அம்மணிக்கு அமைச்சர் கரிசனம்!

நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு திண்டுக்கல் மலைமீது ஏறிய நக்கீரன் மகளிரணியினர் சடையவர்மன் குலசேகரபாண்டியன் கட்டிய கோயிலையும், கோயிலின் ஐந்து கருவறைகளிலும் மூலவர்கள் இல்லாததையும், ஹைதர் அலி கட்டிய கோட்டையையும் பார்த்தார்கள்.

பார்த்துவிட்டு, களைப்போடு வந்து படிக்கட்டில் அமர்ந்து கச்சேரியை தொடங்கினார்கள்.

thinnai-katchery

Advertisment

நாச்சியார் : இந்தக் கோட்டையில்தான் வீரமங்கை வேலு நாச்சியார், தனது தளபதியோடும் மருது சகோதரர்களோடும் எட்டு வருஷம் தங்கியிருந்தாங்க இல்லியா? கோட்டையும், தெய்வங்கள் இல்லாத கோயிலும் சுத்தமாதான் இருக்கு. ஆனால் கீழே திண்டுக்கல் மாநகரம் குப்பையும் கூளமும், சுகாதாரக் கேடுமாகவும் இல்ல இருக்கு... வரும்போது பார்த்தோமே...

இப்பத்தான் இப்படியா? எப்பவுமே இந்தச் சுகக்கேடுதானோ?

Advertisment

மல்லிகை : இப்பத்தான்... அதுவும் மாநகர நல அலுவலர் அனிதாவோட ஊழல் நிர்வாகந்தான் இப்படி நாறிக்கெடக்கு. 700 துப்புரவுத் தொழிலாளர்கள் இருந்தாங்க. இப்ப 100 பேருதான் வேலை செய்றாங்க. ஆனால் தினமும் 250 பேரு 300 பேர் வேலை செய்றதா பில் போட்டு பணத்தை சுருட்டுறாங்களாம். டெங்கு, மலேரியா பரவாமல் இருக்க வீட்டுக்கு வீடு மருந்து அடிக்கிறாங்க. அந்த வேலையை ஒரு அம்பது பேரு செய்றாங்க. ஆனா நூறு பேரு செய்றதா கணக்கெழுதுறாங்க. மாநகரமும் மாநகராட்சியும் ஊழல் நாத்தத்துல மிதக்குது.

மெரினா : இதேதாம்மே... அம்பது வருஷம் முன்னால, மெட்ராஸ்லயும் ரிப்பன் பில்டிங்... இதே மாதிரி மஸ்டர் ரோல் ஊழல்லதான் நாத்தமெடுத்துக் கெடந்துச்சாம்.

மல்லிகை : அதே மாதிரிதான்... மூணு மாசத்துக்கு ஒருவாட்டி திண்டுக்கல் குப்பைக்கிடங்கை ஒப்புக்காக கிளீன் செய்வாங்க. செஞ்சிட்டு லட்சம் லட்சமாய் செலவு செஞ்சதா பொய் வவுச்சர் தயார் செய்வாங்க. அப்புறம் எப்படி திண்டுக்கல்லு மணக்கும்? நாறிக்கெடக்கு!

thinnai-katcheryபரணி : எங்க நெல்லைச் சீமையில எப்பவும் அல்வா மணக்கும்டி. ஆனா அமைச்சர் ராஜலட்சுமிக்கும் எம்.பி. விஜிலா சத்தியானந்துக்கும் நடந்த காலேஜ் சீட் மௌன மல்லுக்கட்டுல அ.தி.மு.க. வட்டாரம் இப்ப நாறிக்கெடக்கு.

காவேரி : ஒருத்தருக்கு கெடச்சு இன்னொருத்தருக்குக் கெடைக்கலியோ?

பரணி : நெல்லைத் திருமண்டலத்தின் பார்வையில் மூணு, நாலு கல்லூரிகள் இருக்கு. இந்தக் கல்லூரிகள்ல சீட்டுக் கிடைக்கிறது குதிரைக் கொம்புதான். ஆனால் எம்.எல்.ஏ.வுக்கு, எம்.பி.க்கு, மா.செ.க்கு தலா ரெண்டு சீட்டு ஒதுக்கிடுவாங்க. இந்தமுறை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ரெண்டு சீட்டுக்கு சிபாரிசுக் கடிதம் கொடுத்திருக்காங்க. இதைத் தெரிஞ்சுக்கிட்ட எம்.பி., ஒரு சீட்டுக்கூட அமைச்சருக்குக் கொடுக்கக்கூடாதுன்னு மல்லுக்கட்டியிருக்காங்க.

