டந்த அக் 31, நவ. 04 தேதியிட்ட நக்கீரனின் இரண்டு இதழ்களிலும் தொடர்ச்சியாக, "கோடி கோடியாய் கொள்ளை! மணல் மாஃபியாக்களைக் காப்பாற்றும் அதிகாரிகள்! சிக்கிய டைரி', "மண்ணாய் போகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்! சிக்கும் அதிகாரிகள்' என நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தோம்.

sandmafia

கட்டுரைகள் வெளிவந்த உடனேயே, மாவட்டத்தில் மணல் கடத்தல் ஹாட் டாப்பிக் ஆனதுடன் நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக... தங்களைப் பாதுகாக்க, அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். நீதிமன்றத்திற்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்குள்ளான போலீஸ் மற்றும் அதிகாரிகள் தரப்பினர் பரபரக்கத் தொடங்கி விட்டனர்.

பொட்டல் மணல் ராக்கெட்டின் ஒட்டுமொத்த லகானையும் கையில் வைத்திருப்பவர் வினோத். சிக்கிய டைரியில் சொல்லப்பட்டவர்களுக்குப் பட்டுவாடா செய்ததே வினோத். அந்த வழியில்தான் ஏ.டி.எம்.மைன்ஸ் சபியாவைச் சரிக்கட்ட அவரது கணவர் முகம்மது சமீரைக் கரன்சியால் பிராக்கெட் போட்டு அரசு முத்திரை யான மோனோகிரம் புக்லெட்டை தன் வசப்படுத்தியிருக்கிறார்.

Advertisment

ஆனாலும் அம்பான வினோத்தை போலீஸ் கைவைக்கும்போதே அவரிடம் மோனோகிரம் புக்லெட், பிற முக்கியமான ஆவணங்கள் பிடிபட்டு உயரதிகாரிகளிடம் ஒப்ப டைக்கப்பட்டதில் மோனோகிரம் பற்றிய தகவல் மட்டுமே வெளிவர மற்றவை என்னவானது என்பது புதிராகவே நீடிக்கிறது.

sandmafia

மணல் ராக்கெட்டில் தொடர்புடையவர்கள் அனைவரையும் தனது வாக்குமூலத்தில் வினோத் தெரிவித்ததன் அடிப்படையில், மைன்சின் சைலண்ட் பங்காளி ரமேஷ் என்பவர் ஏ-4 என்றும், முகமது சமீர் ஏ-22 வது அக்யூஸ்ட் என்று எப்.ஐ.ஆர். பதிவாகி தேடப்பட்டு வருகின்றனர்.

Advertisment

மணல் கடத்தல் லாரிகள், போலீசின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கவும், அவர்களைச் சரிக்கட்டவும் மைன்சின் சார்பில் செயல்பட்ட பணி ஓய்வுபெற்ற ஒரு இன்ஸ்பெக்டரின் மகன் குபேரசுந்தர். இவர் நெல்லை கலெக்டர் அலுவலக அதிகாரிகளின் தயவில், அலுவலகத்தின் மொத்தக் கம்ப்யூட்டர்களின் பழுதுநீக்குதல், பராமரிப்பு டெண்டர் எடுத்துச் செயல்படும் காண்ட்ராக்டர்.

கலெக்டர் அலுவலகத்தை மடக்க குபேரசுந்தரை தன் பக்கம் வளைத்த மைன்சின் சைலண்ட் பார்ட்னரான ரமேஷ், மணல் கடத்தலில் குபேரசுந்தரையும் துணைப் பங்காளியாக்கியிருக்கிறார். தற்போது எப்.ஐ.ஆர் பேனலில் 5வது அக்யூஸ்ட்டாக இடம்பிடித்திருக்கிறார் குபேரசுந்தர்.

மணல் கடத்தல்காரர்கள் மீது குண்டாஸ் பாய்வதுடன் அவர்களுக்கு முன்ஜாமீனோ, ஜாமீனோ கிடையாது என்று உயர்நீதிமன்றம் அதிரடி காட்டியதால், முக்கியப் புள்ளிகள் அதிகாரிகளின் துணையோடு தலைமறைவுக்கு முயன்று வருகின்றனர்.

