துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக, துணை தாசில்தார்கள் கண்ணன், சேகர், தாசில்தார் சந்திரன் ஆகியோர் பெயர்கள் தூத்துக்குடி போலீசாரால் சேர்க்கப்பட்டுள்ளன. மேற்படி மூவரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பகுதிகளுக்கும், துப்பாக்கிச்சூடு நடத்த இவர்கள் உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. ஆனால் கலெக்ஷன் மேளாவிலும் இன்னும் பல காரியங்களிலும் மூவருக்குள்ளும் அப்படி ஒரு ஒற்றுமை.

tuty-shootingspot

தாசில்தார் சந்திரன்:

இப்போது கலால் பிரிவு தாசில்தாராக இருக்கும் இந்த சந்திரன், இதற்கு முன்பு, ரெகுலர் தாசில்தாராக இரண்டரை ஆண்டுகள் இருந்தவர். கிராம உதவியாளராக இருந்து படிப்படியாக புரமோஷன் பெற்று தாசில்தார் நிலைக்கு உயர்ந்தவர். நாகர்கோவில்காரரான சந்திரனின் சைடு தொழில் மீட்டர் வட்டிக்கு விடுவது. தூத்துக்குடி சிப்காட்டில் இயங்கும் தொழில் நிறுவனங்களே இவரது ஆதார சுருதி.

Advertisment

இப்போது இயங்கிவரும் நிலத்தைவிட கூடுதலாக நிலம் தேவைப்பட்டால், அரசு நிலத்தையோ, புறம்போக்கு நிலத்தையோ அந்தத் தொழிற்சாலைகளுக்கு சர்வ சாதாரணமாக கைமாற்றிவிட்டு, கைமேல் பலனாக லம்பாக தட்டிவிடுவார். அப்போதைய கலெக்டர் ஆசிஷ்குமாரின் ஆசி இருந்ததால், சந்திரன் நன்றாகவே பிரகாசித்தார். தூத்துக்குடி துறைமுகம் ரோட்டில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசு நிலத்தை, நகரின் பிரபல ஜவுளி நிறுவனத்திற்கு தாரை வார்த்ததால் பெரும் பிரச்சனையானது. ஆனால் சந்திரனோ சகல கட்சிப் புள்ளிகளையும் சைலண்டாக்கியதால், நில விவகாரமும் சைலண்டானது.

ஸ்ரீவைகுண்டத்தில் துணை தாசில்தாராக இருந்த போது, சிவகளை கிராமத்தில், கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக, சந்திரன் மீது வழக்கு பதிவான கதையும் இருக்கிறது. ஃபுட்செல் தாசில்தாராக இருந்தபோது, எப்போதுமே பாக்கெட்டை ஃபுல்லாக வைத்திருந்த சந்திரன், கலால் பிரிவு தாசில்தாரரான பின், அடடா மழை தான் அடை மழைதான். மாவட்டத்தில் இருக்கும் 125 டாஸ்மாக் கடைகளும் பார்களும் இவர் கண்ட்ரோலில்.

tuty-shootingspot

Advertisment

இப்படியாப்பட்ட சந்திரன்தான், அண்ணாநகரில் கண்காணிப்பில் இருந்தபோது, நடந்த கலவரத்தில் கல்வீச்சில் எஸ்.பி. காயமடைந்ததால், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாகக் கூறியுள்ளார். மேலிடம் சொன்னபடி செய்ததால், மேலும் வளம் கொழிக்கும் நிலவரித்திட்ட தாசில்தாராக்கப்பட்டிருக்கிறார் சந்திரன்.

துணை தாசில்தார் சேகர் :

ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி பகுதிகளில் பணியாற்றிய சேகரின் சொந்த ஊர் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள மேலக்கடம்பா. குரூப்-2 தேர்வு மூலம் பாஸாகி, வருவாய்த்துறையில் நேரடி உதவியாளராக பணி நியமனம் பெற்று, இப்போது துணை தாசில்தாராக இருக்கிறார். புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவரிடம் "பேச' முயற்சித்த போது, கிராமவாசிகளால் இரவு முழுவதும் செமத்தியாக கவனிக்கப்பட்ட கதைக்குச் சொந்தக்காரர் சேகர். இதுபோல ஏகப்பட்ட புகார்கள்.

எஃப்.சி.ஐ.குடோன் ஏரியா பாதுகாப்பில் இருந்தபோது, கலெக்டர் அலுவலக முற்றுகையின்போது ஏற்பட்ட கலவரச் சூழலைக் கட்டுப்படுத்த, சிப்காட் இன்ஸ்பெக்டர் ஹரிகரனுக்கு துப்பாக்கிச் சூட்டிற்கான அனுமதி கொடுத்ததாகச் சொல்லியுள்ளார். ஆனால் இவர் அனுமதி கொடுத்த தினத்தில் மடத்தூரில் பந்தோபஸ்து பணியில் இருந்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் ஹரிகரன்.

துணை தாசில்தார் கண்ணன் :

samuganathan"மணல்' கண்ணன் என்றால் வருவாய்த்துறை வட்டாரத்தில் அவ்வளவு பிரசித்தம். பசுவந்தனை, திருச்செந்தூர் தாலுகா அலுவலகங்களில் பணியாற்றியபோது, முதியோர் பென்ஷனில் கை வைத்த குற்றச்சாட்டு உண்டு. ஒட்டப்பிடாரம் பஞ்சாயத்து சேர்மனாக இருந்த காந்தி என்கிற காமாட்சி மூலம் அப்போது அமைச்சராக இருந்த சண்முகநாதனிடம் நெருக்கமாகி, அந்த நெருக்கத்தின் மூலம் வருமானத்தை பலமடங்கு பெருக்கிக் கொண்டவர்.

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் போகும் மணல் லாரிகளை, புதூர் பாண்டியாபுரம் அருகே மடக்கி, தட்சணையை வாங்கிய பின்தான் வழிவிடுவார். இப்படியாப்பட்ட கண்ணன்தான் திரேஸ்புரம் பகுதியில் கண்காணிப்பில் இருந்தபோது, அசாதாரண சூழல் ஏற்பட்டதால், வடபாக இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாகக் கூறியுள்ளார்.

போராட்டத்தின் 100-ஆவது நாளுக்கு சில நாட்கள் முன்பு, கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் ஓட்டலுக்கு மூன்று தாசில்தார்களையும் அழைத்திருக்கிறார் மாஜி மந்திரி சண்முகநாதன்.

மூவரின் ஜாதகத்தையே வாசித்த சண்முகநாதன், ""நாங்க சொன்ன மாதிரி நடந்தா உங்களுக்கு நல்ல எதிர்காலம், இல்லேன்னா கஷ்டகாலம்'' எனச் சொல்லி அந்த ஸ்பாட்டிலேயே ஷூட்டிங் ஆர்டரை வாங்கியிருக்கிறது ஆளும் வர்க்கம்.

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட மூன்று தாசில்தார்களுக்கும் இப்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது எடப்பாடி அரசு.

-பரமசிவன், நாகேந்திரன்

படங்கள்: ப.இராம்குமார்