சென்னை -எழும்பூர் ரயில் நிலைய ஒன்பதாவது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருக்கிறது நக்கீரன் மகளிரணி. கைகளில் நாளிதழ்கள், இதழ்கள், செல்ஃபோன்கள்.

காவேரி: சிசுக்கொலைகளைப் போல சிறுமியர் பாலியல் கொடூரங்கள் அதிகமாகிக் கொண்டிருக்குது. சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆறு வயசு சிறுமிக்கு அந்தக் கொடுமை நடந்திருக்கு.

thinaikatchery

Advertisment

மெரினா: ஆமா இந்த விஷயத்தை யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜாங்க மந்திரி விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டி, வடகிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இப்படி ஒரு கொடுமை நடந்ததுண்டா? விடுதலைப்புலிகள் இல்லாத அருமை இப்பத்தான் தெரியுது, மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாகணும்னு ஆவேசமா பேசியிருக்காங்க.

பவானி: தென்னையில தேள் கொட்டினா பனையில நெரி கட்டுச்சாம்கிற மாதிரி யாழ்ப்பாணத்தில தமிழ்ப்பெண் அமைச்சர் பேசினது, கொழும்புல நாடாளுமன்றத்தில எதிரொலிச்சு... காரசாரமான விவாதங்கள் நடந்திருக்கே. பல தடவை தள்ளி வச்சிருக்காங்க.

வெளிச்சத்தின் அருமை இருட்டிலதானே தெரியும்.

Advertisment

thinaikatcheryவாணி: ஏனுங்க தமிழ்நாட்டுக்கு வாங்க. திருநெல்வேலியில தூத்துக்குடி ரோட்ல தினகரன் கட்சி மா.செ. பாப்புலர் முத்தையா வீடு இருக்குங்க. போன வாரம் பாப்புலர் முத்தையாவை அவர் வீட்டுக்கு போயி அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. விஜிலா சத்யானந்த் பார்த்து, ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தாங்கண்டு எனக்கு ஒரு சேதி வந்ததுங்க.

பரணி: எம்.பி., மாநிலங்களவை கொறடா, மாநில மகளிரணிச் செயலாளர், மாவட்ட மகளிரணிச் செயலாளர்னு பல பதவிகள். அவியட்ட இருக்கு. ஆனாலும் டி.டி.வி. மா.செ.யை போய் பார்த்தாவ. இந்த விஷயம் தென்காசி எம்.பி. வசந்தி முருகேசனுக்குத் தெரிஞ்சு போச்சு. சும்மா இருப்பாவளா? இ.பி.எஸ்.ஸைப் போயிப் பார்த்து தினகரன் கட்சி மா.செ.வுடன் கூட்டணி வச்சிருக்கிறவருக்கு மூணு, நாலு பதவி... எனக்கு ஒண்ணுமேயில்லையினு கண்ணைக் கசக்கியிருக்காவ. மறுநாளே விஜிலாவைக் கூப்பிட்டு விசாரணை நடத்தியிருக்கு அ.தி.மு.க. தலைமை.

மெரினா: எம்.பி. வசந்தி முருகேசனுக்கு மகளிரணி மாநிலச் செயலாளர் போஸ்ட்டிங் உறுதினு சொல்லு.

கோமுகி: புதுசா பதவிக்கு வர்றவங்க நாலஞ்சு மாதம் பவரைக் காட்டுவாங்க. அப்புறம் பழைய குருடி கதவைத் திறடிதான்.

பரணி: யாரையோ சொல்லப் போறியோ?

கோமுகி: ஒரு வருஷம் முன்னாடி விருத்தாசலம் ஆர்.டி.ஓ.வா வந்தாங்க சந்தோஷினி சந்தியா. வந்த புதுசுல எம்.பி., எம்.எல்.ஏ., வட்டம், மாவட்டம், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி யாரு பேச்சையும் கேக்கலை. கல்லு, மணல், மண்ணு கடத்தின டிராக்டர்களை, லாரிகளை, மாட்டு வண்டிகளை புடுச்சு போலீஸ் ஸ்டேஷன், தாலுகா ஆபீஸ், ஆர்.டி.ஓ. ஆபீஸ்ல நாப்பது நாளுக்கு குறையாம நிறுத்தி வச்சாங்க.

