மருது சகோதரர்களால் கட்டப்பட்ட காளையார்கோயில் ராஜகோபுரத்தைப் பார்த்தபடி, நாச்சியாருக்காக காத்திருந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர். கொல்லங்குடி வெட்டுடை காளியை கும்பிட்டுவிட்டு பஸ்ஸில் வந்து இறங்கினார் நாச்சியார்.
மெரினா: இன்னாக்கா... இம்மாம் லேட்டு. கொல்லங்குடியில் இருந்து இங்கே வர்றதுக்கு இம்மா நேரமா?
நாச்சியார்: கொல்லங்குடிக் காளிகோயில்ல எளவட்டப் பொண்ணுக ரெண்டுபேரு காசு வெட்டிப் போடுறதைப் பார்த்தேன். வித்தியாசமா இருந்துச்சு. விசாரிச்சுட்டு வர்றதுக்கு நேரமாயிருச்சு.
காவேரி: காதலிச்சவன் கழட்டி விட்டுட்டானோ?
நாச்சியார்: சேச்சே அது மாதிரி இல்லை. சிவகங்கை மாவட்ட மகளிர்அணி தலைவியா மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தியால் நியமிக்கப்பட்ட எல்லம்மாளை, கந்துவட்டிப் புகார் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பிட்டாகளாம். அதுக்குக் காரணமா இருந்த மண்டல மகளிரணித் துணைத்தலைவி ஸ்ரீவித்யா கணபதிக்கு நீதான் கூலியக் குடுக்கணும்னுதான் காசு வெட்டிப் போட்டுச்சுகளாம்.
மெரினா: மெய்யாலுமே எனக்கு புரியலம்மே.
நாச்சியார்: மண்டல மகளிரணி துணைத் தலைவி, ஸ்ரீவித்யா கணபதி, தனக்கு வேண்டிய கல்லல் ராணி ஆரோனை சிபாரிசு செஞ்சாங்களாம். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, தனக்கு வேண்டிய சிவகங்கை எல்லம்மாளை நியமித்து விட்டாராம். எல்லம்மாளை நீக்கிறதுக்காக பொய்ப் புகாரை குடுக்க வச்சு அரெஸ்ட் பண்ண வச்சுப்புட்டாகளாம் மண்டலம் ஸ்ரீவித்யா... இப்ப வௌங்கிச்சா...
மல்லிகை: இதிலிருந்து எனக்குத் தெரிவது என்னவெனில்... தமிழக காங்கிரஸ் கோஷ்டி மோதலில், ஆண்கள் அணியைப் பெண்கள் அணி, பின்னுக்குத் தள்ளிவிட்டது என்பதுதான்.
நாச்சியார்: ஏத்தா மல்லிகை கொச்சனூர் ஜனங்களோட சேர்ந்து முந்தாநாள் தேனி கலெக்டரம்மா பல்லவி பலதேவ்வை பாக்கப் போனியாம்ல... எதுக்குத்தா?
மல்லிகை: மாதா அமிர்தானந்தமயினு ஒரு பெண் சாமியாரம்மா மலையாளத்துல இருக்காக.
காவேரி: ஆம்புளை பொம்புளை வித்தியாசம் பார்க்காம பக்தர்கள் எல்லாரையும் கட்டிப்புடுச்சு முத்தம் தருவாகளே... அவுகதானே. அந்த சாமியாரம்மாவுக்கு கேரளாவுல மூணு நாலு ஆஸ்பத்திரி இருக்காம்ல...
மல்லிகை: அவுகதான். அவுகளுக்கு எங்க தேனி மாவட்டம் கொச்சனூர்ல 150 ஏக்கர் பண்ணைத் தோட்டம் இருக்கு. அதில விவசாயம்தான் பண்றாகனு இதுவரை கொச்சனூர் மக்கள் நெனைச்சிருந்தாங்க.
மெரினா: பண்ணைத் தோட்டத்தை வேற எதுக்குப் பயன்படுத்தினாங்க.
மல்லிகை: கேரளாவுல அவுக ஆஸ்பத்திரிகள்ல சேர்ற கழிவுகள் இருக்குல்ல... காலாவதியான மருந்து மாத்திரை, யூஸ் பண்ணுன ஊசி, சிரிஞ்சி, அறுத்தெடுத்த மனிதக் கழிவுகள், புற்றுநோய்க் கட்டிகள் எல்லாத்தையும் லாரிகள்ல ஏத்தி வந்து இந்த கொச்சனூர்லதான் கொட்டி வைக்கிறாக.
