திருச்செங்கோடு மலையில் மாதொருபாகன் கோயில் மலைப்படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார்கள் நக்கீரன் மகளிர் அணியினர்.
காமாட்சி: இங்கே உட்கார்ந்ததும் உங்களுக்கெல்லாம் முதல்ல ஞாபகத்துக்கு வந்தது என்ன?
மல்லிகை: எனக்கு அர்த்தநாரீஸ்வரர்தான் நெனைப்பு.
நாச்சியார்: எனக்கென்னமோ கோகுல்ராஜும் யுவராஜுவும்தான் ஞாபகத்துக்கு வந்தாக.
பவானி: இந்த மலைப்படிக்கட்டைப் பார்த்தாலே எனக்கு கொங்குமண்டலப் புலவர்சபைதானுங்க ஞாபகத்துல வரும். அந்தப் புலவர் சபையில பன்னிரண்டு புலவர்கள் இருப்பாங்க. பன்னிரண்டு வருஷத்துக்கு ஒருமுறை இந்த மலைப்படிக்கட்டில்தான் கொங்குமண்டலப் புலவர் சபை கூடி புதிய புலவர் சபையைத் தேர்ந்தெடுப்பாங்க. கொங்குநாட்ல யார்வீட்ல கல்யாணம் ஆனாலும் அந்தப் புலவர்கள்தான் போய் மணமக்களை வாழ்த்தி கவிதை பாடணும். அதுக்காக திருமண வீட்டார் ஒருபவுன் தங்கக்கட்டியை புலவர்களுக்குத் தரணும்ங்க. கொங்குமண்டல சதகத்தில இதை அனுபவிச்சு பாடியிருக்காங்க.
மல்லிகை: திருமணம்னதும்தான் ஞாபகம் வருது... திருப்பூர் எம்.பி. சத்யபாமா மகனுக்கு ஆகஸ்ட் மாசத்துல கல்யாணம்னு கேள்விப்பட்டேனே?
பவானி: பத்திரிகை அடிக்கிறதுக்கு முன்னால போய் முதலமைச்சர் எடப்பாடிகிட்ட திருமணத்துக்கு வரணும்னு கேட்டாங்களாம். ஆனால் அவர் முகம் கொடுத்துப் பேசலையாம். டைம் இல்லேனு சொல்லிட்டாராம். ஓ.பி.எஸ்.கிட்ட போய் கேட்டதுக்கு, கட்டாயம் வர்றேன்னு சொன்னாருங்களாம்.
காமாட்சி: ஓ.பி.எஸ். அணியில சேர்ந்த எம்.பி. ஆச்சே! அந்தக் கோபம் எடப்பாடிக்கு இன்னும் போகலையா?
பவானி: எம்.பி. சத்யபாமாவுக்கும் கணவருக்கும் என்னமோ பிரச்சினைங்க. கத்தியால் குத்தியதாக எம்.பி. புகார் கொடுத்து, ரெண்டு மூணு மாசம் ஜெயில்ல இருந்துட்டு இப்பத்தானுங்க ஜாமீன்ல வந்திருக்கிறார் கணவர். வாழ்க்கையில பிரச்சினை, அரசியல்ல பிரச்சினை... மகன் கல்யாணம் முடிஞ்சதும் அரசியல்ல இருந்து ஒதுங்கிடணும்னு முடிவு பண்ணிட்டாங்களாம் சத்யபாமா.
மல்லிகை: அதே முடிவுக்குத்தான் எங்க திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி மா.செ. வத்தலக்குண்டு வளர்மதியும் வந்துட்டாங்க. அவங்க இப்ப யார் மூஞ்சிலயும் முழிக்கிறதில்லை. வீட்டைப் பூட்டிட்டு எங்கேயே போயித்தாக.
காமாட்சி: ஏன், என்னாச்சு?
