2026 சட்டமன்றத் தேர்தலை வெற்றிகர மாக எதிர்கொள்வதற்காக அ.தி.மு.க. சார்பில் கள ஆய்வுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுக்க நடத்தப் பட்டுவருகிறது. ஆனால் இந்த கள ஆய்வுக்கூட்டங் கள், அடிதடிக்கூட்டங்களாக மாறி, எடப்பாடி தலைமையை சங்கடத்தில் ஆழ்த்திவருகிறது.
மதுரையில் கடந்த நவம்பர் 25ல் நடந்த அ.தி.மு.க. கள ஆய்வுக் கூட்டத்தில் ரகளை, அடிதடி, சட்டை கிழிப்பு, மாவட்டச் செயலாளர் களுக்கு எதிராகக் கட்சியினர் கொந்தளிப்பு என கலவரமாகக் கள ஆய்வுக் கூட்டம் நடந்துமுடிந் திருக்கிறது. மதுரை நகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூவின் கூட்டத்தில், பைகரா பகுதியைச் சேர்ந்த இளஞ் செழியன், பீபிகுளம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர், கட்சி தோற்றதற்கான காரணத்தையும், அதில் செல்லூர் ராஜூவின் பங்கு என்ன என்றும் விலாவாரியாகக் கடிதம் எழுதி மேடையிலிருந்த நத்தம் விஸ்வநாதனிடம் கொடுக்க வர, அதை செல்லூர் ராஜூவின் ஆதர வாளர்கள் தடுக்க, அப்போது அங்கிருந்த நிர்வாகி கள், பகுதிக்கழக நிர்வாகிகளை விசாரிப்பதுபோல மா.செ. செல்லூர் ராஜூவையும் விசாரிக்க வேண்டும் எனக் குரலெழுப்பினர். அங்கிருந்த செல்லூர் ராஜூ ஆதரவாளர்களோ, இருவரையும் மேடையிலிருந்து தள்ளிவிட்டுக் கடுமையாகத் தாக்கியதால் பதற்றமான சூழல் நிலவியது.
நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட் டோர் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, டாக்டர் சரவணனுக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பினர். உடனே செல்லூர் ராஜூ மேடையி லேயே டாக்டர் சரவணனைப் பார்த்து, "என்னய்யா, இதெல்லாம் உன் வேலைதானா? உன் ஆட்கள்தான் வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். என்னையா என்கிட்டயே அரசியல் செய்றியா?'' என்று கோபமாக எகிற, அருகிலிருந்த செம்மலை சமாதானப்படுத்த, கூட்டம் கலையத் தொடங்கியது.
முன்னாள் அமைச்சர் விஸ்வ நாதன் நம்மிடம் "எந்த மோதலும் இல்லை. அ.தி.மு.க.வில் பிரச்சினை இருப்பதுபோல பூதாகரமாக்க முயல் கின்றனர். அ.தி.மு.க.வில் சலசலப்பு இல்லை. கட்சியினரிடம் பணிபுரிவதில் போட்டி உள்ளது அவ்வளவே. பிரச்சனையை பெரிதாக்காதீர்கள்'' என்று அவசர அவசரமாக கிளம்பி, ராஜன் செல்லப்பாவின் புறநகர் கள ஆய்வுக் கூட்டத்திற்கு கிளம்பினார்.
தாக்குதலுக்குள்ளான ராமச்சந்திரனோ, "கள ஆய்வுக்குழு வருகிறது. கட்சியை வலுப்படுத்தப் போகிறோம் என்றார்கள். சரி, நம் உள்ளக் குமுறல்களை சொல்வோம் என்று கடிதமாக எழுதி எடுத்து வந்தேன். என்னை மாதிரி நிறைய நிர்வாகிகள் ஆர்வத்தோடு வந்திருந்தனர். கடந்த தேர்தலில் மதுரையில் டாக்டர் சரவணனை வேண்டுமென்றே கட்டம்கட்டி, எங்களையெல்லாம் வேலை செய்யாதீர்கள் என்று ஓப்பனாகவே பேசினார் செல்லூர் ராஜூ. கடைசியில் அ.தி.மு.க. வரலாற்றிலேயே மோசமான தோல்வியாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது எங்களைப் போன்ற உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு வேதனையாக இருந்தது. எங்கள் வேதனையை வெளிப்படுத்த வந்தால், கருத்தை கேட்காமல் அடித்து வெளியே தள்ளிவிட்டனர்'' என்றார்.
அடுத்து, ராஜன் செல்லப்பாவின் புறநகர் மாவட்டத்தில் நடந்த கள ஆய்வுக் கூட்டத்தில், ராஜன் செல்லப்பா, ஒவ்வொரு ஒன்றிய நிர்வாகி கள், பகுதி செயலாளர்களை விஸ்வநாதனிடம் அறிமுகப்படுத்தும்போது, ராஜன் செல்லப்பா வின் வலதுகரமாக இருக்கும் ரமேஷ், மேலூர் ஒன்றிய செயலாளர் பொன் இராஜேந்திரனைத் தடுத்து, வேறொருவரை அனுப்ப, ரமேஷுக்கும் பொன் இராஜேந்திரனுக்கும் வாக்குவாதம் முற்ற, ரமேஷ் அவரை கெட்ட வார்த்தையில் திட்ட, அதிர்ச்சியடைந்த நத்தம் விஸ்வநாதனும். செம்மலையும் அதைக் கண்டிக்க, நடந்த அடிதடியில் ரமேஷ் சட்டை கிழிக்கப்பட்டதில், கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு கிளம்பினர்.
