கதையைத் திருடிவிட்டார் ஷங்கர்!
கதையில் ஷங்கருக்கு உரிமை இல்லை!
எங்க படத்தை முடிக்காம, வேறு படம் எடுக்க ஷங்கருக்கு தடை விதிக்கணும்.
-இப்படி... மூன்றுவிதமான வழக்குகளால் சூழப்பட்டு, விழிபிதுங்கி நிற்கிறார் டைரக்டர் ஷங்கர்.
யதார்த்தத்தையும் சினிமா நடைமுறையையும் அலட்சியப்படுத்தி வருவதால்தான் ஷங்கருக்கு இத்தனை சங்கடங்கள். அதிலும் சாமானியச் சங்கடங்கள் அல்ல... சட்டச் சங்கடங் கள் வந்தது என்கிறார்கள் திரைத்துறை வட்டாரங்களில்... முதலில் கதைத் திருட்டு விஷயங்களைப் பார்ப்போம்.
டைரக்டர் ஷங்கரின் படக் கதைகளில் கூர்ந்து பார்த்தால் எல்லாக் கதைகளிலும் Dual personality என்கிற பேஸ் இருக் கும். இப்படியான ஷங்கரின் கதையம்சத் திற்கான இன்ஸ்பிரேஷன் எதுவாக இருக்கும்.
ஒய்.ஜி.மகேந்திரனின் "யுனைடெட் அமெச் சூர் ஆர்டிஸ்ட்' என்கிற நாடகக் குழுவில் ""ரூபாய்க்கு மூன்று கொலை' என்கிற நாடகம் மிகப் புகழ்வாய்ந்தது. வீட்டில் அப்பாவியாக இருக்கும் மகேந்திரனுக்குள் இன்னொரு தாதா குணம் இருக்கும். இதில் மிகச்சிறப்பான இன்னொரு கேரக்டர், இன்ஸ்பெக்டர். இந்த ரோலில் 50 முறையாவது நான் நடித்திருப்பேன்.
""ரூபாய்க்கு மூன்று கொலை' நாடகக் கதையின் சாரம்தான் ஷங்கரின் முதல்படமான ""ஜென்டில்மேன்' நாடகத்தில் நான் செய்த வேஷம்தான், ""ஜென்டில்மேன்' படத்தில் சரண்ராஜ் செய்தது.
ஷங்கர் ஆரம்ப காலங்களில் நாடக நடிகராக இருந்தார், அதிலும் தில்லைராஜன் நாடகக்குழுவில் ஷங்கர்தான் காமெடி ஆர்டிஸ்ட். "ரூபாய்க்கு மூன்று கொலை' நாடகத்தை ஷங்கர் பார்த்திருக்கலாம்... இந்த நாடகத்தின் பேஸ்தான் ஷங்கரின் படக் கதைகளுக்கான பேஸ் என்பது என்னுடைய கணிப்பு'' -என நடிகர் ராதாரவி தனது "வாழ்க்கை வரலாறு' கர்ஜனை நூலில் குறிப்பிட்டுள்ளார். அப்பளம் விற்கும் அப்பாவி, கல்விப் புரட்சிக்காக ராபின்ஹுட் ஆகிய "ஜென்டில்மேன்' கதைக்கு இன்ஸ்பிரேஷன் எது? என யூகமாய்ச் சொல்லியுள்ளார் ராதாரவி.
ஒரு கதையின் பாதிப்பில் இன்னொரு கதையை உருவாக்கு வது படைப்புலகின் நியாய தர்மம் என்றபோதும், அப்பட்டமாகக் கதையைத் திருடிவிட்டார் என்பது போன்ற திருட்டுப் புகார்களும், வழக்குகளும் ஷங்கரைச் சுற்றிப் பரபரப்பைக் கிளப்பிக்கொண்டேதான் இருக்கின்றன.
நடிகர் ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் 1989-ல் தயாரித்த "ஒரு தொட்டில் சபதம்' படத்தை, இயக்கியவர் பாரதிமோகன்.
1990-களில் கார்த்திக் ஹீரோவாக நடிக்க, பாரதிமோகன் இயக்கத்தில் "அந்நியன்' என்ற படம் துவங்கப்பட்டது. "தினத்தந்தி' நாளிதழில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டது. சமூக சீர்கேடுகளைக் களைய இரவில் அதிரடியாகவும் பகலில் அப்பாவியாக இருக்கும் ஹீரோ பற்றிய கதை இது.
