"என் மகளை கொலை செய்த என் மருமகன், தற்கொலை செய்து கொண்டதாகக் கூறிய நிலையில், அவன் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது'' என்றார் குன்றத்தூரை சேர்ந்த பூபதி.
அவர் நம்மிடம், "நான் எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருக்கிறேன். எனது மனைவி சாந்தகுமாரி. எங்களுக்கு இரண்டு மகள்கள். எங்கள் முதல் மகள் கீர்த்தனாவுக்கு, பூந்தமல்லியை அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் மகன் பன்னீர்செல்வத்திற்கு, கடந்த 2017 செப்டம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்துவைத்தோம். எனது மாப்பிள்ளை, அவருடைய தம்பி மணிகண்டனுடன் சேர்ந்து பில்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்துவந்தார்கள். என் மகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமைக்கு ஆளானார்.
இந்நிலையில், எனது மாப்பிள்ளையின் தம்பி மணிகண்டனுக்கு திருமணமாகி குழந்தைகள் அடுத்தடுத்து பிறக்க... அதையும் சொல்லிக்காட்டி, எங்கள் மகளை ரொம்பவே கீழ்த்தரமாக நடத்தினார்கள். அதற்கு மேல் மனது பொறுக்காமல், மறுநாளே மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று, மாப்பிள்ளையின் உறவினர் மனோகர் என்பவரை வைத்து பேசி, எங்கள் மகளை எங்கள் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டோம்.
பிப்ரவரி 15ஆம் தேதி, கீர்த்தனாவை பூந்தமல்லியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் எனது மாப்பிள்ளை பன்னீர்செல்வம் எங்கள் வீட்டிற்கு வந்து என் மனைவியிடம் சண்டை போட்டதால், உடனடியாக திரும்பிவந்து, மாப்பிள்ளையை சமாதானம் செய்து, எங்கள் மகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்த பின்பு, சில நாட்களில் அனுப்புவதாகக் கூறினோம். இந்த நிலையில், அன்று மாலை 5 மணியளவில், என் வீட்டின் முதல் தளத்திலுள்ள அறையில் கீர்த்தனாவும், மாப்பிள்ளையும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். திடீரென கீர்த்தனாவின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிச்சென்று பார்த்தால், வீட்டினுள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அந்த பன்னீர்ச்செல்வம் சட்டை முழுக்க ரத்தக்கறையுடன் பால்கனி வழியாக தப்பி ஓடினார். உடனே எதிர் வீட்டிலுள்ள இளைஞர்களை பால்கனி வழியாக வீட்டினுள் சென்று கதவை திறக்கச்சொன்னோம். அங்கே எங்கள் மகள் கீர்த்தனா கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
மகளைக் காப்பாற்றுவதற்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கும், பின்னர் பார்வதி மருத்துவமனைக்கும் கொண்டுசென்று தீவிர சிகிச்சையளித்தோம். இந்நிலையில், தப்பிச்சென்ற மாப்பிள்ளை பன்னீர்செல்வத்தின் தம்பி மணிகண்டன், ஒரு காரில் மாற்றுத் துணியுடன் குன்றத்தூர் பைபாஸ் அருகே வந்ததாகவும், அங்கு சட்டையை மாற்றிக் கொண்டு, பன்னீர்செல்வம் தப்பிச் சென்றதாக வும் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து, குன்றத்தூர் காவல்நிலையத் தில் இன்ஸ்பெக்டர் கண்ணனிடம் புகாரளித் தேன். எஸ்.ஐ. பரத், ஹாஸ்பிடலுக்கு வந்து விசாரித்துச் சென்றார். அடுத்து என் மகளின் உடல்நிலை கோமாவுக்கு சென்றதால் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிப்ரவரி 21ஆம் தேதி மகளின் உயிர் பிரிந்தது. என் மகளை கொலை செய்த பன்னீர்செல் வத்தை போலீசார் கைது செய்யாமல் காலம் கடத்திவந்தனர். இதையடுத்து, முதல்வர் தனிப்பிரிவு, ஹியூமன் ரைட்ஸ் கமிஷன், மத்திய, மாநில மகளிர் அமைப்பிற்கும் புகாரனுப்பியும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் கடந்த 2021, மார்ச் 31ஆம் தேதி, பன்னீர்செல்வம் அடையாளம் தெரியாத பிணமாக மதுரை யை அடுத்த கே.புதூர் அருகேயுள்ள கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. அப்போது அவரின் ரத்த மாதிரிகளை டி.என்.ஏ. டெஸ்டுக்கு அனுப்பியதாகவும், பிணத்தை பன்னீர்செல்வத்தின் தம்பி மணிகண்டன் அடையாளம் காட்டியதாகவும், பின்னர் தகனம் செய்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந் நிலையில், குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் மாற்றப்பட்டு சந்துரு என்பவர் வந்தார். அவரிடம் முறையிட்டும் பலனில்லை. இந்நிலையில், டி.என்.ஏ. டெஸ்ட்டுக்கு சென்ற பன்னீர்செல்வத்தின் ரத்த மாதிரி முடிவை எங்களுக்கு தராததால், அதனை பெறுவதற்கு கோர்ட் வழியாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் முயன்றதில், காவல்துறை அளித்த பதிலில், பன்னீர்செல்வத்தின் ரத்த டி.என்.ஏ., அவரது பெற்றோரின் டி.என்.ஏ.வுடன் ஒத்துப்போகாதது தெரியவந்தது. எனவே என் மகளை கொன்ற பன்னீர்செல்வம் எங்கோ மறைந்து வாழ்வது ஊர்ஜிதமாகிறது. அதற்கு உடந்தையாக காவல்துறையும் இருப்பது வேதனையளிக்கிறது.
அப்படியானால் கால்வாயில் இறந்து கிடந்தவர் யார்? யார் அதைப் பார்த்து தகவல் தெரிவித்தது? மண்கண்டன் ஏன் தவறாக வாக்குமூலம் அளித்தார்? போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு குற்றவாளியை மறைக்கப் பார்க்கிறார்களா? என பல கேள்விகள் எழுகின்றன. எங்கள் மகளின் கொலைக்கு நீதி வேண்டும்'' என்றார் கீர்த்தனாவின் தந்தை பூபதி.
குன்றத்தூர் காவல்நிலையத்தில் விசாரித்த போது, "இவ்வழக்கை விசாரித்த ஆய்வாளர்கள் கண்ணன், சந்துரு இடமாற்றம் செய்யப்பட் டுள்ளதாகவும், பன்னீர்செல்வம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய காவல்துறை ஆய்வாளர் தெரிவித்தார்.
குற்றவாளியை கைது செய்யாமல், இறந்துவிட்டதாக நாடகமாடுவதன் பின்னணியில் யாரெல்லாம் இருக் கிறார்கள் என்பது தெரியவேண் டும், குற்றவாளி கைது செய்யப் பட வேண்டும். அதுவே நீதி!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/kundrathoor-2026-02-05-17-57-29.jpg)