"ஹலோ தலைவரே, தமிழகத்தின் பல்ஸ் ரேட்டுக்குத் தக்கபடிதான், அகில இந்திய அரசியல் தலைவர்கள் இங்க பிரச்சாரப் பயணத்தைத் தீர்மானிக்கிறாங்க.''”
"ஆமாம்பா, தமிழகத்தின் நிலவரம் தெரிஞ்சிதான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் வரத் தயக்கம் காட்டறாராம்.''”
"உண்மைதாங்க தலைவரே, அமித்ஷாவை தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் பிரச்சாரத்துக்கு அழைத்தபோது, தமிழகத்தில் தி.மு.க,. கூட்டணிக்கு சாதகமான நிலை இருக்கும்போது அங்கே எதற்கு வீணாக நான் வந்து என் நேரத்தை விரயம் செய்ய வேண் டும்னு அவர் கேட்டாராம். எனி னும், நீங்கள் வந்தால் சில தொகுதி களையாவது நாம் கைப்பற்றலாம் என்று சொல்லி அவரை வலியுறுத்தி அழைத்திருக்கிறார்கள். எனவே அவர் இரண்டொரு நாளில் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறாராம். இதேபோல், தமிழகத்தின் மீது தீவிரமாகக் கண் வைத்திருக்கும் மோடியும் மீண்டும் இங்கே பிரச்சாரத்துக்கு வருகிறார். இதைப் பார்த்த தமிழக காங்கிரஸ், மோடியும். அமித்ஷாவும் வந்து சென்றபிறகு தமிழகம் வந்து, அவர்கள் வந்த சுவடைக் கலைத்துச் செல்லுங்கள் என்று ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்களாம். தமிழகத்தின் பல்ஸ்ரேட், முதல்வர் ஸ்டாலினால் நன்றாகவே இருக்கிறதே என்று கொஞ்சம் தயக்கம் காட்டிய ராகுல், 12ஆம் தேதி தமிழகம் வர சம்மதித்திருக்கிறாராம்.''”
"அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரச்சாரக் களத்தில் ஒரு அணுகுண்டை வீசிப் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, நெல்லை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்காக பிரச்சாரம் செய்துவரும் அனிதா, பரப்பாடி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, என்ன நினைச்சாரோ தெரியலை. திடீரென ’முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். அதில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த அப்பாவிகள் சிலரைச் சிக்கவைத்துவிட்டார்கள். இந்த உண்மை அந்த சமூகத்தினருக்கும் தெரியும். நாடார் சமூகத்தினருக்கும் தெரியும். உண்மையில் ஒரு முன்னாள் அமைச்சர்தான் இந்தக் கொலையின் சூத்திரதாரி. இந்தக் கொலையில் நீதி கிடைக்க, அதை மறு விசாரணை செய்தாகவேண்டும்’என்று ஒரு அதிரடி குண்டை வெடிச்சி, களத்தைப் பரபரப்பாக்கியிருக்கார்.''”
"சரிப்பா, அந்த விவகாரத்தில் அவர் யாரைக் குற்றம் சாட்டுறாராம்?''”
"இதுபத்தி நானும் விசாரிச்சேங்க தலைவரே,அமைச்சர் அனிதா குற்றம் சாட்டுவது, அந்தத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரனைத் தான்னு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சொல்றாங்க. அமைச்சரின் இந்தப் பேச்சு அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்க, இதைத் தேர்தல் ஆணையமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறதாம். இத்தனை நாளைக்கு அப்புறம் இந்த விவகாரத்தை அமைச்சர் ஏன் திடீர்னு கிளப்பணும்ங்கிற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்திருக்கு. இந்த விவகாரத்தை இப்போது தி.மு.க. மட்டுமல்லாது அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய மூன்று தரப்பும் அதிர்ச்சியுடன் விவாதிக்கத் தொடங்கியிருக்குதாம். தேர்தல் முடிந்த பிறகு ஆலடிஅருணா கொலை வழக்கு மீண்டும் உயிர் பெறும்ங்கிற பேச்சு, இப்ப பரவலா அடிபடவும் ஆரம்பிச்சிருக்கு.''”
"தேர்தல் ஆணையம், ரெய்டு தொடர்பான பல தகவல்களை மறைப்பதாகச் சொல்கிறார்களே?''”
