நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்த நாகை மாவட்டத்தை பிரித்து சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று தொகுதிகளை கொண்ட மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மாவட்டம் உருவாவதற்கு முன்பே அதை மையமாக வைத்து அ.தி.மு.க.வுக்குள் பவர் யுத்தங்கள் தீவிரமாக நடந்தன. நாகை மா.செ.வும் அமைச்சருமான ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அரசியல் செய்துவரும் பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜ், மயிலாடுதுறை மாவட்டம் உதயமானால், அதற்கு நான்தான் மா.செ. என, ஓ.எஸ். மணியன் தரப்பை டீஸ் செய்வது போல், போஸ்டர்களை ஒட்டி அரசியல் களத்தை பரபரக்கச் செய்தார்.
இதற்கிடையில் நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்கவேண்டும் என சில அமைப்புகள் மூலமாகவும், அரசியல் கட்சிகள் வழியாகவும் குரல் கொடுக்க வைத்தார் பவுன்ராஜ். இது ஓ.எஸ்.மணியனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. இந்த லடாய் குறித்து, ’"மாவட்டத்தை ரெண்டாக்கு'’ என்ற தலைப்பிலும் ’"எந்த ஊரில் மருத்துவக் கல்லூரி -மல்லுக்கட்டும் எம்.எல்.ஏ. மந்திரி'’ -என்ற தலைப் பிலும் நக்கீரன் அப்போதே கட்டுரைகளை வெளியிட்டது.
இந்தநிலை யில், மயிலாடுதுறை மாவட்டம் உருவாகத் தடைக்கல்லாக இருந்தார் என்று ஓ.எஸ்.மணியனை மயிலாடுதுறைக்காரர்கள் இப்போதும் எதிர்த்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாய் நீடூர் பகுதிக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனைப் பொது மக்கள் விரட்டியடித்த சம்பவமும் அண்மையில் அரங் கேறியது. இதற்கிடையே பவுன் ராஜுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, மயிலாடுதுறை ந.செ. வான செந்தில்நாதன், ஒ.பி. எஸ்.சைப் பிடித்து மயிலாடுதுறை மா.செ. பதவியை வாங்கிவிட்டார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் ஒருவர் ""செந்தில்நாதனைப் பற்றிக் கட்சிக்காரர்களிடம் விசாரித்தாலே அவரது ஜாதகத்தைப் புட்டுபுட்டு வைப்பார்கள். சாதாரண ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோதே அவ்வளவு ஆட்டம் ஆடினார். ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் அவரது ஊரான வழுவூர் பூத்தில் கலவரம் வெடிக்கும். மக்கள் பயந்து நடுங்குவார்கள். அப்படிப் பட்டவர் எங்கள் கட்சிக்கு மா.செ. என்பதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. தனக்குப் பிடிக்காத நிர்வாகிகளை மிரட்ட, மாஜி மந்திரி ஜெயபால் இவரைப் பயன்படுத்தி வந்ததையும் மறக்க முடியாது. திருநாள்கொண்டசேரி சுடுகாட்டு விவகாரத்தில் தாழ்த்தபட்ட மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித் தவர் அவர். அவரால், மாவட்டத்தின் மூன்று தொகுதி களிலும் தி.மு.க. எளிதாக நினைத்ததை சாதிக்கப்போகிறது. தேர்தலில் இவரை வைத்துக்கொண்டு மக்களிடம் ஓட்டுக் கேட்டுப் போகமுடியுமா? என்று எங்கள் கட்சியினர் மருகிப்போய் நிற்கிறார்கள்''’என்றார் ஆதங்கமாய்.
செந்தில்நாதனின் முன்னாள் ஆதரவாளரான அந்த பிரமுகர் நம்மிடம்...’’""அவரோட குடும்ப பின்னணியோ உறுத்தலானது. அவர் தந்தை வி.ஜி. கலியமூர்த்தி, பால்கேனில், கள்ளச்சாராயம் கடத்திவந்து சம்பாத்தியம் கண்டவர். அவரது இளைய மகன் வி.ஜி.கே.மணி பா.ம.க.வில் இருந்து ஒழுங்குநடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டவர். கட்டப்பஞ்சாயத்து, மணல் கடத்தல், ஆள் கடத்தல் என வில்லங்க விவகாரங்களில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர். மயிலாடுதுறையில் எங்கு சொத்துப் பிரச்சனை ஏற்பட்டாலும், அங்கே அழையா விருந்தாளியாக ஆஜராகி, மூர்க்கமாக நடந்துகொள்வார். இப்போது மயிலாடுதுறையில் பலகோடி மதிப்புடைய இடங்களை வளைத்துப் போட்டிருக்கிறார். செந்தில்நாதன்.