இதுகுறித்து பொன்.இராஜேந்திரன், "செல்லப்பாவும் நானும் 40 வருடப் பழக்கம். கட்சிக்காக பலமுறை சிறை சென்றவன். கூட்டத் தில் என்னை இராஜன் செல்லப்பா அழைக்கையில், அவரோடிருக்கும் அல்லக்கை ரமேஷ் தடுக்கிறார். இவர் அமைதிப்படை அமாவாசை போல யாரை யும் வளரவிடாமல் அரசியல் செய்பவர். இவரால் பலரும் கட்சியை விட்டு சென்றுவிட்டார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து வட்டச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் என 20க்கும் மேற்பட்டோர் தீர் மானம் கொண்டுவரப் போகிறோம். இந்த களஆய்வே ஓர் கண்துடைப்பாக இருக்கிறது'' என்று முடித்துக்கொண்டார்.
மற்றொரு வட்டச் செயலாளர் உதயா, "அ.தி.மு.க.வின் மொத்த கள ஆய்வுக் கூட்டமும் ஒரு கண்துடைப்பு தான். நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் 2 கோடி புதிய அ.தி.மு.க. உறுப்பினர் படிவத்தை எடப்பாடியை பொதுச்செயலாளராகப் போட்டு அச்சிட்டு உறுப்பினர்களைச் சேர்த்து கையெழுத்து வாங்கச் சொல்லியிருக்கிறார்கள். இதற்காகத்தான் இந்த கூட்டங்களே! மதுரை மட்டுமல்ல, நெல்லை, இராமநாதபுரம் என தென் மாவட்டங்கள் முழுவதுமே கட்சி மூன்றாம் இடத் திற்கு சென்றுவிட்டது'' என்றார் ஆதங்கத்தோடு.
நெல்லை, பாளை சட்டமன்றத் தொகுதியில் மாஜி அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வுக்கூட்டத்தில், முன்னாள் மா.செ.வும் அ.தி.மு.க. கொ.ப.செ.வுமான பாப்புலர் முத்தையா பேசும்போது, "கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியைவிடக் குறைந்த ஓட்டுக்களே வாங்கியுள்ளோம். கடந்த வாரம் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் பல வார்டுகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் யாருமேயில்லை. மாவட்ட செயலாளரோ சேலத்துக்கு சென்றுவிட்டார். அவர் வேறொரு நாளில் சேலத்துக்கு சென்றிருக்கலாம்'' என்று மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவை குற்றம் சொன்னதும், அவரது ஆதர வாளர்கள் ஆத்திரமடைந்து பாப்புலர் முத்தையாவுக்கெதிராக, "அ.ம.மு.க.வுக்கு சென்று வந்தவர்களெல்லாம் பேசு வதற்கு அருகதையற்றவர்கள்'' என்று கோஷமிட்டனர். இதையடுத்து, மாஜி வேலுமணி முன்பாகவே இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். தகராறு செய்பவர்கள் வெளியே செல்லலாமென்றும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் வேலுமணி சொல்லிப் பார்த்தும் அடிதடி ஓயவேயில்லை. தச்சை கணேசராஜாவே ஆதரவாளர்களை அமைதிப்படுத்திய பிறகே சண்டை ஓய்ந்தது.
தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கும்பகோணத்தில் நடந்த அ.தி.மு.க. கள ஆய்வுக்கூட்டத்தில், மாஜி அமைச்சர்கள் ஆர்.காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர். திண்டுக்கல் சீனிவாசன் பேச ஆரம்பித்ததுமே, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அம்பிகாபதி, "மேடையில் தலைவர்கள் மட்டுமே பேசக்கூடாது. நிர்வாகிகளையும் பேச அனுமதிக்க வேண்டும். முதலில் உறுப்பினர்களை பேசவிட்டு குறைகளைக் கேளுங்கள்'' என்று ஆக்ரோஷமாகக் கூறிவிட்டு, மேடையேறி மைக்கை பிடிக்க முயன்றார். மேடையிலிருந்த மாஜிக்கள் அதிர்ச்சியாகி, அவரை அமைதியாக இருக்குமாறு கூறி, அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலான கள ஆய்வுக்கூட்டத்தில், பேசிய மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், "குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வெல்ல முடியும். கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பில்லை'' என்றார். அவரது பேச்சுக்கு மற்ற நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேபோல், மண்டப வளாகத்தில் கார் நிறுத்தும் பகுதியில் அ.தி.மு.க.வினர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அந்த கூட்டத்தை, மாஜி அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் மா.செ. எஸ்.ஏ.அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் புறக்கணித்தனர். இப்படியாக அ.தி.மு.க.வின் ஆய்வுக்கூட்டங்கள் அனைத்தும் அடிதடிக் கூட்டங்களாக மாறிவருகின்றன.
-அண்ணல், தெ.சு.கவுதமன்