th

(16) மாடுகளின் சுழியும் மக்களின் நம்பிக்கையும்!

ங்கலட்சணம் எனப்படும் அவயலட்சண சாஸ்திரம் மனிதர்களுக்கு மட்டுமல்ல... மாடுகளுக்கும் பார்க்கப்படுகிறது.

"இந்த லட்சணம் இருந்தால் இன்பம் பொங்கும்; அந்த லட்சணம் இருந்தால் துன்பம்தான் விளையும்' என அங்க லட்சண பலன்கள் பற்றிய கணிப்புகளை சொல்பவர் களும் உண்டு.

Advertisment

அது பலிக்குமோ? பலிக்காதோ?

ஆனால் மாடுகளை இப்படி அவய லட்சணம் பார்த்துத்தான் வாங்குகிறார்கள். முக்கியமாக "சுழி' பார்த்து வாங்குகிறார்கள். பொருத்தமான மாடுகளை வாங்காவிட்டால் அப்படியான மாட்டை வாங்கியவரும், அவரின் வீட்டாரும் கூட பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல் கிறார்கள்.

மாடு என்பது செல்வத்தின் குறியீடாக இருப்பதால்தான் இத்தனை கவனம் மாடு வாங்குகிற விஷயத்தில்.

Advertisment

தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் மாட்டுச்சந்தை எனப்படும் மாடுகள் வாங்கும் லிவிற்கும் சந்தைகள் நடந்தாலும் கூட... தமிழகத்தில் திருச்சி மாவட்டம் "மணப்பாறை மாட்டுச் சந்தை' மிகவும் பிரபலமானது மற்றும் பாரம்பரியமானது.

"மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி' என்கிற 1957-ல் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளிவந்த மருதகாசியின் பாடலே சாட்சி!

ஒரு பயணத்தின் போது மணப்பாறை மாட்டுச்சந்தையில் மாடுகள் எப்படி விற்கப்படுகிறது என்பதைப் பற்றிய ஆய்வில் இறங்கினோம்.

பெரும்பாலும் சந்தைகளில் விவசாயத் தேவைகளுக்காக மாடுகளை வாங்குபவர்கள் இருந்தாலும், கேரளாவில் இருந்து வந்து அடி மாடுகளாக ஏற்றிச் செல்வது அதிகம்... கேரளாவில் மாட்டுக்கறி உணவு பெரும் வியா பாரம். மாடுகளை வளர்க்க முடியாதவர்கள், வயதான மாடுகளைப் பாதுகாக்க முடியாத வர்கள் அதிகமாக மாடுகளை விற்கிறார்கள். ஜல்லிக் கட்டு தடை செய்யப்பட்ட நேரத்தில், ஜல்லிக்கட்டுக்காக தயார் செய்யப்பட்ட நாட்டு மாடுகளைப் பராமரிக்க முடியாமல் பலபேர் அடிமாடாக விற்றதாகக் கூறினார்கள்.

தட்டை, வாச்சி, கொழுவு, பணயம் என்று சந்தையில் விலை பேசுவதற்கு தரகர்களுக்கு என்று தனி பாஷை உண்டு. இரண்டு கைகளைக் கோர்த்துக்கொண்டு மேலே துண்டை போட்டு விரல்களை வைத்து விலை பேசுகிறார்கள்.

நிறம், கொம்பு, சுழி, பல் எனப் பலவற்றையும் பார்த்துத்தான் ஒருவர் சந்தையில் இருந்து மாட்டை வாங்குகிறார்.

சுருட்டைக்கொம்பு, பூங்கொம்பு, பொத்தைக்கொம்பு, விரிகொம்பு, கிளிக் கொம்பு எனப் பல வகை கொம்புகள் உண்டு அது இல்லாமல் தெரிந்துகொண்ட சுவாரசியமான தகவல்கள், மாடுகளுக்கு மேலிருக்கும் பிரத்தியேகமான சுழிகளைப் பற்றியது.

"மாட்ட வாங்கும் போது சுழி சுத்தம் பாரு' என்று ஊர்களில் கூறுவார்கள். நாட்டு மாடுகளின் மேல் இயற்கையாகவே சுழிகள் உருவாகும்.

32 சுழிகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதற்கு மேலும் இருக்கலாம். நன்மை செய்யும் சுழிகளும் உண்டு, தீமை செய்யும் சுழிகளும் உண்டு.

குறிப்பிட்ட சுழிகள் உள்ள மாடு தனிப்பட்ட பண்புகளை உடையதாக இருக்கும் என்பது பரவலான நம்பிக்கை...

உதாரணத்திற்கு, திமிலின் மேல் அல்லது திமிலின் முன்புறத்தில் அல்லது திமில் முதுகு சேருமிடத்தில் இருப்பது கோபுர சுழி, இதை ராஜா சுழி என்றும் கூறுவார்கள். இந்த சுழி உள்ள மாட்டை உடையோர் மிகுந்த செல்வத்துடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

இதைப்போல லட்சுமி சுழி, தாமணி சுழி, வரிச் சுழி, இரட்டைக்கவர் சுழி, ஏறுபூரான் சுழி, விபூதிச் சுழி, கொம்புதானா சுழி, ஏறு நாக சுழி, பாசிங்சுழி என பல நல்ல சுழிகளும் அதற்கான பலன்களும் உண்டு..