மெரினா: உலகத்தில உள்ள நோய்களையெல்லாம் உருவாக்கிற இந்த கழிவுகள், கேரளாவுல சிந்தினாகூட தொடப்பக்கட்டையால அடிச்சு ஜெயில்ல புடுச்சுப்போட்டு களிதிங்க வச்சிருவாங்கம்மே... தமிழ்நாடு, சாமியாரம்மாவுக்கு குப்பத்தொட்டியாகிப் போச்சோ.
மல்லிகை: கலெக்டரம்மா நடவடிக்கை எடுக்கிறம்னு சொன்னாக... பார்ப்போம்.
நாச்சியார்: புதுக்கோட்டை மா.செ. ஆன பொறகும், அமைச்சரான பொறகும் விராலிமலை விஜயபாஸ்கர், வருஷா வருஷம் தன்னோட ஆதரவாளர்கள் 500 பேரை குற்றாலத்துக்குக் கூட்டிக்கினு போயி குளிப்பாட்டிக் கூட்டிக்கினு வருவாரு. இந்த மாதம் முதல் வாரத்தில கூட்டிக்கினு போனாரு. சரியான விருந்தாம்...
காவேரி: உன் வயிறு ஏன் எரியுது?
நாச்சியார்: எனக்கொண்ணுமில்லை... ஆனால் அ.தி.மு.க. மகளிரணி சும்மாருப்பாகளா? புதுக்கோட்டை மகளிரணி செல்லத்துக்கு பயங்கர கோபம். அமைச்சர் விஜயபாஸ்கரை பார்த்து "அண்ணே! ஆண்கள் மட்டும்தான் கட்சிக்கு வேலை செய்றாங்களா... மகளிரணியும்தானே பாடுபடுறோம். எங்களையும் ஊட்டி, கொடைக்கானல் கோயில், குளம்னு டூர் கூட்டி போகலாம்'னு கேட்டுச்சு. அமைச்சரும் "சரி... பாக்கலாம்'னு சொன்னாராம். வாயுள்ள புள்ளைதான் பொழைக்கும்னு சும்மாவா சொன்னாக.
காவேரி: எங்க நாகை மாவட்டத்துல சீர்காழி பக்கத்துல திருவெங்காடு. அங்கே ஒரு போலீஸ் ஸ்டேஷன். அதுக்கு ஒரு ஆய்வாளர். அவுகபேரு வசூல்வேட்டை வேலுத்தேவி. அவுக கையை கறைபடுத்திக் கொண்டதே இல்லை. அதுக்குத்தான் ஜீப் டிரைவர் இருக்காரே. இந்த ஆய்வாளரையும் ஜீப் டிரைவரையும் இணைச்சு போஸ்டர் அடிச்சு அந்த ஏரியாவுல ஒட்டிப்பிட்டாங்க.
கோமுகி: அடப்பாவமே!
காவேரி: தன்னை அசிங்கப்படுத்தி போஸ்டர் ஒட்டுனது யாருனு தெரியாம, தன்னை எதுத்துப் பேசின பலபேர் மேல கண்டமேனிக்கு வேணும்னே வழக்குப் போட்டாங்க ஆய்வாளர் வேலுத்தேவி. அப்படி பாதிக்கப்பட்ட கோபி என்பவர் உட்பட பலரும் ஆட்சியரிடமும் எஸ்.பி.கிட்டயும் புகார் கொடுத்தாங்க. ஆய்வாளரைக் கூப்பிட்டு எஸ்.பி. லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார்.
மெரினா: கடைசிவரை போஸ்டர் அடிச்சு ஒட்டினவங்களை கண்டுபிடிக்கலியா?
காவேரி: இந்த ஆய்வாளரால் பாதிக்கப்பட்ட பக்கத்து ஊர் காவல்நிலைய ஏட்டு ஒருத்தர்தான் ஒட்டியிருக்கிறார். அதுக்குள்ள ஆய்வாளர்-ஜீப் டிரைவர் கதைதான் முச்சந்தி, நாற்சந்தியில எல்லாம் முக்கிய கதையா போச்சே.
மல்லிகை: இப்ப நாம அதை எட்டுவழிச் சாலை ஆக்கிப்பிட்டோம். சரி எந்திரிங்க. காளேஸ்வரனையும் கோபுரம் கட்டுன மருது சகோதரர்களையும் கும்பிட்டுக் கிளம்புவோம்.
-சக்தி, செம்பருத்தி, செல்வகுமார், நாகேந்திரன்