டப்பிங் நம்பிக்கை!
2013-2016 கால கட்டத்தில் திரையுலகில் உச்சத்தில் இருந்த ஸ்ரீதிவ்யா, அதன்பிறகு காணாமல் போனார். இதனால் மார்க்கெட் இழந்த அவர், மீண்டும் அதைப் பிடிக்க கடந்த ஆண்டு வெளியான விக்ரம் பிரபுவின் "ரெய்டு' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் அந்தப் படம் வந்த சுவடே தெரியவில்லை. இதனால் மனமுடைந்த ஸ்ரீதிவ்யா, எப்படியாவது இழந்த மார்க்கெட்டை பிடித்து விடவேண்டும் என்று தீவிர முனைப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் புது முயற்சியாக அவர் தற்போது நடித்துள்ள "மெய்யழகன்' படத்தில் அவரே முதல் முறையாக டப்பிங் பேசியுள்ளார். இந்த கதாபாத்திரம் தன்னை ரசிகர்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, கார்த்திக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். "96'’ பிரேம்குமார் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் செப்டம்பர் 27-ல் படம் வெளியாகவிருக்கிறது.
ஸ்ரீலீலா பாஸ்!
"சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கை தொடர்ந்து, சூர்யாவை வைத்து தான் இரண்டாவது முறையாக இயக்க விருந்த "புறநானூறு'’படத்தை சற்று தாமதமாக ஆரம்பிக்க வுள்ளார் சுதா கொங்கரா. இப்படத்தில் சூர்யாவிற்கு பதில் சிவகார்த்தியேனை கமிட் செய்துள்ள சுதா கொங்கரா, டிசம்பரில் இருந்துதான் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார். அதனால் தற்போது நடிகர், நடிகைகள் தேர்வுப் பணிகளை வேகப்படுத்தி வரும் அவர், சமீபத்தில் லோகேஷ் கனகராஜை வில்லனாக நடிக்க வைக்க ஓ.கே. வாங்கியிருந்தார். ஆனால் கதாநாயகியாக ஷங்கரின் மகளான அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அது சுமூகமாக முடியவில்லை. இதனால் வேறு இளம் நடிகையை தேடிவந்த அவர், தற்போது தெலுங்கில் இளம் நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலாவை கமிட் செய்துள்ளார். அவரை வைத்து சமீபத்தில் படத்திற்கான டெஸ்ட்ஷூட் நடத்தியுள்ளார். அதில் ஸ்ரீலீலா பாஸாகியுள்ளதால் அவரையே கதாநாயகியாக கமிட் செய்துள்ளார். ஏற்கனவே சூர்யா கமிட்டான சமயத்தில் இப்படத்திற்காக துல்கர்சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய்வர்மா ஆகியோரிடம் சுதாகொங்கரா ஓ.கே. வாங்கி வைத்திருந்தார். அவர்களும் தற்போது இப்படத்தில் தொடர்வார்களா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது. விரைவில் அதுகுறித்து சுதாகொங்கரா விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயா குத்து!
ரஜினி, விஜய், விக்ரம் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் ஸ்ரேயா. ஆனால் திருமணத்திற்கு பிறகு தமிழில் கவனம் செலுத்தவில்லை. தெலுங்கு மற்றும் இந்தியில் அதிக கவனம் செலுத்திவந்தார். இந்த நிலையில் மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். ஆனால் கதாநாயகியாக அல்ல. குத்துப் பாட்டு நாயாகியாக. சூர்யா தற்போது நடித்து வரும் அவரது 44-வது படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளார் ஸ்ரேயா. தமிழ் ரசிகர்கள் தன்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படத்தில் நடனமாடியுள்ளாராம். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடந்து முடிந்துள்ளது. இந்த பாடல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறது படக்குழு. பாடலை முடித்த கையோடு தற்போது கேரளாவில் படப்பிடிப்பை நடத்திவருகிறது படக்குழு. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக பூஜாஹெக்டே நடிக்கிறார்.
ரசிகர்கள் அப்செட்!
சிறுத்தை சிவா -சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் "கங்குவா' படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்பு ரஜினி -த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ள "வேட்டையன்' படமும் அதே அக்டோபர் 10ஆம் தேதியில் வெளியாக வுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஒரே தேதியில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வருவதால் ரசிகர்கள் கொண்டாட்டமாக இருந்தனர். ஆனால் சூர்யா தரப்போ, சீனியர் படம் என்பதால் தள்ளிப் போய் வேறு ரிலீஸ் தேதிக்கு வரலாமா என்று யோசித்து வந்தனர். இதுகுறித்து படக்குழு தரப்பில் விசாரித்தால், படத்தை தள்ளி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள், ரஜினி மீது மரியாதையுள்ள காரணத்தால் இதை செய்துள்ளதாக சொல்கிறார்கள். மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ரஜினி படத்துடன் தனது படம் மோதுவதில் விருப்பமில்லை. ஏனென்றால் அவர் தீவிர ரஜினி ரசிகர் என்கிறார்கள். இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருக்கின்றனர். காரணம், சூர்யா நடிப்பில் கடந்த இரண்டு வருடமாக எந்த படமும் வெளி யாகவில்லை. கேமியோ ரோலில் நடித்த "விக்ரம்', "ராக்கெட்ரி' போன்ற படங்கள் மட்டுமே வெளியாகி யிருந்தது.
-கவிதாசன் ஜெ.