கதிருக்காக கன்னி பகவதி தவமிருக்கும் முக்கடல் முனையில், செவ்வாடைத் துறவி சுவாமி விவேகானந்தரின் நினைவாலயப் படிக்கட்டில், ஐயன் திருவள்ளுவரின் முகில் முட்டும் திருவுருவச் சிலையை நயந்தபடி, கச்சேரியைத் தொடங்கினர் நக்கீரன் மகளிரணியினர்.
பரணி: கேரளத்தோட முந்தைய முதலமைச்சர் உம்மன்சாண்டிக்கும் அவிய சகாக்களுக்கும் தீராத மண்டையிடியைக் கொடுத்த சோலார் பேனல் சரிதா நாயர், நாலு நாளைக்கி மின்னாடி வந்து டி.டி.வி. அணி மா.செ. பச்சைமாலை பார்த்தாவ. சால்வை போர்த்தினாவ. அப்புறம் ""சேட்டா, நிங்களது பார்ட்டியில என்னையும் சேர்க்கணும்''னு கேட்டாவ.
மல்லிகை: மத்த கட்சிகளையெல்லாம் விட்டுட்டு அ.தி.மு.க. மகளிரணிக்கு எதுக்காக அடிப்போடுறா அந்தம்மா?
பரணி: சரிதா நாயர் குமரி மாவட்டத்தில் பேப்பர் கப் தொழில் செய்றாவ. தன்னோட சாதிக்கார, ஒண்ணுவிட்ட ஒண்ணுவிடாத சொந்தக் காரவுக இங்கே நெறையவாம். அதான் மகளிரணியில சேர்ந்து எம்.எல்.ஏ. ஆகி, மந்திரியாகி, அப்படியே மேல மேல...
நாச்சியார்: யாரு கட்சி ஆரம்பிச் சாலும், முதல்ல மகளிரணிக்குத்தான் முக்கியத்துவம் தர்றாக. தன்னோட அண்ணா திராவிடர் கழகத்தின் மகளிரணிக்கு தீபாவைக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமா இருக்கிறாரு திவாகரன்.
மல்லிகை: திருநங்கைகளுக்கு தனி அணி அப்படித்தானே அறிவிச்சாரு... அது என்ன ஆச்சு?
பரணி: ஆள் கெடைக்கலியாம். அதான் புதுக்கோட்டை, திருச்சியில் இருக்கிற படிச்ச திருநங்கைகளை கணக்கெடுக்கிறதுக்காக அப்பாவும் மகனும் ஒரு டீமை இறக்கியிருக்காக. திருநங்கைகளை வச்சு திருநங்கைகளுக்காக ஒரு போராட்டம் நடத்தவும் திட்டமாம்.
பவானி: போராட்டம்னு சொன்னதும் என் கண் முன்னால தோன்றுவது சுப்புலட்சுமி ஜெகதீசன்தானுங்க. எத்தனை பதவிகளில் இருந்தவங்க... எத்தனை அனுபவங்கள்... எத்தனை போராட்டங்கள். எட்டுவழிச் சாலையை எதிர்த்த தி.மு.க. போராட்டத்துக்கு அவங்கதான் தலைமை தாங்கினாங்க.
நாச்சியார்: நல்லா பேசுவாகளே...?
பவானி: விவசாயிக்கு நிலம் என்பது தாயின் கருவறை போன்றது. கருவறையைச் சிதைக்க விடலாமானு கனல்தெறிக்கப் பேசியிருக்காங்க.
மல்லிகை: உண்மைதான், எதிலயும் ஒரு போர்க்குணம் வேணும்.
பரணி: கடையத்தில இருக்கிற ராமநதி டேம்ல தன்னோட போர்க்குணத்தை காட்டி கலெக்டரையே திணறடிச்சிட்டாவ ஆலங்குளம் தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா.
பவானி: அங்கே என்னங்க ஆச்சு?
பரணி: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி. பிரபாகரன் எல்லாரும் போயி ராமநதி அணையை திறந்திருக்காவ. அந்த டேமு ஆலங்குளம் தொகுதிக்குள்ள இருக்கு. ஆனால் அணை திறப்புக்கு தொகுதி எம்.எல்.ஏ.வை கூப்பிடலை.
மல்லிகை: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை மதிக்கிற பழக்கத்தை அதிகாரிகள் கூட கைவிட்டுட்டாகளே.
பரணி: ஆனா பூங்கோதை விட்டு வைக்கலை. நாற்பது, ஐம்பது விவசாயிகளை கூட்டிக்கினு அணைக்கட்டுக்கே வந்திட்டாவ. வந்து கலெக்டர் அம்மாவை முற்றுகையிட்டு "ஏன் என்கிட்ட சொல்லலை'னு கேட்டாவ. இடையில புகுந்த எம்.பி. பிரபாகரன் "கலெக்டர்கிட்ட பேசாதீங்க... வேணும்னா பி.ஆர்.ஓ.கிட்ட கேளுங்க'ன்னாரு.
நாச்சியார்: அவுக தன்னோட கெத்தை காமிச்சிருக்காக.
பரணி: "மிஸ்டர் நான் உங்ககிட்ட பேசலை. நான் கலெக்டரம்மாட்ட கேட்டேன். குறுக்கே நீங்க யாரு?'னு கேட்டதும் எம்.பி. அடங்கிட்டாரு. அப்புறம்தான் கலெக்டரம்மா "நான் புதுசா வந்திருக்கேன். இனிமே உங்க தொகுதியில எதுனாலும் உங்களுக்குத் தகவல் குடுக்கிறேன்'னு சொன்னாவளாம். அப்புறம்தான் பதட்டமும் பரபரப்பும் அடங்குச்சாம்.
பவானி: கன்னியாகுமரிக்கு, உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்கணும்னு வந்தோம். காலைல மேகம் சூழ்ந்திருச்சு. உதயத்தை பார்க்க முடியலை. இப்ப அஸ்தமன தரிசனமும் கெடைக்கலை...
மல்லிகை: நமக்குக் கெடைக்கலை னாலும் நம்மளாலே வாசகர்களுக்கு கச்சேரி கிடைச்சிருக்கே... வாங்க கடைசிப் படகும் கிளம்பப் போகுது...
-ஜீவாதங்கவேல், பரமசிவன்,
செம்பருத்தி, மணிகண்டன்