எவ்வளவு வயதானாலும், எத்தகைய உயர் பதவிக்கு வந்தாலும் தனக்குப் பாடமெடுத்த ஆசிரியரின்முன் பணிவுடன் மரியாதையாக நடந்துகொள்வதே முன்னாள் மாணவரின் பண்பு. ஆனால் சமீபகாலமாக ஆசிரியர் -மாணவர் உறவில் விரிசல் ஏற்பட்டிருப்ப தாகத் தெரிகிறது. ஆசிரியப் பணிமீதான மதிப்பு எப்போது, எப்படி சரியத் தொடங்கியது? சட்டென்று சொல்வதானால், தனியார் பள்ளிகளின் ஆதிக்கமே இத்தகைய மாற்றத்தின் தொடக்கப்புள்ளி எனலாம். தனியார் பள்ளியில் சேர்த்தால் அதிக மதிப்பெண் கிடைக்கும், ஒழுக்கமாகவும் படிக்க வைப்பார்கள் என்ற எண்ணம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படத் தொடங் கியதுமே, அரசு பள்ளிகளின்மீதும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதுமான மதிப்பு குறையத் தொடங்கியது.
இப்படியான சூழலில், பள்ளி மாணவர்கள் மது அருந்துவது, பள்ளியில் ரவுடித்தனம் செய்வது, ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது போன்ற வைரல் வீடியோக்களால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு கவலைக்குரியதாக மாறியிருப்பது தெரியவருகிறது.
ஜி.கல்லுப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சிலர் குரூப்பாக சேர்ந்து கொண்டு பாடம் சொல்லித்தரும் ஆசிரியைகளைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார்கள். தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கக்கூடிய மூன்று மாணவர்கள், இங்கிலீஷ் புக் கொண்டு வரவில்லை. அதைக்கண்ட ஆசிரியர், பக்கத்து கிளாஸி லுள்ள மாணவர்களிடம் புக்கை வாங்கி வரச்சொல்ல, மூவரில் ஒருவன், "என்னையாடா அடுத்த வன்கிட்ட புக்க வாங்கிட்டு வரச் சொன்ன?'' என கேட்டு ஆசிரியரை கன் னத்தில் அடித்திருக்கிறான். தேவதானப் பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் ஒரு மாணவன் கத்தியுடன் பள்ளிக்கு வந்து வகுப்பு ஆசிரியரை கொலை செய்து விடுவேனென்று மிரட்டியிருக்கிறான். அவனை ஆசிரியர்கள் கண்டித்தபோது அவர்களையும் கொலை செய்துவிடுவே னென்று மிரட்டியிருக்கிறான். போலீஸில் புகாரளித்தால், விசாரித்த டி.எஸ்.பி. யிடமே, "இங்குள்ள ஆசிரியர்களைக் கொல்லாமல் விடமாட்டேன்'' என்று கூறியிருக்கிறான்.
மாணவர்களால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று மார்ச் 17-ஆம் தேதி தேனி கலெக்டர் அலுவல கத்திலுள்ள முதன்மைக் கல்வி அலுவல கத்தை, முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது, "அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய சில மாணவர்கள் மூலம் ஆசிரியர்கள் பாதிக் கப்பட்ட விஷயங்களைக் கேள்விப்பட் டேன். அதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி களுக்கும் நேரடியாகச் சென்று மாணவர் களை அழைத்து அன்பாகப் பேசி கவுன்சிலிங் கொடுக்க இருக்கிறேன். அதன்மூலம் மாணவர்களின் மனநிலையில் அவசியம் மாற்றம் வரும்'' என்றார்.
நம் கல்விக்கூடங்கள் இப்படியான சூழலுக்குத் தள்ளப்பட்டதற்கு என்ன காரணங்களென்று அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்ததில், "தற் போது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக வுள்ளதால், எந்தவொரு சம்பவமானாலும் உடனுக் குடன் வீடியோ எடுத்து அப்லோட் செய்யும் சிந்தனை வலுத்துள்ளது. சில மாணவர்கள் இதற் காகவே பேருந்திலும், ரயில் வண்டிகளிலும் படிக்கட்டில் சாகசம் செய்வது, மாணவிகளிடம் வம்பிழுப்பது என்று தொடங்கி, ஆசிரியர்களிடமும் வம்பிழுப்பது, மிரட்டுவதென்ற மனப்போக்குக்கு மாறியுள்ளனர். அரசுப் பள்ளிகளில் இப்படியான மாணவர்கள் சுமார் 10% பேர் இருப்பார்கள் என்றாலும், இவர்களால் மற்ற மாணவர்களும் கெட்டுப்போகும் சூழல் உள்ளது.