ஃபைனான்ஸ் பிரச்சினைகளால் "கார்த்திக் அந்நியன்' கைவிடப்பட்டது.
2005-ஆம் ஆண்டில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில், விக்ரம் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் "அந்நியன்' படம் வெளியிடப்பட்டதும் பதறிப்போய் நம்மிடம் ஆதாரங்களுடன் பேட்டியளித்த பாரதிமோகன், ""எனது "அந்நியன்' படக்கதை விவாதத்தில் எனது உறவினரான ஷங்கர் உதவி இயக்குநராக கலந்து கொண்டார். என் கதையின் முக்கிய விஷயங்களைச் சுட்டு அந்நியன் படமாக்கியிருக்கிறார்'' எனச் சொன்னார். (நமது ""நக்கீரன்' இதழில் அட்டைப்பட கட்டுரையாக அந்தச் செய்தி அப்போது வெளியானது)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய "எந்திரன்' படக்கதை வழக்கு பற்றிப் பார்க்கலாம்.
நக்கீரன் இதழின் முதன்மைத் துணைஆசிரியரான ஆரூர் தமிழ்நாடன், ரோபாட்டை மையமாக வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்பாக "ஜுகிபா'’என்ற சிறுகதையை எழுதினார். ரோபாட்டுக்கு மனித உணர்வுகளை உண்டாக்கினால், அது மனிதர்களிடையே என்ன மாதிரியான உணர்வுச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதுதான் அந்தக் கதையின் மையக்கரு. இது 1996 ஏப்ரல் மாத ’"இனிய உதயம்'’ இதழில் பிரசுரமானது. இதே கதை, 2007-ஆம் ஆண்டு அவரது கதைத் தொகுப்பான "திக் திக் தீபிகா'’நூலிலும் மறுபிரசுரம் ஆனது. இந்த நிலையில் 2010-ல் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த "எந்திரன்'’திரைப்படம் மெஹா பட்ஜெட்டில் வெளியானபோது, அந்தப் படத்தைப் பார்த்து அதிர்ந்துபோன தமிழ்நாடன், "இது என் கதையை அப்பட்டமாகத் திருடி எடுக்கப்பட்ட படம். எனவே எனக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் தருவதோடு, அந்தக் கதை என்னுடையதுதான் என்று அறிவிக்கவேண்டும்'’என சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்.
’’இந்த வழக்கு 50 வருடமானாலும் முடியாது, இது எங்களை ஒன்றும் செய்யாது’என்று இயக்குநர் ஷங்கர் தரப்பு, ஏகடியம் செய்ததால், கதையைத் திருடி மோசடி செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்று அவர், சென்னை எழும்பூர் குற்ற வியல் நீதிமன்றத்திலும் முறையிட்டார். இந்த வழக்குகளின்போது, அவரை மனரீதியாக நிலைகுலைய வைக்கும் முயற்சிகளும் நடந்தன. எனினும் மன உறுதியோடு விசாரணைகளை அவர் எதிர்கொண்டார்.
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வழக்கை அலட்சியம் செய்ததால், 2016 செப்டம்பரில் தயாரிப்பாளர் தரப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதித்தது உயர்நீதிமன்றம். அதேபோல், இயக்குநர் ஷங்கருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் இதே காரணத்துக்காக 2018 செப்டம்பரில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இதன்பிறகும் அவர்கள் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதற்கிடையே, "தங்கள் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் கிரிமினல் வழக்கு சட்டப்படி செல்லாது என்றும், அதற்குத் தடை விதிக்கவேண்டும்' என்றும் இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக் காலத் தடை வாங்கினர். அந்தத் தடை நீங்கிய நிலையில், இருதரப்பு வாதத்தையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, கடந்த 6.6.2019 அன்று தனது அதிரடித் தீர்ப்பை வழங்கினார். அப்போது, "இந்த வழக்கில் தயாரிப்பாளரை சேர்த்தது செல்லாது' என்று தெரிவித்ததோடு, வழக்கின் மையப் பகுதியை நாடி பிடித்துப் பார்த்து,
"படத்தின் பெரும்பாலான காட்சிகள், தமிழ்நாடனின் "ஜூகிபா' கதையை ஒத்து இருக்கின்றன. தமிழ்நாடன் தரப்பு தாக்கல் செய்திருந்த 29 ஒப்பீட்டு பாயிண்டுகளில் 16 பாயிண்டுகள் வெகுவாக ஒத்துப்போகின்றன'’என்று தெளிவாகச் சுட்டிக்காட்டியதோடு, "ஒரு படைப்பாளியின் உண்மையான திறமைக்கும் உழைப்புக்குமான ஊதியம், அவருக்குக் கிடைத்தாக வேண்டும் என்பதற்காகத்தான் காப்பிரைட் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதை நீதிமன்றம் கருத்தில் கொண்டிருக்கிறது'’என்றும் அக்கறையோடு குறிப்பிட்டிருந்தார்.