’"தமிழகத்தில் தினமும் பல்வேறு இடங்களில், தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் அதிரடி காட்டிவருகிறார்கள். நிறைய சட்ட விரோத கரன்ஸிகள் இதன் மூலம் சிக்கியும் வருகிறது. இப்படியான அனைத்துத் தகவல்களையும் தேர்தல் ஆணையம், ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், ஏதேனும் ஓரிரு சம்பவங்களை மட்டுமே வெளியில் தெரிவிக்கும் தேர்தல் ஆணையம், பல சம்பவங்களை மூடி மறைத்துவிடுகிறதாம். குறிப்பாக, கடந்த 5ஆம் தேதி, சென்னை கோட்டூர்புரம் பகுதியில் ஒரு தொழிலதிபர் வீட்டில், காலையிலிருந்து இரவுவரை வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. ஆனால், இதைப்பற்றித் தேர்தல் ஆணையம் மூச்சுவிடவில்லை. இது குறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் விளக்கம் பெற, நாம் பலமுறை தொடர்பு கொண்டும், அவர் போனை எடுக்கவே இல்லை. இப்படிப்பட்ட பல சம்பவங்கள் தேர்தல் அதிகாரி சாஹுவிற்குச் சென்றாலும் அவர் நடவடிக்கை எடுப்பதில்லையாம். அதனால், அவர் மீதும் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்துக்குப் புகார்கள் பறந்தபடி இருக்கிறதாம்.''”
"நடிகை குஷ்பு, பிரச்சாரக் களத்துக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டாரே?''”
"பா.ஜ.க.வில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு, தேர்தல் பிரச்சாரத்துக்கு வர இயலாது என்று சொல்லிவிட்டார். பொதுவாக எதா வது தடாலடி யாகப் பேசி, பரபரப்பை ஏற்படுத்துவது குஷ்புவின் வழக்கம். இவரது இப்படிப்பட்ட பேச்சையும் ரசிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. அதனால், அவரது தேர்தல் பிரச்சாரத்தை பா.ஜ.க. தரப்பு ஆர்வமாக எதிர்பார்த்தது. ஆனால் குஷ்புவோ, ‘எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் என்னால் பிரச்சாரம் செய்ய இயலாது’ என்று பா.ஜ.க. தரப்பிற்கு பதில் கொடுத்திருக்கிறார். உண்மையில், அவர் உடலுக்கு என்ன? என அவர் தரப்பில் விசாரித்தபோது, அவர் இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க பெரிதும் ஆசைப்பட்டார். ஓ.கே. என்று ஆரம்பத்தில் சொன்னவர்கள். கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார்கள். அதில் அவர் அப்செட் டாகிவிட்டார். இந்த நிலையில், இலவசமாக அவரை பா.ஜ.க. தரப்பு பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைத்தது. அதனால், உடல் நிலை சரியில்லை என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார் என்கிறார்கள்.''”
"கடலூரில் பா.ம.க. தரப்பு, காங்கிரஸ் பக்கம் சைடு அடிப்பதாக செய்தி பரவுகிறதே?''”
"கடலூரில் தி.மு.க. கூட்டணியில் காங் கிரஸ் வேட்பாளராக விஷ்ணுபிரசாத் போட்டி யிடுகிறார். இவர் பா.ம.க. அன்புமணியின் மைத்துனர் ஆவார். இவரை எதிர்த்து பா.ஜ.க. தரப்பில் இயக்குநரும் நடிகருமான தங்கர்பச்சான் களத்தில் இருக்கிறார். இந்தத் தொகுதியில் அவருக்கு வேலை பார்க்கவேண்டிய பா.ம.க.வினர், அன்புமணியின் மச்சான் என்பதற்காக விஷ்ணுபிரசாத் பக்கம் சைடு அடிக்கிறார்களாம். இதற்குக் காரணம், அன்புமணியின் குடும்பப் பாசம் என்கிறார்கள். நிலவரம் இப்படி எக்குத்தப்பாகப் போவதால், ’எனக்கு எதிரில் நிற்கப்போவது அன்புமணியின் மச்சான் என்று தெரிந்திருந் தால், நான் களத்துக்கே வந்திருக்க மாட்டேனே’ என்று பச்சான் புலம்பு கிறாராம். பாட்டாளிகளின் நிலைமை இங்கே இப்படி இருக்க, தருமபுரியிலோ பா.ம.க. சார்பில் போட்டியிடும் சௌமியா வுக்காக, அவரது கணவர் அன்பு மணியும் அவ ரது மகள் களும் அவரது குடும்ப உறவு களும் தீவிரமாகக் களமிறங்கி, மற்ற கட்சி களில் இருக்கும் வன்னிய சமூகத்தினரின் மனதைக் கரைத்து வருகிறார் களாம்.'' ”
"இப்போது ’லிவ்விங் ரூம்’ என்ற பெயர், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக அடிபடுகிறதே?''”