முன்பெல்லாம் மாணவர்களைக் கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இருந்தது. "என் பையன் சரியா படிக்கலைன்னா கண்டிச்சுத் திருத்துங்க சார்'' என்று பெற்றோர்களே புகார் சொல்வார்கள். ஆனால் தற் போது நிலைமை தலைகீழ். மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால் அதனை வீட்டில் புகாராகச் சொல்ல, "என்னோட பையனை ஏன் திட்டுனீங்க? அடிச்சீங்க?'' என்று பெற்றோரே கேள்வி கேட்டுப் பிரச்சனை செய்கிறார்கள். இப்படி யான போக்கு பிள்ளைகளின் ஒழுக்கத்தையும், கல்வித்தரத்தையும் தான் பாதிக்கும் என்பதை பெற்றோர் உணரவில்லை. இன்னும் சில மாண வர்கள், பெற்றோரின் செல்லத்தால், ஆசிரியரின் சிறு கண்டிப்பையும் தாங்கமுடியாமல் தற் கொலை முயற்சியில் இறங்கும் துயரமும் நடக்கிறது.
இப்படியான உரசல்கள் ஒருபுறமிருந் தாலும், நன்கு படிக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிசெய்யும் ஆசிரியர்கள் ஏராளம் உண்டு. தற்போதுள்ள "ஆல் பாஸ்' என்ற முறை, மாணவர்களுக்கு கவனத்தோடு கல்வி கற்பதன் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிட்டது. 'சரியா படிக்கலைன்னா பெயிலாகிடுவோம்' என்ற பயமே இல்லாத சூழலில், பாடத்தைக் கவனிப் பது, ஒழுக்கத்தோடு நடப்பதையெல்லாம் மாணவர்களிடம் எதிர்பார்க்க இயலவில்லை. சில மாணவர்கள், பள்ளிக்கு வருவதேயில்லை. சரியாகப் பரீட்சையின்போது மட்டும் வந்துவிடுவார்கள்.
இப்படியான நிலையைச் சரிசெய்ய வேண்டுமென்றால், ஆல் பாஸ் என்பதை 1 முதல் 5-ம் வகுப்புவரை மட்டும் செயல்படுத்த வேண்டும். அதற்கடுத்த வகுப்புகளில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்ணை நிர்ண யிக்க வேண்டும். அதேபோல், வருகைப்பதிவுக் கும் குறைந்தபட்ச சதவீதம் நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் பள்ளிக்கு மட்டம் போடாமல் வருவார்கள். பாடங்களைக் கவனிப்பார்கள். இச்சூழலில், மாணவர்களைப் பற்றி பல்வேறு புள்ளி விவரங்களைச் சேகரிக்கும்படி கல்வித்துறையிலிருந்து கேட்பது, ஆசிரியர்களுக்கு கூடுதல் சிரமமாகிறது. ஆசிரியர்களுக்கு பணிச்சுமை யும், பணிப்பாதுகாப்பற்ற சூழலுமாக இருப்பதால் கல்வித்தரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. பல ஆசிரியர்கள், விருப்ப ஓய்வில் செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள்'' என்கிறார்கள்.
ஆசிரியர்களுக்கான சிக்கல்கள் குறித்து, தமிழாசிரியர் முன்னணியின் பொறுப்பாளர் சங்கர நாராயணனிடம் கேட்டபோது, "மாணவர்களின் குற்றச் செயல்பாடுகளுக்கான மூல காரணம், தேர்வை மையப்படுத்தும் கல்விதான். தேர்ச்சி விழுக் காட்டை அரசியலாக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்கிறார். மேலும் கூறுகையில், "சிறப்புப் படிப்பு என்ற பெயரில் மாணவர்களை அதிக நேரம் சிறைப் படுத்தும் முதன்மைக் கல்வி அலு வலர்கள், தலைமை ஆசிரியர்களின் தனிப்பட்ட மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கற்றல், கற்பித்தல் நேரங்களில், கற்றல் கற்பித்தல் பணி மட்டுமே நடைபெறச் செய்ய வேண்டும். எல்லா நேரமும் தேர்விற்குத் தயார் செய்யும் போக்கிற்குத் தடை விதிக்கவேண்டும்.