இதைப்போல தீய பலன்கள் தரும் சுழிகளும் உண்டு..

உதாரணத்திற்கு, மாட்டின் இரு கண்களுக்கும் நடுவில் முக்கோண வடிவில் இருக்கும் சுழி, முக்கண்சுழி.. இந்த சுழி இருக்கும் மாடுகளை வாங்கினால் வீட்டில் இடையூறுகள் ஏற்படும் என்பார்கள்.

குடைமேல் குடைசுழி, விலங்கு சுழி, பாடை சுழி, தட்டுச் சுழி, துடைப்பைச் சுழி, புட்டாணிச் சுழி, இறங்கு நாகச் சுழி, கருநாகச் சுழி, பெண்டிழந்தான் சுழி, எச்சுபள்ளிச் சுழி, வால்முடங்குச் சுழி, மென்னிப்பிடிச் சுழி, பூரண கௌவல் சுழி, பாடைக்கட்டுச்சுழி என தீமை செய்யும் சுழிகளும் உண்டு இந்த சுழிகள் யார் கண்டுபிடித்தது? இதன் பண்புகளை எப்படி வரையறை செய்கிறார்கள்? இதில் இருக்கும் உண்மைத் தன்மை எத்தகையது என்று ஆராய்ந்தால் அதற்கான ஆவணங்கள் இல்லை.

tt

ஆனால் அந்த சுழிகளும், அதற்கான பண்புகளும் காலம் காலமாக, வழி வழி யாக நம்பப்பட்டும், அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டும் வருகிறது. ஜல்லிக்கட்டுகளில் பாய்ச்சல் மாடுகள் குறிப்பிட்ட சுழிகளை உடைய மாடாகவே இருப்பது வியப்பானது.

சிவகங்கை காளாப்பூர் ஊரைச் சேர்ந்த அண்ணன் சுடர் தேவர், மாடு வளர்ப்பில் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை கொடுத்தவர்... உணர்வானவர். சுழிகள் சம்பந்தமாக வேறொரு பார்வையை வெளிப்படுத்தினார்.

ஒரு சம்பவம், ஒரு நபர் பாடைச் சுழி மாட்டை வாங்கினார். பாடைச் சுழி மாட்டை வாங்கினால் வீட்டில் இறப்பு உண்டாகும் என்று பல பேர் தடுத்தும் அதைப் பற்றிய நம்பிக்கை இல்லாமல் வாங்கி வளர்த்தார். ஆனால் சிறிது காலத்திலேயே அவருடைய மனைவி இறந்து விட்டார். அவருக்கு வெகு நாட்களாக கேன்சர் இருந்ததால் இறந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்.

மற்றொரு சம்பவம்...

ஒரு முதலாளியிடம் வெகுநாள் டிரைவராக வேலை பார்த்த நபர். அவருக்கு மிகவும் அரிதான லட்சுமி சுழி இருக்கும் மாடு கிடைக்கிறது. அதை வாங்கி வளர்க்கிறார். சில மாதங்களில் அவர் முதலாளியின் நம்பிக்கைக்குரியவ ராகிறார். பிறகு தனியாக சொத்து சேர்க்கிறார். நில புலன்கள் வாங்குகிறார். இதற்கெல்லாம் காரணம் லட்சுமி சுழி மாடுதான் என்று நம்பிய அவர், மாட்டிற்கு சகல வசதிகளுடன் தனியாக வீடே கட்டிவிட்டார்.

இந்த சம்பவங்கள் உணர்த்துவது என்னவென்றால், மாட்டின் மேல் உருவாகும் சுழிகள் என்பது இயற்கையில் ஒரு தனி அம்சம் தான். ஆனால் அது பலன்களை தருகிறதா? இல்லையா? என்பதற்கு விடை இல்லை.

காலம் காலமாக தொடரப்படுகிற நம்பிக்கை சார்ந்ததாக இருக்கிறது... ஆனாலும் இந்த தகவல்களுக்கு பின்னால் ஒரு வரலாற்று ஆதாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம். எந்த அளவிற்கு மாடுகளோடு கலந்து உறவாடி உணர்வோடு வாழ்ந்திருந்தால் மாடுகளின் சுழிகளையும், அதற்கு பண்புகளையும் பிரித்து வகுத்திருப்பார்கள் என்பதை உணர முடிகிறது...

மாறு கொம்பு இருந்தால் மாடு பாயும், கண்ணுக்குக் கீழ் கருவளையம் இருக்கும் மாடு பாயும், திமில் பெரிதாக இருக்கும் மாடு பாயும் என பாய்ச்சல் மாடுகளை அடையாளம் காண்பதற்கு சில அம்சங்கள் உண்டு... இதெல்லாம் மாடுகளுக்கும், நமக்குமான பல்லாயிரக் கணக்கான வருட புரிதலில் அறியப்பட்ட கண்டு பிடிப்புகள்!

(வரும் இதழில் முடியும்)