.தி.மு.க. மாஜி மந்திரி தங்கமணியின் ஆதரவாளர்கள் திடீரென்று, தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்களின் வீடுகளுக்குள் புகுந்து, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 14 வார்டுகளிலும், அ.தி.மு.க. 10 வார்டுகளிலும் வெற்றிபெற்றன. சுயேட்சைகள் 9 இடங்களில் கரை ஏறினர்.

cc

Advertisment

ஆனால், இரண்டு கட்சிகளிலும் நிலவிய உள்ளடிகளாலும், சுயேட்சைகளின் ஆதரவுடனும் சுயேட்சையாக போட்டி யிட்ட தி.மு.க. விஜய்கண்ணன் தலைவராக வெற்றி பெற்றார். அவருக்கு 18 கவுன்சிலர்கள் வாக்களித்து இருந்தனர்.

மாஜி அமைச்சர் தங்கமணியின் கோட்டையாகக் கருதப்படும் குமாரபாளை யத்திலேயே, கட்சித் தலைமையை மீறி அ.தி. மு.க.வினர் விலை போனது அவர் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அ.தி.மு.க. கட்சித் தலைமைக்கும் புகார்கள் போனது.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் நந்தினி தேவி ராஜகணேஷ் (17வது வார்டு), ரேவதி திருமூர்த்தி (1-வது வார்டு), பூங்கொடி வெங்கடேசன் (16-வது வார்டு) ஆகியோர், விஜய்கண்ணனுக்கு வாக் களித்ததாகவும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும் கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்தக் கோபத்தில், குமாரபாளையம் அ.தி.மு.க. நகரச் செயலாளர் நாக ராஜனையும் கட்சியில் இருந்து நீக்கினார் தங்கமணி. இது ஒருபுறம் இருக்க, நகர இளைஞரணி செயலாளரான பாலசுப்ர மணியம், அடுத்த நகரச் செயலாளராகத் துடிப்ப தால், அவர்தான் தங்கமணியிடம் எக்குத்தப்பாகச் சொல்லி, நாகராஜன் உள்ளிட்டோரை டிஸ்மிஸ் செய்ய வைத்திருக்கிறார் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில்தான் பெண் கவுன்சிலர்களை மிரட்டியதாக குமாரபாளையம் போலீசில் புகார்களை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக பெண் கவுன்சிலர்களின் கணவர்களான ராஜகணேஷ், திருமூர்த்தி ஆகியோரிடம் கேட்டபோது... "அ.தி.மு.க. நகர இளைஞரணிச் செயலாளர் சாராயக்கார பாலசுப்ரமணியம், கவுன்சிலர் புருஷோத்தமன், அவைத்தலைவர் பழனிசாமி, ஜெ. பேரவை ரவி, பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் போன 30 ஆம் தேதியன்று காலை, 20க்கும் மேற்பட்டோர் எங்கள் வீடுகளுக்கு வந்தனர். தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தை ஒழுங்காக திருப்பிக் கொடுத்துடுங்க. வாக்காளர் களுக்கு புடவை, கொலுசுன்னு கொடுத்து கட்சி செலவில் ஜெயிச்சுட்டு, இப்போது கட்சிக்கே துரோகம் செய்திருக்கீங்க. கட்சி கொடுத்த பணத்தை இரண்டு நாளில் திருப்பிக் கொடுத்திட ணும். இல்லாவிட்டால் ஊருக்குள்ளேயே இருக்க முடியாது. இது தங்கமணி உத்தரவுன்னு மிரட்டிவிட்டுச் சென்றனர். சொல்லக்கூசும் வார்த்தைகளாலும் திட்டினர். தங்கமணியின் தூண்டுதலின் பேரில்தான் இதெல்லாம் நடந்திருக்கிறது. இந்த சம்பவத்தால் எங்கள் மனைவி, பிள்ளைகள் எல்லோரும் ரொம்பவே பயத்தில் உள்ளனர்''’என பதற்றம் குறையாமல் பேசினர்.

cc

Advertisment

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாகராஜனோ, "நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலில் குமாரபாளை யம் நகராட்சி 8-ஆவது வார்டில் நான் போட்டியிட்டு தோல்வி யடைந்தேன். தேர்தலின்போதே என்னை தோற்கடிக்க இளைஞரணி பாலசுப்ரமணியம், "மாஜி' தங்கமணி ஆகியோர் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. சத்தியசீலனுக்கு மறைமுகமாக வேலை செய்தனர். தங்கமணிதான் தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்திருந்தாரே தவிர, நானல்ல. இந்த பின்னணியில்தான் எனது ஆதரவு கவுன்சிலர்களை விஜய்கண்ணனுக்கு வாக்களிக்கும்படி கூறினேன். சிலர் சொல்வதுபோல எனக்கு இதில் வேறு எந்த ஆதாயங்களும் கிடையாது. மற்ற அ.தி.மு.க. கவுன் சிலர்களும் கூட சுயேட்சைக்கும், தி.மு.க.வுக்கும் வாக்களித்துள்ளனர். அவர்களை ஏன் கட்சியை விட்டு நீக்கவில்லை?''’என்றார் காட்டமாக.

இது குறித்து குமாரபாளையம் அ.தி.மு.க. நகர இளைஞரணிச் செயலாளர் பாலசுப்ரமணியத் திடம் நாம் கேட்டபோது, "கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். ரேவதி, பூங்கொடி, நந்தினிதேவி ஆகிய கவுன்சிலர் கள், 50 லட்சம் ரூபாய் வரை பணமும், வீடும் பெற்றுக்கொண்டுதான் அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். கவுன்சிலர்களை மாற்றி ஓட்டுப் போட வைத்ததற்காக விஜய்கண்ணனிடம், நாகராஜன் 2 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கிய தாகச் சொல்கின்றனர். நாங்கள் யாரையும் அச்சுறுத்தவில்லை. மேற்கொண்டு கட்சியில் உள்ள மற்றவர்களும் இதுபோன்ற தவறுகளை செய்யக் கூடாது என்பதற்காக அப்படி செய்தோம்'' என்றார் கூலாக.

இதுபற்றி முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது, "நீங்கள் குறிப்பிடும் சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கட்சி அமைப்பு தேர்தல் பணிகளில் இருக்கிறேன்''’ என்றார்.

புகார் மீதான நடவடிக்கை குறித்து குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவியோ, "பெண் கவுன்சிலர்கள் மிரட்டப்பட்டதாக சொல்லப்படும் சம்பவத்தின்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி சம்பவ இடத்திலேயே இல்லை''’என்கிறார்.

மாஜி தங்கமணி மீது கட்சியினர் மத்தியில் பலத்த அதிருப்தி உருவாகி யிருக்கிறது. விரைவில், நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்து பலரும் வெளியேற லாம் என்றும் சொல்கிறார் கள்.