அதேபோல், எட்டாம் வகுப்பு வரை, வருகைப் பதிவேட்டில் பெயர் இருந்தாலே அனைவரும் தேர்ச்சி என்று சொல்லிவிட்டு, பத்தாம் வகுப்பில் மட்டும் தேர்ச்சி விழுக்காடு குறைந்தால் ஆசிரியர்களே பொறுப்பு என்பது எப்படி சரியாகும்? ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் அடுத்த வகுப்பிற்குச் செல்ல, குறைந்த அளவிலான கற்றல் திறனாவது இருக்க வேண்டும். வாசிக்கக் கூடத் தெரியாமல் பத்தாம் வகுப்பு வந்த மாணவ னைச் தேர்ச்சிபெற வைக்க ஆசிரியர் போராடுவதே மோதல் போக்கு உருவாகக் காரணமாகிறது.
மாணவர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் தேவைக்கேற்ப இருந்தால், மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்காது. பள்ளிக்குள்ளேயே மாணவர்கள் இருக்கும்போதுதான் கற்றல்மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். பள்ளிகளில், ஆசிரியரல்லாத பணியிடங்கள் அனைத்திற்கும் அதற்குரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். அப்படிச் செய்தால், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் சிக்கல் எழாது. உயர் பொறுப்பிலுள்ள அதிகாரிகள், ஆசிரியர்களை வன்மத்தோடு பார்க்காமல், உரிய மதிப்பளித்தால்தான் மாணவர்களும் ஆசிரியர் களுக்கு மரியாதை கொடுக்கும் சூழல் எழும். ஆனால் இங்கே ஆசிரியர்களை மாணவர்கள் எதிரிகளாகப் பார்க்கும் நிலை உருவாக்கப் பட்டுள்ளது'' என்கிறார்.
அரசுப் பள்ளி மாணவர்களிடையே போதைப்பழக்கம் உருவாவது குறித்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி கூறுகையில், "அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்கள், சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் பின்தங்கிய சூழலில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துத் தனியார் பள்ளிகளாலும் புறக்கணிக் கப்பட்ட, கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களே பெரும்பாலும் அரசுப் பள்ளிகளுக்கு வருகிறார்கள். போதைப் பழக்கத்தை மாணவர்கள் விளையாட்டாகத்தான் ஆரம்பிக் கிறார்கள். சீனியர் மாணவர்களைப் பார்த்தும் சிலர் கற்றுக்கொள் கிறார்கள். பள்ளிகளுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடைகளே இதற்கு அடித்தளமாக உள்ளன. பள்ளிக்கு அருகிலுள்ள கடையில், 'புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட வில்லை' என்ற போர்டு வைக்கப்பட்டாலே, அங்கே புகையிலைப் பொருட்கள் கிடைக்கும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்வார்கள். இதைத் தாண்டி, பீரில் தொடங்கி கஞ்சா வரை போதைப்பழக்கம் தொடர்கிறது. பிள்ளைகளின் குறைகளைச் செவிமடுத்துக் கேட்காத பெற்றோரும், அடித்துத் திருத்தாத ஆசிரியர்களுமே இதற்கு முதற்காரணம் என்பேன்.
போதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் மனச்சிக்கலைத் தீர்ப்பதற்கு மாவட்ட அளவில் விழிப்புணர்வுக் கமிட்டி ஏற்படுத்தி, போலீஸ் அதிகாரிகள், மன நல மருத்துவர்கள், பள்ளி ஆசிரியர்களுடன், பெற்றோரையும் இணைத்துக்கொண்டு செயலாற்றினால் மாணவர் களின் போதைப் பழக்கம் முற்றிலும் குறையும்'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆசிரியர்கள் - மாணவர்களின் நல்லுறவை வலுப்படுத்துவதே கல்வித்துறையின் முதன்மையான தேவையாக உள்ளது.
- சக்திவேல், நாகேந்திரன், தெ.சு.கவுதமன்