"சென்னையில் மேல்தளம் இடிந்து விழுந்ததன் மூலம் உயிர்ப்பலி வாங்கிய, செக்மேட் பார் குறித்த ஏடாகூடத் தகவல்கள் வந்தபடியே இருக்கின்றன. 18 அறைகளுக்குக் குறையாமல் இருக்கும் நவீன வசதிகள் கொண்ட பார்களுக் குத்தான், எஃப்.எல்-2 என்கிற லைசென்சை வழங்க முடியுமாம். ஆனால் இந்த வசதிகள் சரிவர இல்லாத செக்மேட் பாருக்கு, இதன் உரிமையாளரான கரிகாலன், தன் அரசியல் செல்வாக்கை வைத்து, இந்த லைசென்ஸை வாங்கியிருக்கிறார் என்கிறார்கள். இதன் தரம் குறித்து உரிய முறையில் அதிகாரிகள் ஆராயாததால்தான், அது இடிந்து விழுந்து உயிர்ப்பலி வாங்கியிருக்கிறது என்கிற புகாரும் எழுந்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க, இதேபோல் ‘லிவ்விங் ரூம்’என்ற பெயரில் அதிநவீன பார்கள், சென்னை, கோவை, பெங்களூர் ஆகிய இடங்களில் முளைத்திருக்கின்றன. அரசியல் பெரும்புள்ளிகள் சந்திக்கும் ரகசிய இடமாக இந்த பார்கள் இருந்து வருகிறதாம். பல அண்டர்கிரவுண்ட் டீலிங்குகளும் இங்கு நடக்குமாம். குறிப்பாக அரசியல் பெரும்புள்ளிகளுக்காகவே கோவை பாரில் அண்டர்கிரவுண்ட் ரகசிய அறையும் இருக்கிறதாம். தி.மு.க. முக்கிய புள்ளிக்கு மிக நெருக்கமான கமலக்கண்ணன் என்பவர்தான் இந்த பார்களை நடத்திவருகிறாராம். இந்த பார்கள் மீதும் அதிகாரிகள் கண் வைக்கவேண்டும் என்கிறார்கள் பலரும்.''”
"செக்மேட் பாரை நடத்தும் மணல் கரிகாலனின் கவனம், தொகுதி மீது குவிந்திருக் கிறதாமே?''”
"அண்மையில் அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டுகளுக்கு ஆளான இந்த கரிகாலனின் மணல் பிஸினஸ், மீண்டும் பழையபடி சூடுபிடித்திருக்கிறதாம். இதுதவிர தமிழகம் முழுக்க பரவலாக கிராவல் குவாரிகளையும் இவர் நடத்தி வருகிறாராம். தன் தொழிலுக்கு ஆதரவு காட்டுகிற அந்த பா.ஜ.க. நபர் போட்டியிடும் தொகுதியில் மணல் கரன்ஸி அதிக அளவுக்குப் பாய்கிறதாம். மணல் கரன்ஸி, அங்கெல்லாம் ஆறாகப் பாய்வதைப் பார்த்தும், தேர்தல் அதிகாரிகள் அமைதி காக்கிறார்களாம்.''”
"தேர்தல் ஆணையம் ஒரு விழிப்புணர்வுத் திரைப்படத்தை மக்களிடம் திரையிட்டு வருகிறதே?''”
"நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு இருக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன், ஒரு பிரச்சார விழிப்புணர்வுப் படத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்கிறது தமிழகத் தேர்தல் ஆணையம். அது குறித்து விசாரித்தபோது, ட்வெண்டி ஒன் புரொடக்சனின் நிறுவனரான பரத் கிஷோர், ’"மாற்றத்தின் சக்தி உங்கள் கையில்'’ என்கிற விளம்பரப் படத்தைத் தயாரித்திருக்கிறார். நாம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் இந்தப் படத்தில் மிகவும் அழுத்தமாக உணர்த்தி யிருக்கிறார். இதில் திரைப் பிரபலங்களான படவா கோபி, ராகுல் தத்தா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ராஜ்ஈஸ்வர் என்பவருடன் இணைந்து பரத்கிஷோரே இயக்கியும் இருக்கிறாராம். இந்த விளம்பரப் படம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த தமிழக தேர்தல் ஆணையம், பரத்கிஷோரை நேரில் அழைத்துப் பேசி, அந்த விழிப்புணர்வுப் படத்தை வாங்கி, அதை மக்களிடம் கொண்டு செல்கிறதாம். இதில் கவனிக்கவேண்டிய விசயம் என்னவெனில், 25 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தை, தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதால் வெறும் இரண்டரை லட்ச ரூபாய்க்கு கொடுத்திருக் கிறாராம் பரத்கிஷோர்.''”
"தி.மு.க. தரப்பைக் குறிவைத்தும் அதிரடி ரெய்டுகள் நடந்திருக்கே?''”
"திருச்சி தொகுதியில் களமிறங்கிய அ.ம.மு.க., வேட்பாளர் செந்தில்நாதன், தனது வாக்குறுதி7களைப் பட்டியலை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தொட்டியம் எக்ஸ் எம்.எல்.ஏ. ராஜசேகர், ’"விரைவில் அமைச்சர் நேரு திருச்சியை விட்டே ஓடப்போகிறார். அமலாக்க துறையும் வருமானவரித்துறையும் அவரை இனி விட்டுவைக்காது'’ என்று எச்சரிக்கை விடுத்தார். அவர் அப்படி எச்சரித்த மாதிரியே, திருச்சியில் அமைச்சர் நேருவுக்கு நெருக்கமாக இருப்பவர்களைக் குறிவைத்து அதிரடி ரெய்டுகள் நடக்கத்தொடங்கின. நீர்வள ஆதாரத் துறையின் மூத்த பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டில் வருமானவரித் துறையினர் அன்றே அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். அதேபோல், திருச்சி ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. திருச்சியில் நடக்கும் பெரும்பாலான காண்ட்ராக்டுகளை, இவர்தான் மற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பா ராம். அந்த அளவிற்கு ஈஸ்வரமூர்த்தி செல்வாக்கு பெற்றிருந்தாராம். இங்கெல்லாம் வாக்காளர் களுக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று, ஒரு தி.மு.க. பிரமுகரே போட்டுக் கொடுத்த தன் பேரில்தான் இந்த ரெய்டு நடவடிக்கைகள் பாய்ந்ததாம்.''”
"ஓஹோ...''”
"அதேபோல் அறந்தாங்கி நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்களான ’ஸ்ரீஇன்ஃப்ரா டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவன உரிமையாளர்கள் ரவி, தியாகராஜனின் திருச்சி வீடு மற்றும் அலுவலகம், தர்மபுரி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் இருந்த இவர்கள் தொடர் புடைய இடங்கள் ஆகியவற் றிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இதே போலவே, மற்றொரு அமைச்சருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களும் வருமான வரித்துறையினரால் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சோதனைகளின்போது நிறைய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறுகிறார்கள். வருமானவரித்துறையினரின் இந்த தொடர் சோதனையின் மூலம், தி.மு.க. தரப்பின் தேர்தல் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று திட்டமிடுகிறதாம் டெல்லி.'”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தேனியில் டி.டி.வி. தினகரன், களமிறங்கியதால் அங்கே கரன்ஸி மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதாம். கடந்த தேர்தலில் இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ்.சை, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் இங்கு தி.மு.க.வில் களமிறங்கியிருக்கும் தங்க.தமிழ்ச்செல்வன், நிறைய போராடியாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறாராம். இவரது வியூகங்கள் கரன்ஸி பலத்தை வெல்லுமா? என்ற திக்திக்கில் இருக்கிறார்களாம் உடன்பிறப்புகள்.''