முக்கியப் புள்ளிகளான ரமேஷ், குபேரசுந்தர், முகம்மது சமீர் மூவரும் நெல்லை கடலோர கிராமமான இடிந்தகரை வந்திருக்கிறார்கள். கடலோரப் பாதுகாப்புப் படையான கோஸ்டல் கார்டு கப்பல்கள் இந்த கடற்கரைப் பக்கமாக வராது. வந்தால் கப்பல் தரைதட்டி மாட்டிக் கொள்ளும். இங்கிருந்து அதிவேக பைபர் படகைப் பயன்படுத்தி மூன்று முக்கிய மணல் புள்ளிகளும் அந்தமான் தீவுகளுக்குத் தப்பிப் போயுள்ளனராம். இந்த முக்கியப் புள்ளிகள் மூவரும் அந்தமானிலிருந்து தற்போது வேறு இடங்களுக்குத் தப்புவதற்கும் தயாராகிறார்களா.

நவ 5-ல் மணல் கடத்தல் தொடர்பாக முக்கியப் புள்ளிகள் ஏன் கைது செய்யப்பட வில்லை. எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்ற உயர்நீதிமன்றத்தின் சரமாரியான கேள்விகளால் திணறிய போலீஸ் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. நவ 18 அன்று நடவடிக்கை பற்றிய தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று கடுமைகாட்டியிருக்கிறது நீதிமன்றம். தப்பிய மூன்று முக்கியப் புள்ளிகளோடு மைன்சின் அதிபரான கேரளாவின் ஜார்ஜ், sandmafiaரெவரெண்ட் ஃபாதர் ஜோஸ், ரெவரெண்ட் ஃபாதர் கிரிக்கோரியாஸ் என ஆறு பேர்களையும் போலீஸ் நெருங்கவிடாமல் காக்கும் கரங்களாக மாறியிருக்கிறார்களாம் அதிகாரிகள்.

நெல்லையின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலோ, பணியின் ஆரம்காலமான 2018 நவ 16-ல் திட்டத்தின் மாநகராட்சியின் முதன்மைச் செயல் அலுவலரான நாராயணன் நாயர், விதியை மீறி மாநகராட்சிக்கும் காண்ட்ராக்டர்களுக்குமிடையே புரிதல் ஒப்பந்தம் போட்டவர் நவ 20 அன்று ஒர்க் ஆர்டர் கொடுத்திருக்கிறார். இதுவே மணல், முறைகேடாகக் கடத்துவதற்கு அடித்தளமாகியிருக்கிறது.

தவிர, திட்டப்பணிகளை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் ஒரு உதவிப் பொறியாளர், உதவி செயற்பொறியாளர், அடுத்து இளநிலை பொறியாளர் என மூவர் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த மூன்று அதிகாரிகள் கண்காணிப்பு பணியிலிருந்தபோதுதான் விதிமீறி 7 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு மணல் வெளியேறியிருக்கிறது.

இந்நிலையில் மானூரில் பிடிபட்ட லாரி விடப்பட்டால் மணல் கடத்தலே நடக்கவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற திட்டத்தில் ரூரல் எஸ்.பி.யான மணிவண்ணனைச் சந்தித்த மாநகராட்சியின், கடவுள் பெயரைக் கொண்ட அதிகாரி ஒருவர், "அது காண்ட்ராக்டர் லாரி விட்டுவிடுங்கள்' என்று கேட்டிருக்கிறார். ""ஒருவருக்குக் காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டதுமே உங்கள் வேலை முடிந்துவிட்டது. விடச் சொன்னால் உங்கள் மீதும் நடவடிக்கையாகும்'' என்று எஸ்.பி. கடுமை காட்டியதும் பதறிப்போய் வெளி யேறியிருக்கிறார் அந்த மாநகராட்சி அதிகாரி.

விஸ்வரூபமாய் நிற்கும் மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பிடி இறுகிக் கொண்டிருக்கிறது.

-பரமசிவன்

படங்கள்: ப.இராம்குமார்