மெரினா: இப்ப என்னாம்மே ஆச்சு?

கோமுகி: சக அதிகாரிகள் யாரும் ஒத்துழைக்கலையாம். நமக்கேன் வம்புனு இருக்கிற சீட் தெரியாம உக்கார்ந்திருக்காங்க.

வாணி: அரசியல்வாதிகளால அப்படி இருக்க முடியாதுங்க. திருப்பூர் மாவட்ட மகளிரணி செயலாளர் போஸ்டிங் தர்றம்னு சொன்னதும் தினகரன் கட்சிக்குப் பாய்ஞ்சிட்டாருங்க உடுமலைப்பேட்டை ஷோபனா.

பவானி: ஏனுங்க நம்ம உடுமலைப்பேட்டை நகராட்சியோட முன்னாள் சேர்மனுங்களா? அவங்க, துணைசபா ஜெயராமனும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் கிழிக்கிற கோட்டை தாண்ட மாட்டாருங்களே...

வாணி: ஆமாமுங்க. அமைச்சர் கண்டுக்கவே இல்லீங்க. அதனாலதானுங்க இரட்டை இலையை விட்டு அம்மணி போனாங்க. துணைசபாவோட சாதிக்காரவங்க அம்மணி. அந்த உரிமையில துணை சபா பேசிப் பார்த்தாருங்க. அம்மணி திரும்பிப் பார்க்கலீங்க. அதை விடுங்க, கோபியில ஒரு காலேஜ் பொண்ணுக்கு ஏக தடபுடலா வரவேற்பு கொடுத்திருக்காங்களே... ஏனுங்க?

பவானி: ஷாலினி. கோபி பி.கே.ஆர். காலேஜ்ல ரெண்டாம் வருஷம் படிக்குதுங்க. சேலம் மாவட்டம் கொளத்துக்கும்பையில ஒரு சிறு விவசாயியோட பொண்ணுங்க. இந்திய பெண்கள் வாலிபால் அணிக்கு ஷாலினிதானுங்க கேப்டன். வியட்நாம்ல நடந்த உலக வாலிபால் போட்டியில இறுதிச் சுற்றுவரை சிறப்பா விளையாடி இருக்குதுங்க நம்ம டீம். ஷாலினிக்கு ரொம்ப நல்ல பேருங்க. அதானுங்க அந்தப் பொண்ணுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து அசத்திட்டாங்க.

காவேரி: உடுமலைப்பேட்டை ஷோபனா கட்சி மாறிட்டாங்க. உங்க சேலம் ரேகா பிரியதர்ஷினி, வீரபாண்டி ராஜா அணியில இருந்து, செயல் தலைவர் ஆசி பெற்ற வக்கீல் ராஜேந்திரன் அணிக்கு மாறிட்டாருனு சொல்றாங்களே நெஜமாவா?

பவானி: வீரபாண்டி ஆறுமுகம்தான் ரேகா பிரியதர்ஷினியை அரசியலுக்கு கொண்டு வந்தாருங்க. சேலம் மேயராக்கினாருங்க. அப்புறம் வீரபாண்டியாரின் மகன் ராஜா சிபாரிசிலதான் கெங்கவல்லித் தொகுதியில எம்.எல்.ஏ.வுக்கு நின்று சொற்ப ஓட்டுலதான் தோத்தாங்க. வீரபாண்டியார் குடும்பத்துக்கு விசுவாசமாத்தானுங்க ரேகா இருக்காங்க. ஆனாலும் அரசியலில் காற்று வீசுற பக்கத்தையும் கவனிக்கணுமே!

காவேரி: அதோ ஷெட்ல இருந்து நம்ம வண்டி வருது.

-ஜீவாதங்கவேல், சுந்தரபாண்டியன், நாகேந்திரன், இளையராஜா