ண்ணா பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையின் வலையில் சிக்கவிருக்கிறது தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம். தமிழக உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது சென்னை கிண்டியிலுள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககம். இதன் கீழ்தான் தமிழகம் முழுவதுமுள்ள பாலிடெக்னிக்குகள் இயங்குகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தை தவிர்த்து தமிழகத்திலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வுகளும் இட மாறுதல்களும் இவ்வியக்ககத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 329 ஆசிரியர் பணியிடங்களை பொதுகலந்தாய்வு (கவுன்சிலிங்) மூலம் இடமாறுதல் செய்யலாம் என கடந்த 7-ந்தேதி அரசாணை பிறப்பித்தது உயர்கல்வித் துறை.

golmal

இவ்வியக்ககத்தின் ஆணையரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேகானந்தனோடு கலந்து பேசி கவுன்சிலிங்கை 21-ந் தேதி வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்கிறார் உதவி இயக்குநர் (திட்டம்) ஸ்ரீராம்பாபு. ஆனால், இந்த முடிவை உடனடியாக வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தாமல், 21-ந்தேதி (செவ்வாய்) நடக்கத் தீர்மானித்துள்ள கவுன்சிலிங்கை 18-ந் தேதி (சனிக்கிழமை) பதிவேற்றம் செய்தார் ஸ்ரீராம்பாபு. 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்களும் (சனி, ஞாயிறு) விடுமுறை நாட்கள் என்பதால் பொறியியல் கல்லூரிகளின் பிரின்சிபால்களுக்கு இது தெரிய வரவில்லை. திங்கட்கிழமை (20-ந் தேதி) காலையில் கல்லூரிகளுக்கு வந்த பிறகு, வெப்சைட்டை ஓப்பன் பண்ணியபோதே கவுன்சிலிங் விசயம் பிரின்சிபால்களுக்கு தெரிய வருகிறது. அதிர்ந்து போன கல்லூரி முதல்வர்கள், அவசரம் அவசரமாக ஆசிரியர்களுக்கு இதனை தெரிவித்தனர்.

srirambabu

சென்னையில் 21-ந்தேதி நடந்த கவுன்சிலிங்கில் 329 இடங்களுக்கு 72 பேர் மட்டுமே வந்திருந்தனர். அதாவது, குறுகிய அவகாசத்தால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதில்தான் ஏகத்துக்கும் ஊழல் நடந்துள்ளது என்கிற கல்வித்துறை அதிகாரிகள், கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட 72 பேருக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு முன்பாகவே தகவல் தந்துவிட்டார் உதவி இயக்குநர் ஸ்ரீராம்பாபு. அவர்கள் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் கிடைத்துவிட்டது. ஒவ்வோர் இடத்தின் தன்மைக்கேற்ப 3 முதல் 5 "எல்' வரை இந்த இடங்கள் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்தபட்சம் 2 கோடியே 16 லட்சம்வரை ஊழல் நடந்துள்ளது. மீதமுள்ள 257 இடங்களுக்கு பேரங்கள் துவங்கி விட்டன. அரசின் அனைத்து துறைகளும் ஆன்-லைன் கவுன்சிலிங், இ-டெண்டர் முறைகளுக்கு மாறிவரும் சூழலில், தொழில்நுட்ப கல்வி இயக்ககமான டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டே டெக்னிக்கலுக்கு மாறாமல் இருப்பதற்கு காரணமே ஊழல்களுக்காகத்தான்‘’ என்கிறார்கள்.

தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் விசாரித்தபோது, ""சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் கமிஷனரான விவேகானந்தன் ஐ.ஏ.எஸ்.சிடம் கூடுதல் பொறுப்பாக எங்கள் துறையை ஒப்படைத்திருக்கிறது அரசு. அவர் எப்போதாவதுதான் எட்டிப்பார்க்கிறார். அனைத்து அதிகாரத்தையும் உதவி இயக்குநர் ஸ்ரீராம்பாபுவிடம் விவேகானந்தன் கொடுத்திருப்பதால், அவர் வைப்பதுதான் சட்டம். ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்ரீராம்பாபுவைக் கண்டு அஞ்சுகிறது.

கவர்னரின் செக்ரட்டரியாக தற்போதிருக்கும் ராஜகோபால் ஐ.ஏ.எஸ்., சில வருடங்களுக்கு முன்பு இயக்ககத்தின் கமிஷனராக இருந்தார். அப்போது, ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு இணைப்பு அங்கீகாரம் தொடர்பான கோப்பில் ஸ்ரீராம்பாபு நடத்திய ஊழல் விவகாரங்களைக் கண்டுபிடித்து அவரை இயக்ககத்தை விட்டே துரத்தியடித்தார். பின்னர் கமிஷனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை கவனித்து, மீண்டும் உதவி இயக்குநராக (திட்டம்) வந்துவிட்டார் ஸ்ரீராம்பாபு. தற்போதைய கமிஷனர் விவேகானந்தனை ஸ்ரீராம்பாபு கைக்குள் போட்டுக்கொண்டதால் இயக்ககத்தில் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தையே மிஞ்சுகிற அளவுக்கு இங்கேயும் பேப்பர் சேஸிங் ஸ்பீடாக நடக்கிறது. அமைச்சர்-கமிஷனர் பெயரைச் சொல்லி, வசூல்வேட்டையை நடத்தியுள்ளார். உயர்கல்வித் துறைக்கும் லஞ்சஒழிப்புத் துறைக்கும் புகார் பறந்துள்ளது''‘என்கிறார்கள் நேர்மையான பேராசிரியர்கள்.

இதுகுறித்து கருத்தறிய ஸ்ரீராம்பாபுவை தொடர்புகொண்டபோது, அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது. கமிஷனர் விவேகானந்தனை தொடர்புகொண்டபோது நமது லைனை அவர் அட்டெண்ட் பண்ணவே இல்லை.

-இரா.இளையசெல்வன்