இதன்பிறகும், நீதிமன்றம் உணர்த்திய உண்மைகளை ஏற்காமல், கொரோனா நேர நெருக்கடிகளுக்கு நடுவிலும், உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்துக்கு ஓடினார் ஷங்கர். உச்சநீதி மன்றமோ, "இது தொடர்பாக உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பிலும் விசாரணை யிலும் தலையிட விரும்பவில்லை'’என்று கீழ்க் கோர்ட்டிலேயே பார்த்துக்கொள்ளச் சொல்லி, அவரது மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. " "எந்திரன்' கதையைத் தன்னுடையதுதான் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத ஷங்கர், இன்னும் எப்படி எல்லாம் வழக்கை ஜவ்வாய் இழுத்தடிக்கலாம்?' என்று காய் நகர்த்திக்கொண்டே இருக்கிறார்.
ரஜினி-டைரக்டர் ஷங்கர் கூட்டணியில் "2.ஓ' படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு அப்படியொன்றும் லாபமில்லை. தொலைத்த இடத்திலேயே தேடும்விதமாக கமல்-டைரக்டர் ஷங்கர் கூட்டணியில் "இந்தியன் 2' படத்தை தயாரித்துவந்தது லைகா. ஏற்கனவே ஷங்கரால் பட்ஜெட் எகிறிக்கொண்டே வந்தது. முன்பு ஏவி.எம். நிறுவனத்திற்கு "சிவாஜி தி பாஸ்' படத்தை எடுத்த ஷங்கர் ஏகப்பட்ட செலவு வைத்துவிட்டார். அதன்பின் ஷாருக்கான் நடிப்பில், தயாரிப்பில் "ரோபா' இந்திப் படத்தை இயக்கும் வாய்ப்பு ஷங்கருக்கு வந்தது. முந்தைய படமான சிவாஜி தயாரிப்பாளரான ஏவி.எம்.மிடம் ஒப்பீனியன் கேட்டார் ஷாரூக். பட்ஜெட்டைவிட பயங்கரமாக செலவு வைத்ததை கணக்கு எழுதி ஃபேக்ஸ் பண்ணினார். அதனால் ஷங்கரிடமிருந்து ஜகா வாங்கிவிட்டார் ஷாரூக்.
"இந்தியன்' படத்திற்கு 150 கோடி பட்ஜெட் போட்டுக் கொடுத்தார் ஷங்கர். ஷங்கருக்கு 40 கோடி சம்பளம். இதை ஏற்று 14 கோடி ஷங்கருக்கு அட்வான்ஸ் கொடுத்து படத்தை தொடங்கியது லைகா. படப்பிடிப்பு நடக்க நடக்க... செலவு வைத்துக்கொண்டே வந்தார் ஷங்கர். இப்போது 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. ஆனால் கூடுதலாக 86 கோடி... அதாவது 236 கோடி செலவாகியிருக்கிறது.
செலவைக் குறைக்கச் சொன்னது சம்பந்தமாக ஷங்கருக்கும் லைகாவுக்கும் லடாய். இது போதாதென்று படப்பிடிப்பில் கிரேன் விபத்தில் மூன்றுபேர் இறந்த விஷயத்தில், லைகாவை குறை சொல்லி தப்பிக்க நினைத்தார் கமல். ("இந்தியன் 2'வில் வரும் சின்ன கமா போல...) ஆனால் "நீண்டகால அனுபவம் கொண்ட கமல், படப்பிடிப்பில் பாதுகாப்பைக் கண்காணித்திருக்க வேண்டாமா?' என கடுமையாக கேள்வி எழுப்பியது. இதில் கமலுக்கு கடுப்பு. அதனால் ஷங்கர்-லைகா சண்டையை யார் வீட்டுச் சண்டை என எண்ணி, "பிக்பாஸ், தேர்தல், சொந்தப்படம் விக்ரம்' என வேறு வேலை பார்க்கிறார் கமல்.
