தமிழக சட்டமன்ற அரசியலில் தங்கள் அதிரடிப் பேச்சுக்களால், தி.மு.க. வை சேர்ந்த இரகுமான்கான், துரைமுருகன், கா.சுப்பு ஆகியோர் இடி, மின்னல், மழை என்று கலைஞரால் பாராட்டப்பட்டனர். தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராகத் திகழ்ந்த இரகு மான்கானின் பேச்சுக்கள், இடி முழக்கம் போல் சட்டமன்றத் தையே அதிரச் செய்ததால் அப்படி பாராட்டப்பட்டார். எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில், 13 ஆண்டுகாலமாக தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்பட்டது. அத்தகைய சூழலில், தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தன்னம்பிக்கை இழந்துவிடாதபடி, தமிழக மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பது, ஆளுங்கட்சியின் தவறான செயல் பாடுகளை சுட்டிக்காட்டுவதென தி.மு.க. தீவிரமாக சட்டமன்றத்தில் இயங்கியதில் இரகுமான்கானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். தமிழக சட்டமன்றத்தில், 1977ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இரகுமான்கான் ஆற்றிய உரை களை பேராசிரியர் அ.முகமது அப்துல்காதர், இரகுமான்கானின் மகன் டாக்டர் அ.சுபேர்கான் ஆகியோர் தொகுத்ததை, "இடி முழக்கம்' என்ற தலைப்பில், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் நூலாக உருவாக்கியுள்ளது.
சட்டமன்றத்தில் இரகுமான்கான் ஆற்றிய உரை கள், அரசியல் சார்ந்த உரையாக மட்டுமல்லாமல், இலக்கிய நயம் கலந்தும் பேசியிருப்பதால் காலத்தால் அழியாததாகவும், சட்டமன்றத்தில் எப்படி உரையாற்ற வேண்டும், வாதிட வேண்டு மென்பதற்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள் ளது. தனது தொகுதிப் பிரச்சனை என்றில்லாமல், தமிழ்நாட்டிலுள்ள மக்களுக்காகவும், தமிழ் நாட்டுக்கு வெளியே மற்ற மாநிலங்களில் தமிழர் களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பாகவும் உரையாற்றியுள்ளார் இரகுமான்கான்.
1977 ஆகஸ்டு 26ஆம் தேதி, எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழ்நாடு அரசு, பொதுவாழ்க் கையில் ஈடுபடுவோர் மீதான புகார் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டம் குறித்து நடந்த சட்டமன்ற விவாதத்தில் நீண்ட உரையாற்றிய இரகுமான்கான், "அன்றைய தினம் அகலிகை, இராமன் பாதம் பட்டு புனிதமடைந்ததைப் போல, இன்றைக்குப் புகார் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக் கப்பட்டவர்கள் நம்முடைய, நான் யார் என்று சொல்லத் தயாராக இல்லை, யாரோ ஒரு இராமச் சந்திரன் பாதம்பட்டு இன்றைக்குப் புனிதமாகிக் கொண்டிருக்கிறார்கள்' என்று இராமாயணக் காட்சியோடு, எம்.ஜி.ஆரை மறைமுகமாக ஒப் பிட்டுப் பேசியது அவரது இலக்கியப் புலமைக்கும், நையாண்டிக்கும் சான்றாக அமைந்தது.
அதேபோல், 1979, பிப்ரவரி 17ஆம் தேதி, அரசியலமைப்பு 45வது சட்டத் திருத்தத்திற்கு ஏற்பளிப்பது குறித்து சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, அ.தி.மு.க. அரசின் இரட்டை நிலைப்பாட்டை தோலுரிக்கும் இரகுமான்கானின் காரசாரப் பேச்சு பரபரப்பை கிளப்பியது. "அன்றைய தினம் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தபோது, 42வது அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, அ.தி.மு.க. அதை ஆதரித்து வாக்குகளை வழங்கியது. இன்றைய தினமோ, 42வது சட்டத் திருத்தம் ஜனநாயகத்துக்கு விரோதமானது, ஜனநாயக உரிமைகளைப் பறிக்கவல்லது, எனவே அதை நீக்க வேண்டுமென்ற வகையில் கொண்டுவரப்பட்டுள்ள 45வது சட்டத் திருத்தத்தையும் அ.தி.மு.க. ஆதரிக்கிறது. அன்று இந்திராகாந்தியை ஆதரித்தது, இன்று மொரார்ஜி தேசாயை ஆதரிக்கிறது. அவர்களது சின்னம் இரட்டை இலை... அதனால் இரட்டை நிலை' என்று நையாண்டியாக இரகுமான்கான் பேசியது அ.தி.மு.க.வினரை கோபங்கொள்ளச் செய்தது.
பகுதிநேர கிராம அலுவலர் பதவிகளை நீக்க சட்ட முன்வடிவு குறித்து நடைபெற்ற விவாதத்தில், 1981ஆம் ஆண்டு, பிப்ரவரி 26ஆம் தேதி சட்டமன்றத்தில் பேசிய இரகுமான்கான், "24 ஆயிரம் கிராம அதிகாரிகளின் பதவியைப் பறித்துவிட்டு, நடுத்தெருவிலே நிறுத்திவிட்டு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறோம் என்று சொல்வது முறையல்ல. மருமகள் கழுத்திலே தாலி ஏறவேண்டுமென்பது நியாயம்தான், ஆனால் அதற்காக மாமியார் தாலியை அறுக்க வேண்டுமென்பது எப்படி நியாயமாகும்?'' என்று சென்டிமெண்ட்டாக பேசி கேள்வியெழுப்பியது பலரையும் சிந்திக்கவைத்தது.
இப்படியாக, இரகுமான்கானின் சட்டமன்ற உரைகள் அனைத்தும், அதிரடியாகவும், கருத்துச் செறிவோடும் இருந்ததால் சட்டமன்றத்தில் அனல் தெறித்தது. அனைத்தையும் இந்த நூலில் விரிவாக, முழுமையாகப் பதிவு செய்துள்ளார்கள்.