மல்லிகை: ஆட்சியர் அலுவலகத்தில் ஏ.பி.ஆர்.ஓ.வாக வேலை செஞ்ச மகன் அருண்குமார், 200 கிலோ கஞ்சா கடத்தினபோது அரெஸ்ட் ஆகி ஜெயில்ல இருக்கிறாரு. முதலமைச்சர் இ.பி.எஸ்., துணை ஓ.பி.எஸ்., தெர்மாகோல் செல்லூர் ராஜுனு முறையிட்டாங்க வளர்மதி. மகனை போதைக் கடத்தல்ல இருந்து காப்பாத்த முடியலை. வெளிய முகம் காட்ட முடியாம தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கு மகளிரணி மா.செ.
பவானி: அதுக்காக, தான் கஞ்சா கடத்தல்காரன் தாயார்னு நோட்டீஸ் அடிச்சு நெத்தியில ஒட்டிக்கொண்டு அலைய முடியுங்களா?
நாச்சியார்: அந்த மாதிரி நோட்டீஸ் அடிச்சு, ஊரெல்லாம் குடுத்து கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் மேடத்தை கலங்க வச்சுப்பிட்டாக எங்க அறந்தாங்கிப் பகுதி மாட்டுவண்டிக்காரவுக.
காமாட்சி: அந்த மணல் வரும்படி விவகாரமா?
நாச்சியார்: அதுவேதான்... வெள்ளத்துல அறந்தாங்கி பகுதியில மணல் கொள்ளை கண்ணுமண்ணு தெரியாம நடக்குது. யானையை விட்டுட்டு பூனையைப் புடிக்கிற மாதிரி, வாங்க வேண்டியதை வாங்கிக்கினு, லாரிகளை விட்டுடுறாக. மணல் அள்ற மாட்டுவண்டிகளை புடுச்சு கேஸ் போடுறாக. அதனால கோவமான மாட்டுவண்டிக்காரவுக நோட்டீஸ் அடிச்சிட்டு பரப்பிட்டாக.
பவானி: என்ன நோட்டீசுங்க.
நாச்சியார்: மணல் கொள்ளையில் ஈடுபடுற கே.எஸ்.ஆர். ரமேஷிடம் வாராவாரம் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் 3 லட்சம் வாங்குகிறார். தாசில்தார் ஒரு லட்சம் வாங்குகிறார். ஆர்.ஐ. பாலா 50 ஆயிரம் வாங்குகிறார் என்று நோட்டீஸ் அடித்து அறந்தாங்கி ஏரியா முழுக்க விநியோகம் செஞ்சிருக்காக.
பவானி: நோட்டீஸ் அடித்த மாட்டுவண்டிக்காரர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலீங்களா?
நாச்சியார்: எடுக்காம விடுவாகளா? அறந்தாங்கி அத்தானி கிராமத்தைச் சேர்ந்த மூணு மாட்டுவண்டிகளைப் புடிச்சு கேஸ் போட்டுட்டாகள்ல.
காமாட்சி: இதைக் கேளுங்கடி... 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்னிக்கு, வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு பக்கத்துல புதுப்பேட்டையில இருக்கிற எங்க சொந்தக்காரர் புலிகேசி வீட்டுக்கு துக்கம் விசாரிக்கப் போயிருந்தேன். அவர் மனைவி வசந்தா இறந்துட்டாக. நான் அங்கே போனப்ப புடிங்க, அடிங்க யாரு, எவருன்னு ஒரே பரபரப்பா இருந்துச்சு.
பவானி: செத்தவீட்ல பரபரப்புங்களா?
காமாட்சி: அட ஆமாங்கிறேன்... இருபது பவுன் சங்கிலித்தாலி கழுத்துல கிடந்திருக்கு. அய்யோ எங்கள விட்டுட்டுப் போயிட்டியேன்னு கட்டியழுத யாரோ அதை அத்துக்கினு போயிட்டாங்க.
நாச்சியார்: அப்புறம்...?
காமாட்சி: போலீஸ்ல புகார் கொடுத்திருக்காங்க. வேறென்ன செய்ய முடியும்?
-ஜீவாதங்கவேல், சக்தி, செம்பருத்தி, து.ராஜா