"போட்ட முதலீடு வட்டி போட்டு எகிறிக்கொண்டிருக்கிறது' என கவலைப்பட்ட லைகாவுக்கு மேலும் அதிர்ச்சியாக தெலுங்குப் படம் ஒன்றை இயக்கப்போவதாக அறிவித்தார் ஷங்கர். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய லைகா, "எங்களோட "இந்தியன்-2'வை முடிச்சுத் தராம ஷங்கர் வேறு படம் இயக்கத் தடை விதிக்கணும்' என வழக்குப் போட்டனர். தடை விதிக்க நீதிமன்றம் மறுத்த நிலையில்... "" "அந்நியன்' படத்தை இந்தியில் ரன்வீர்சிங்கை வைத்து இயக்கப்போறேன்'' என அறிவித்தார் ஷங்கர். பதறிய லைகா... ஷங்கருக்கு தடை கேட்டு நீதிமன்றம் மறுத்த நிலையில்... தடை கேட்டு மேல்முறையீடு செய்துள்ளது.
அந்நியன் கதையை பாலிவுட்டில் படமாக்கும் ஷங்கரின் அறிவிப் பால் ஆத்திரமானார் "அந்நியன்' தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். "நீங்க பாய்ஸ் படம் எடுத்து பேரு கெட்டு, மன உளைச்சல்ல இருந் தப்போ... உங்கள கூப்பிட்டு அந்நியன் பட வாய்ப்பு குடுக்கல... குடுக்கல...' என ஆஸ்கர் ரவியும், "என்னோட "அந்நியன்' மூலம் நீங்க நல்ல லாபம் பார்க்கல... பார்க்கல...' என ஷங்கரும் மாறி மாறி கடிதம் எழுதியிருக் கிறார்கள். எழுத்தாளர் சுஜாதாவிடம் "அந்நியன்' கதையை முழுத் தொகை கொடுத்து வாங்கினேன். ஆதாரம் இருக்கு. கதை எனக்குச் சொந்தம்'' என்கிறார் ரவி.
"சுஜாதா வசனம் மட்டுமே எழுதினார். கதை திரைக்கதை கேரக்டர் சம்பந்தமாக சுஜாதா எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை' என்கிறார் ஷங்கர்.
""சார், ஷங்கரை டைரக்டர்னு மட் டும் படத்துக்கு சர்வீஸ் செய்யணும்ங்கிற பேர்லதான் மூன்றரைகோடி ரூபாய் சம்பளம் பேசி அக்ரிமெண்ட் போட்டோம். இதோ அக்ரிமெண்ட் காப்பி'' என நம்மிடம் டாகுமென்ட்டை கொடுத்து, ""சுஜாதா சார் சொன்ன கதைக்கருவை அஸிஸ்டெண்ட் டைரக்டர்களை வச்சு ஒரு வருஷம் டிஸ்கஷன்பண்ணி செலவு செஞ்சுதான் கதையை உருவாக்கினோம். பொதுவா சினிமாவுல ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் இருக்கு. ஒரு படம் வேற மொழியில் தயாரானா ராயல்டி (50:50) ஃபிப்டி ஃபிப்டி ஷேர் இருக்கு. ஆனா நாகரிகமே இல்லாம, எனக்குத் தெரியாம ஷங்கர் அந்நியன் கதையை ரீ-மேக் செய்றது சட்டவிரோதம்'' என்றார் ரவி.
தொழில் தர்மம் மீறுவது, அடுத்தவர் உழைப்பை, சிந்தனையைச் சுரண்டுவது, நன்றி மறப்பது... இப்படியாகத் தனக்குள் இருக்கும் Multiple personality-யை சான்ஸ் தர்றவங்ககிட்டயே காட்டலாமா?
என்னங்க சார் உங்க நியாயம்?