மெரினா : எம்.பி.க்கு எதுக்கும்மே இம்மாம் கடுப்பு?

பரணி : இதைத்தான் நெல்லைத் திருமண்டலமும் இந்த எம்.பி.யிடம் கேட்டிருக்காரு. அதுக்கு குற்றாலம் பராசக்தி காலேஜ்ல ரெண்டு சீட்டு கேட்டேன். மினிஸ்டர் ராஜலட்சுமி தலையிட்டு, எனக்குக் கொடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அங்கே என் கோட்டாவைக் கெடுத்துட்டு இங்கே ஏன் வரணும். நீங்க ராஜலட்சுமிக்கு குடுக்கக்கூடாதுன்னு சொன்னாங்களாம் எம்.பி. அதை அப்படியே மினிஸ்டர்ட்ட சொன்னாராம் திருமண்டலம். இப்ப எம்.பி.யும், அமைச்சரும் பிரேசிலும் அர்ஜென்டினாவும் மாதிரி கொந்தளிக்கிறாங்களாம்.

பவானி : எங்க திருப்பூர் புறநகர் மாவட்டத்துல அ.தி.மு.க.காரங்க ரொம்ப பிரியமா நடந்துக்கிறாங்க பரணி.

நாச்சியார் : யாரைச் சொல்றீங்க பவானி?

பவானி : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்தானுங்க புறநகர் மா.செ. மாவட்ட இணைச்செயலாளர் சென்னிமலை மணிமேகலைங்க. அந்தம்மணியை அமைச்சர் மணிஇ... வா மணீஇ... சொல்லு மணீஇஇ... என்ன மணீஇஇஇ...னு தானுங்க அழைப்பார். சென்னிமலைல 30 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இருக்குங்க. அவைகளுக்கான தலைவர், துணைத்தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சென்னிமலை மணிமேகலை ஒரு லிஸ்ட்டை அமைச்சர்ட்ட கொடுத்தாங்களாம். ஒ.செ. கோபாலகிருஷ்ணன் ஒரு லிஸ்ட்டை கொடுத்தாராம். மணிமேகலை லிஸ்ட்டை ஓ.கே. பண்ணுன அமைச்சர், ஒ.செ. கொடுத்த லிஸ்ட்டை குப்பைக்கூடையில போட்டுட்டாருங்களாம்.

நாச்சியார் : ஒ.செ. ஒடைஞ்சி போயிருப்பாரே?

பவானி : அமைச்சரைப் பார்த்து, ""நான் எதுக்கு ஒ.செ.யா இருக்கணும்னு கேட்டாராம். அதுக்கு அமைச்சர், ""நீங்க வெறும் ஒ.செ.தான். ஆனால் நம்ம மணி? அவங்க மாவட்ட இ.செ. புரியுதா, அவங்க பேச்சைத்தான் நானும் கேட்பேன். நீங்களும் கேக்கணும் அப்படின்னு ரெண்டுபேருக்கு மின்னாடி ஓப்பனாவே சொல்லிப்பிட்டாருங்களாம். மணீ... மணீ... மணீஇதான் இப்ப சென்னிமலைல பேச்சு.

மெரினா : சென்னிமலைப் பேச்சு அவங்க கட்சி ஒற்றுமைக்கு உதாரணம். ஆனால் என்னால அடக்க முடியாத கேள்வி ஒண்ணு இருக்கும்மே... இந்தத் திண்டுக்கல் மலைக்கோயில் கருவறைகளில் இருந்த ஐந்து விக்ரகங்களும் எங்கே போயிருக்கும்? இதுக்குப் பதில் சொல்லும்மே?

நாச்சியார் : எனக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை தெரியும். அவர்கிட்ட கேட்கலாம் வாங்க... எந்திரிங்க!

-ஜீவாதங்கவேல், சக்தி, நாகேந்திரன்