவரும் சமந்தா, அதிலிருந்து மீண்டு வர சிகிச்சை பெற்று வருகிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி னாலும், சமூக வலைத்தளங்களில் அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவருகிறது. இந்நிலையில் இதுகுறித்து கவலைப்பட்டுள்ள சமந்தா, "சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருக்கும். சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பதுகூட கடினமாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் இப்போது திரும்பி பார்க்கும்போது நான் இவ்வளவு தூரத்தையா கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். ஆனால், எனது உடல்நிலை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை, நன்றாகத்தான் இருக்கிறேன். அதனால் வதந்திகளை யாரும் பரப்பாதீங்க ப்ளீஸ்...''’என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
விஷ்ணுவர்தனுக்கு ஜாக்பாட்!
எச்.வினோத், இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் "துணிவு'. இப்படம் அடுத்தாண்டு பெங்கலுக்கு வெளியாகவுள்ளதால், இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன், இயக்கும் "ஏ.கே. 62' படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வுள்ளது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் "ஏ.கே. 63' படத்தை யார் இயக்கு வார் என்ற கேள்வி எழுந்த வந்த நிலையில்... அதனை சிறுத்தை சிவா இயக்குவார் என தகவல் வெளியானது. ஆனால் இப்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி "ஏ.கே. 63' படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளார். சமீபத்தில் அஜித்தை சந்தித்து விஷ்ணுவர்தன் ஒரு கதை சொல்லியுள்ளதாகவும், அந்த கதை அஜித்திற்கும் பிடித்துபோக உடனே கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறாராம். இதற்கு முன்னால் இவர்கள் கூட்டணியில் வெளியான "பில்லா', "ஆரம்பம்' ஆகிய இரு படங்கள் அஜித் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம்பிடித்துள்ள நிலையில், மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக கிடைத்த தகவல், அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
யோகமுள்ள யோகிபாபு!
தமிழ் சினிமாவில் டாப் காமெடியனாக வலம்வரும் யோகிபாபு, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துவருகிறார். ரஜினியுடன் "ஜெயிலர்', விஜய்யின் "வாரிசு' இதுபோக பாலிவுட்டில் ஷாருக்கானின் "ஜவான்' படம் என அவரது லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.
இப்படி கோலிவுட், பாலிவுட் என டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு, தற்போது டோலிவுட்டிலும் ஒரு டாப் ஹீரோ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம். அந்த டாப் ஹீரோ வேறு யாருமில்லை, இப்போது இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் பிரபாஸ் தானாம். இது குறித்து விசாரித்தபோது, தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் காமெடியனாக யோகிபாபு கால் பதித்துள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்க படத்தின் படப்பிடிப்பை சத்தமே இல்லாமல் படக்குழு எடுத்து வருகிறது. தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான யோகிபாபு இப்படத்தின் மூலம் தெலுங்கிலும் பிரபலமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கவிதாசன் ஜெ.