"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யின், மாநில மாவட்ட பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கரூர் திருமுருகன் திருமண மண்டபத்தில் 11-7-18 அன்று நடந்தது.

காலையில் அறிவிக்கப்பட்டிருந்த இக்கூட்டம், தீபாவின் தாமதத்தில் மாலையில் தொடங்கியது. இக்கூட்டத்திற்குச் சென்ற காவேரிக்காக, கரூர் கல்யாண பசுவதீஸ்வரர் கோயில் வாசலில் காத்திருந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர். இரவு ஒன்பது மணிக்கு மூச்சிரைக்க வந்து சேர்ந்தார் காவேரி.

thinaikatchery

Advertisment

பரணி: கோயில் நடைகூட சாத்தியாச்சு. ஏம்ல இவ்ளோ லேட்டு?

காவேரி: கேள்வித்தாள் பிரிண்டாகி வர்றதுக்கு ரொம்ப லேட்டாயிருச்சு. நிர்வாகிகள் அதில டிக் பண்ணி, அப்புறம் அதைக் கலெக்ட் பண்ணி, அதுக்கப்புறம் தீபா பேசினாங்க. எப்பவும் அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் பேசுற தீபா, இன்றைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல பேசினாங்களா...

வாணி: ஏங்க... என்னமோ எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் அது இதுனு சொன்னீங்க. என்னங்க அது?

Advertisment

காவேரி: அதுவா... மூணு கேள்வி கேட்டிருந்தாங்க. ஒண்ணு தனிக்கட்சி தொடங்கி வழிநடத்துவது? ரெண்டு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து அ.தி.மு.க.வை வழிநடத்துவது? மூணாவது கேள்வி தனிக்கட்சி தொடங்கி, மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது? இதில் மூணாவது கேள்விக்குத்தான் ஆதரவு அள்ளுச்சு. தனிக்கட்சி தொடங்கி, கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடிப்பதில் நிர்வாகிகள் ஆதரவா இருக்காங்க.

பரணி: ஓ.. ஸ்ட்ரெய்ட்டா ஆட்சிதானா? அப்புறம் தீபா... முக்கியமா என்ன சொன்னாங்க அதைச் சொல்லு.

thinaikatchery

காவேரி: தான் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லைனாலும், ரத்த வாரிசு என்கிற அடிப்படையில் ஜெ. வகித்த அத்தனை பதவிகளையும் சட்டபூர்வமா பெற முடியும்னாங்க. தலைமைப் பொறுப்புகளை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஏற்றுக்கொண்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் சட்டரீதியாகப் போராடி வெற்றி பெறுவேன். அ.தி.மு.க.வையும் இரட்டை இலையையும் கைப்பற்றுவேன்னு உறுதியா சொன்னாங்க.

பரணி: போராட்டம். எங்கும் எதிலும் எப்போதும் போராட்டம்தான். கோயில்களுக்குள் பக்தர்கள் இனிமேல் எண்ணெய், அகல்விளக்கு ஏத்தக்கூடாது. வேணும்னா கோயில் நிர்வாகம் ஏற்றியிருக்கும் மெகா விளக்குல எண்ணெய்யை அல்லது நெய்யைக் கொண்டுபோய் ஊத்தலாம்னு அறநிலையத்துறை புதுசா ஒரு சட்டம் போட்டிருக்காம். அதை எதிர்த்துதான், தமிழக அளவில் பக்தர்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துறதுக்கு, இந்து மகா சபை மாநில மகளிரணித் துணைத்தலைவி சைலஜா ஏற்பாடு பண்றாங்க.

வாணி: சென்னை மாவட்ட கலெக்டரா இருந்தாங்களே ஜெயா மேடம். அவங்க தான் இப்ப இந்து அறநிலையத்துறை ஆணையர். ஊழல் நரிகளை மேய்க்கிற வேலையில் நம்மளை திணிச்சுப்பிட்டாங்களே... எப்ப... எப்பிடி இங்கேருந்து கழட்டிக்கிட்டு போகலாம்னு துடியா துடிச்சுக்கிட்டு இருக்காங்க. அவுங்களா நவக்கிரகங்களுக்குக்கூட அகல்விளக்கு ஏத்தப்பிடாதுனு உத்தரவு போட்டாங்க?

பரணி: யாரு போட்டாங்களோ? ஆறு மாசமாவே இப்படி ஒரு பேச்சு அடிபட்டுச்சு. ரெண்டு நாளைக்கு மின்னாடி, சனீஸ்வரனுக்கு வௌக்கேத்துறதுக்காக கோயில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு சைலஜா குழு போயிருக்காங்க. அங்கே ஏத்த விடலை. அதைக் கண்டிச்சு தான் கண்டனப் பொதுக்கூட்டங்களும் போராட்டமும்.

காமாட்சி: குதிரை வியாபாரம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் அது சீலிங்கை பிச்சுக்கிட்டு கொட்டும்கிறதை இப்பதான் பார்க்கிறேன்.

காவேரி: இந்த பேரம் எங்கே?

காமாட்சி: தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள்ல ஒருத்தரு எங்க குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன். இப்ப சம்பளமும் கிடையாது. டெண்டர்கள்ல இன்கம்மும் கிடையாது. ஆனால் அஞ்சு கோடி எஸ்டிமேட்ல பன்னிக்குட்டை கிராமத்தில் கல்யாண மண்டபம் கட்டுறாங்க. ஆம்பூர் குடியாத்தம் பகுதியில இதுதான் பெரிசா இருக்குமாம்.

வாணி: அம்மணி கஷ்டப்பட்டு கட்டுவாருங்க.

காமாட்சி: கேட்டவர்களிடம், "ஏன் வயிறு எரிஞ்சு சாகுறீங்க? பேங்க்ல 65 லட்சம் கடன் வாங்கிக் கட்டுறேன்'னு சவால் விடுறாங்களாம்.

வாணி: சவால் விடுறதும் சாதிச்சுக் காட்டுறதும் சிலருக்கு சர்வ சாதாரணமுங்க. ஊட்டி நகராட்சித் தலைவியா இருந்தாங்களே சத்தியபாமா தெரியுங்களா?

பரணி: யாரு? பா.ஜ.க.வில இருந்து வந்து அ.தி.மு.க.வுல சேர்ந்து ஊட்டி சேர்மன் ஆனவுகதானே. அவுக இப்ப தினகரன் கட்சியில மகளிரணி மா.செ.யா தானே இருக்காக?

வாணி: ஆமாமுங்க. எக்ஸ். எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை கூடவே தினகரன் கட்சிக்கு போயிட்டாங்க. ரெண்டுபேரும் அங்கே இப்ப பவர்புல்லா இருக்காங்க. அதனால, சேலஞ்சிங்கான முடிவையெல்லாம் ரெண்டுபேரும் டிஸ்கஸ் பண்ணி எடுக்குறாங்க.

காவேரி: அப்படி என்ன சேலஞ்ச்?

வாணி: எஸ்.கே.ஜி லாட்ஜ் ஓனர் சுரேஷ், சத்யபாமா சேர்மனா இருக்கும்போது கவுன்சிலரா இருந்தவருங்க. அவரை "அ.ம.மு.க. மா.செ. ஆக்கியே தீருவேன்'னு சேலஞ்ச் பண்ணி, அங்கேயே அது பற்றி டிஸ்கஸும் பண்ணிருக்காங்க.

காமாட்சி: நேரம் போனதே தெரியலை. மணி 11 ஆகப்போகுது... எந்திரிங்க.

-பரமசிவன், ஜெ.டி.ஆர்., து.ராஜா, அருள்குமார்