சேத்தூர் பகுதியில் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, மணல் குவாரி அமைக்க முயன்றார். அப்பகுதி மக்கள் எதிர்த்ததால் அதைக் கிடப்பில் போட்டார். இப்போது, மா.செ. ஆனதும் அங்கே மணல்குவாரி அமைக்கும் முயற்சியை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். விளை நிலங்களில் மணல் குவாரியை இவர் அமைத்ததை அறிந்து, அதைப் பார்வையிடச் சென்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை காரோடு குழியில் புதைத்துவிடுவேன் என செந்தில்நாதன் மிரட்டினார். அவர் கொஞ்சமும் பயமில் லாமல் நடவடிக்கை எடுத்தார். இப்படிப்பட்ட பின்புலம் கொண்டவரை மா.செ.வாக அறிவித்திருப்பதுதான் பெருத்த வேதனை'' என்கிறார் எரிச்சலாக.
இது ஒருபுறம் இருக்க... மன்னம்பந்தல் ஊராட்சி தலைவிக்கு எதிராக சாதிய மோதலை கிளப்பிவிட்டதே அ.தி.மு.க. மா.செ. செந்தில் நாதன்தான் என்கிறார்கள் விவரம் அறிந்த பலரும். ""தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சித் தலைவியான பிரியா பெரியசாமி. தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேந்தவர். திருமணம் ஆகாத இளம்பெண்ணான இவரை மன்னம்பந்தல் ஊராட்சி அலு வலகத்தில் இருக்கும் ரோலிங் சேரில் அமரக்கூடாது என்று ஊராட்சி துணைத் தலைவரான அமலா ராஜகோபாலும், சில உறுப்பினர்களும் தடுத்தனர். அவமானப்படுத்தப்பட்ட பிரியா, வேறு வழியில்லாமல் மயிலாடுதுறை யூனியன் அலுவலக வாசலில் தர்ணாவில் குதிக்க, அவரை சந்திக்கக்கூடாது என மயிலாடுதுறை தி.மு.க சேர்மன் காமாட்சி மூர்த்தி யிடமும், தி.மு.க. ஒ,செ.வான மூவலூர் மூர்த்தியிடமும் செந்தில்நாதன் கூற, அதை கேட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு சத்தமில்லாமல் இருந்துவிட்டாராம் மூர்த்தி. இது திமுக தலைமைக்கு தெரிந்து ஒ.செ பொறுப்பில் இருந்து மூர்த்தியை நீக்கியுள்ளனர்'' ’என்கிறார்கள் ஊராட்சிமன்றத் தலைவர்கள்.
இதுகுறித்து பிரியா பெரியசாமி கூறுகையில் “""அலுவலகத்திற்கு தள வாடப் பொருட்கள் வாங்கும்போது, தலைவரான எனக்கு சுழல் நாற்காலி வாங்கப்பட்டது, அதில் நான் உட்காரக்கூடாது என பிடித்து தள்ளினார்கள். கமிஷன் விவகாரத்தில் தகராறுன்னு இப்போது பிரச்சினையைத் திசைமாற்றுகின்றனர். இவர்களுக்கு பின்னால் அந்த அ.தி.மு.க பிரமுகர்தான் இருக்கிறார். இது குறித்து தளபதி ஸ்டாலினை சந்தித்து புகார் செய்தோம்''’’ என்கிறார் சங்கடமாய்.
இதற்கிடையில் பூம்புகார் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாகி, அமைச்சராகிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறாராம் செந்தில்நாதன். முன்னாள் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் நம்மிடம், ""செந்தில்நாதனோட தம்பி மணி ஒருசில நாட்களுக்கு முன்பு இட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு பா.ம.க. ராமதாஸ் எதுவும் செய்யாமல் ஏமாற்றுகிறார். தியாகிகளுக்கு நான் வீடு கட்டித் தருவேன் என்று கடலூர் மாவட்டத்திற்கு கிளம்ப, அவரை மயிலாடுதுறை போலீஸார் அரெஸ்ட் செய்தனர். அப்போது பேரணியாக வந்த பா.ம.க.வினரை கடுமையாக விமர்சித்தார் மணி. பா.ம.க. இப்போதும் அ.தி.மு.க. கூட்டணியில் இருக் கிறது. அதை மறந்து கலாட்டா செய்கிறார் மணி''’என்கிறார் கவலையாய்.
இதுகுறித்து விளக்கமறிய செந்தில்நாதனைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை, அவரது ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டோம்... ’""பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்பதுபோல இப்போ ரொம்ப பணிவாகிவிட்டார். அவர்மீது சொல்லப் படும் குற்றச்சாட்டுகள், அவருக்கு வேண்டாதவர்கள் பொறாமையில கிளப்பிவிடுபவைதான். அவரது தம்பி மாற்றுக்கட்சியில் இருப்பது உண்மைதான், அது பல தலைவர்கள் குடும்பத்திலும் இருக்கிறதுதான்''’என்கிறார்.
கடும் விமர்சனத்தை சம்பாதித்துக்கொண்டிருப் பவரை மா.செ.வாக்கி, தனக்குத்தானே குழிவெட்டிக் கொள்கிறது ஆளும்கட்சி என்று அனைத்து கட்சியினரும் குற்றம் சாட்டுகிறார்கள். என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?
-க.செல்வகுமார்