ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்யமுடியாத அளவுக்கு நிலங்கள் வறட்சியாக இருக்க, அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் தேவைக்கும் ஏராளமான பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்துவந்தனர்.
இந்நிலையில்தான் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், அப்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலத்தால் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் திட்ட அறிவிப்போடு சரி. மேற்கொண்டு எதுவும் நடக்கவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் வேகமெடுத்தன. பவானிசாகர் அணையிலிருந்து வரும் நீரானது, கோபி அருகேயுள்ள கொடிவேரி அணைக்கு வந்து அங்கிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பெருந்துறை பகுதிக்கு கொண்டுவருவதுதான் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம்.
ரூபாய் 224 கோடி செலவில் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன்மூலம் பெருந்துறை, கருமாண்டிசெல்லி பாளையம், நல்லாம்பட்டி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள், 547 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கும் வகையிலான இத்திட்டப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து 12-ஆம் தேதி காலை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கிவைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, வெங்கடாசலம் எம்.எல்.ஏ, ஊராட்சிமன்றத் தலைவர் நவமணி, மேயர் நாகரத்தினம், துணைமேயர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 5.48 லட்சம் மக்களுக்கு 25.40 பில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்கமுடியும். மக்கள்தொகை பெருக்கம் மற்றும் குடிநீர் தேவைக்கு ஏற்ப இந்த புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள் ளது. இந்த புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதியில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதி களில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்க முடியும்.
வறண்ட பூமியாக இருந்த பெருந்துறை பகுதி மக்களின் தாகம், தி.மு.க. ஆட்சியில் தீர்ந்துள்ளது.