மிழ்நாட்டில் சமீபகாலமாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் விரும்பத் தகாத செயல்களால் இளைய சமுதாயம் சீரழிவுப் பாதையை நோக்கிப் போகிறதோ என்ற அச்சம் பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் சிகை அலங்காரம் என்ற பெயரில் பலவிதமாக முடிவெட்டி வருகின்றனர். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் அதனைக் கண்டிக்கும்போது, மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்களோடு அவ்வப்போது பிரச்சனைகளும் எழுகின்றன. இப்படியான சிகை அலங்காரத்தைக் கண்டித்ததற் காக ஒரு மாணவன் தற்கொலை செய்ய, தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

stt

புதுக்கோட்டை மாவட்டம் விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையா. அவரது மகன் மாதேஸ்வரன் (17). மச்சுவாடி முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கும் இம்மாணவன், கடந்த செவ்வாயன்று தேர்வெழுத வந்தபோது, அவனது தலை முடியை புதுமாடலாக வெட்டி யிருந்ததைப் பார்த்த தலைமை யாசிரியர் சிவப்பிரகாசம், முடியை நன்றாக வெட்டியபின் வந்து தேர்வெழுதுமாறு கண்டித்து அனுப்பியுள்ளார். அம்மாணவனோடு சேர்த்து இன்னொரு மாணவனையும் இதுபோல் அனுப்பியிருக்கிறார். ஒரு மாணவனின் பெற்றோர், தங்கள் மகனுக்கு நன்முறையில் தலைமுடியை வெட்டிக்கொண்டு வந்து பள்ளியில் விட்டுள்ளனர். ஆனால் மாணவன் மாதேஸ்வரனோ, காலையில் பள்ளி சென்றதோடு வீடு திரும்பவில்லை. அவனைத் தேடிய பெற்றோருக்கு பள்ளியில் நடந்த பிரச்சனை தெரியவர, மாதேஸ்வரனின் சகோதரி, வகுப்பு ஆசிரியையையும், தலைமை ஆசிரியரையும் செல்போனில் தொடர்புகொண்டு விசாரித்ததற்கு, தலைமுடியை நன்கு வெட்டிவருமாறு காலையிலேயே அனுப்பிவிட்டதைத் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு அவனது சகோதரி, காலையிலேயே அவனிடம் "இப்படியெல்லாம் வெட்டிக் கிட்டு பள்ளிக்குப் போகாதே" என்று அவனிடம் சொன்னேன். அவன்தான் கேட்காமல் பள்ளிக்கு வந்தான். அவனை திருப்பியனுப்பும்போது பெற்றோரிடம் சொல்லியிருக்க வேண்டாமா சார்? இப்போ அவனைக் காணவில்லை. நான் போலீசில் புகார் கொடுக்கப் போறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

st

Advertisment

தொடர்ந்து மாணவன் மாதேஸ்வரனை தேடியபோது, பள்ளி அருகிலுள்ள ஒரு மரத்தில் சடலமாகத் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த கணேஷ் நகர் போலீசார், மாணவனின் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி, மாதேஸ்வரன் உறவினர்களும், பள்ளி மாணவர்களும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், மாணவனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் சிவப்பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலமாக ஆசிரியர்கள், மாணவர்களைக் கண்டிப்பதை பெற்றோர்களே விரும்பாத நிலையில் இருப்பதால், மாணவர்களும் அதேபோல ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்க மறுப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி ஒழுக்கத்தை கடைப்பிடிக்கச் சொன்ன தலைமை யாசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், தலைமை ஆசிரியர் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் மாநிலத் தலைவர் தங்கமணி தலைமையில் ஏராளமான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், "புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கும் பள்ளித் தலைமையாசிரியருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி பள்ளி நலன் கருதி மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டை நெறிப்படுத்தும் நோக்கில் சிகை அலங்காரத்தை சரி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர் எதிர்மறையாக எடுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்கொலை சம்பவம் பள்ளிக்கு வெளியே நடந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். எதிர்கால சமுதாய நலன் கருதி, வளமான சமுதாயம் அமைந்திட தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறோம்' என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

st

இதேபோல புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கல்விக்கூடங்களிலேயே கஞ்சா, மதுபான பயன்பாடு நுழைந்துள்ளது. பாடவேளை யிலேயே கஞ்சாவை பயன்படுத்தும் மாணவர் களைத் தட்டிக்கேட்க முடியாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். மீறி தட்டிக்கேட்டால் ரவுடிகளைப் போல் ஆசிரியர்களுக்கே மிரட்டல் விடக்கூடிய மாணவர்களும் இருக்கிறார்கள். இத்தகைய சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆசிரியர், பெற்றோர், காவல்துறை, பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அனைவரும் ஒன்றாகக் கலந்தாலோசனை செய்து முடிவெடுத்தாக வேண்டியது அவசியம்.

Advertisment