trisha

சம்பளம் இத்தனை கோடியா?

Advertisment

ஒவ்வொரு வருடமும் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகைகள் பற்றிய பட்டியலை "போர்ப்ஸ்' பத்திரிகை, 2024-ம் ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. அதில் தீபிகா படுகோன் முதலிடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அடுத்து கங்கனா ரனாவத் ரூ.15 கோடி முதல் ரூ.27 கோடி, பிரியங்கா சோப்ரா ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி கேத்ரினா கைஃப் ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்குகிறாராம்.

தனுஷுடன் கைகோக்கும் விக்னேஷ்ராஜா!

Advertisment

தமிழ் சினிமாவில் தொடங்கி, இந்தி சினிமாவரை அரை டஜன் படங்களைக் கைவசம் வைத்திருக்கும் தனுஷ் கிடைக்கிற கேப்பில் படம் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தனுஷ் இயக்கி நடித்துள்ள "ராயன்'’திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. தற்போது தெலுங்கு இயக்குநர் சேகர்கமுலா இயக்கத்தில் பான் இந்தியா படமாக "குபேரன்'’படத்தில் நடித்து வரும் தனுஷ், அதற்கடுத்து இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கவுள்ளார். மேலும் வெற்றிமாறன், மாரிசெல்வராஜ், இந்தியில் ஆனந்த் எல்.ராய் என டாப் இயக்குநர்களுடன் அடுத்தடுத்த படங்கள் என தனுஷின் லைனப் நீண்டுகொண்டே செல்ல, தற்போது புதிதாக 'போர் தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்ராஜா சொன்ன ஒரு கதை, தனது நடிப்புக்குத் தீனிபோடும் வகையில் இருந்ததால் அதற்கும் உடனே ஓ.கே. சொல்லியுள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, தனது முந்தைய படங்களின் கமிட்மெண்டுகளை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

சிவகார்த்தி மனசுல விநாயக் சந்திரசேகரன்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் "அமரன்'’ படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார். இதனிடையே, தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் புதுமுக இயக்குநர்களின் படங்களைப் பார்த்துவிட்டு, உடனே அவர்களது திறமையைப் பாராட்டும் சிவகார்த்திகேயன், அவர்களின் அடுத்த படத்திற்காகத் தனது கால்ஷீட்டையும் கொடுத்துவருகிறார். அப்படி நெல்சன் தொடங்கி ராஜ்குமார் பெரியசாமிவரை பல புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன், தற்போது ‘"குட் நைட்'’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு அடுத்த படத்திற்கான கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்துவருவதால், படத்தின் ஆரம்ப பணிகளில் விநாயக் சந்திரசேகரன் தீவிரம்காட்டி வருகிறார்.

கேங்ஸ்டர் கதைக்களம்!

வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தமிழ் ‘"அசுரன்'’,‘"ஜெய்பீம்', "விடுதலை'’போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். கடந்த ஆண்டு வெளியான ‘"டாணாக்காரன்'’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தமிழ், முதல் படத்திலேயே வெற்றிமாறனை போன்றே ராவான கண்டெண்டைத் தேர்ந்தெடுத்து தமிழ்நாடு முழுவதும் சென்சேஷனல் ஆனார். காவல்துறையின் காட்டப்படாத பக்கங்களை ‘"டாணாக்காரன்'’ மூலம் அம்பலப்படுத்தியதால் தமிழுக்கு டிமாண்ட் அதிகரித்தது. இந்த நிலையில் கார்த்தியின் 30வது படத்தை இயக்கவுள்ளார் தமிழ். ஒரு அழுத்தமான கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக வைத்து, படம் உருவாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, படத்தின் அடுத்தகட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோலிவுட் கனவில் தர்ஷனா!

விஜய்சேதுபதியின் "கவண்'’படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தைப் பெற்ற மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன், அடுத்து ‘"இரும்புத்திரை'’ படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழில் படங்கள் இல்லாததால், மலையாள திரைத்துறைக்கே திரும்பிய தர்ஷனாவுக்கு, அங்கு ‘"இருள்', "ஹிருதயம்', "ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'’என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை கிடுகிடுவென உயர்த்தினார். "ஹிருதயம்’ படத்தில் அவரது நடிப்பு மலையாள ரசிகர்களையும் தாண்டி தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தது. தற்போது ‘"பரதா'’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தர்ஷணா கால் பதிக்கவுள்ளார். இந்தநிலையில் மீண்டும் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற ஆசை தர்ஷணாவுக்கு வர... பல தமிழ் இயக்குநர்களிடமும் கதைகேட்டு வருகிறாராம்.