மிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. மே மாதம் 10-ந்தேதி வரை நடக்கும் இந்த தொடரில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவிருக்கின்றன! சட்டப்பேரவை குறித்த விமர்சனங்களை இந்த இதழில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சட்டப் பேரவையின் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்.

assembly

நடப்பு நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மைத் துறைக்கான பட்ஜெட் ஆகியவற்றை முறையே மார்ச்-18 மற்றும் 19 தேதிகளில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

பட்ஜெட் மீதான 3 நாட்கள் விவாதங்களுக்குப் பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த சட்டப்பேரவை ஏப்ரல் 6-ந்தேதி மீண்டும் கூடியது. சொத்து வரி உயர்வு, 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் ரத்து, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால் அதனை எதிர்கொள்ள தி.மு.க. அரசு தயாராக இருப்பது போல் ஆயத்தமாக இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். தமிழகத்தில் சொத்துவரியை ஸ்டாலின் அரசு கடுமையாக உயர்த்தியிருப்பது தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கவன ஈர்ப்புத்தீர்மானம் தந்திருந்தோம். இதன்மீது பேசிய அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிச் சாமி, "தமிழகத்தில் பொருளாதார நிலை மேம்பட்ட பிறகு சொத்துவரி உயர்த்தப்படும் எனச் சொல்லி விட்டு, இப்போது உயர்த்தியிருப்பது மக்களை பாதிக்கச் செய்கிறது'' என்று குற்றம்சாட்டினார்.

Advertisment

dsdf

பா.ஜ.க. தலைவரான நான் பேசும்போது, இந்த சொத்துவரி உயர்வு எந்தளவுக்கு சாமானியர்களை பாதிக்கும் என எடுத்துச் சொல்லி, அதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், இந்த உயர்வுக்கு மத்திய அரசு போட்ட உத்தரவுதான் காரணம் என்பது போல அமைச்சர்கள் பேசினார்கள். இது தவறு.

ஏனெனில், 15-வது நிதி கமிசன் தனது அறிக்கையில் வரி வருவாயை ஒழுங்குபடுத்துங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, 100 சதவீதம், 150 சதவீதம் வரியை உயர்த்துங்கள் என்று சொல்லவே இல்லை. இதனைப் புரிந்துகொள்ளா மல் அல்லது தங்கள் தவறுகளை மறைக்கும்விதமாக மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கப் பார்க்கிறது தி.மு.க. அரசு. அரசின் கூற்று தவறு என்பதை எடுத்துச் சொன்னேன்.

வரி விவகாரங்களில் பா.ஜ.க.வின் நிலைப் பாடுங்கிறது ஒவ்வொரு வருசமும் 5 சதவீதம் வரியை உயர்த்திக் கொள்ளலாம் என்பதுதான். ஏனெனில், ஆட்சியாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறக்கூடிய வாய்ப்புண்டு என்பதால் எப்படி யிருந்தாலும் வருசத்துக்கு 5 சதவீதம் வரி உயரும் என மக்களின் மைண்ட் செட்டாகி விட்டால் அந்த வரியைக் கட்டுவதற்கு தயாராக இருந்துவிடுவார்கள்.ssdf

இது தவிர, கொரோனா நெருக்கடிகளால் பொருளாதார இழப்பை சந்தித்து வரும் மக்கள் இப்போதுதான் கொஞ்சம் மூச்சுவிடத் தொடங்கி யிருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்கள் மூச்சை நிறுத்தும் வகையில் 150 சதவீதம் சொத்துவரியை உயர்த்தினால் எப்படி? என்கிற ரீதியில் தான் வாதங்களை முன்வைத்து வரி உயர்வை திரும்பப் பெறுங்கள் என வலியுறுத்தினோம்.

ஆனால், நகராட்சித்துறை அமைச்சர் நேரு, முந்தைய ஆண்டுகளில் சொத்து வரி 300 சதவீதமெல்லாம் உயர்த்தப்பட்டுள்ளது என தி.மு.க. அரசு உயர்த்திய வரி உயர்வு நியாயமானதுதான் என்பது போல பேசினார். இதனையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வரி உயர்வை நாங்கள் மனமுவந்து உயர்த்தவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத்தான் உயர்த்தப்பட்டதாக கூறினார். வரி உயர்வை திரும்பப் பெறாததால் அதனை கண்டிக்கும்விதமாக அ.தி.மு.க.வும் அதனையடுத்து, பா.ஜ.க.வும் வெளிநடப்பு செய்தோம்.

அதன்பிறகு நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் பலரும் பேசி னர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க ரூ.434 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கும்'' என தெரிவித்திருந்தார். அதேபோல, பெரம்பலூர், சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்றார்.

இது மட்டுமல்ல; ஆறு, ஏரிகளில் மணல் எடுக்க விவசாயிகளுக்கும், செங்கல் சூளைகளுக்கு தேவைப்படும் மணலை எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படும் என்றார். இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் நடைமுறைக்கு வருமா? எப்போது வரும்? என்பதுதான் புரியாத புதிர்! ஏனெனில், கடந்த கூட்டத்தொடரில் இப்படி நிறைய சொல்லியிருந்தார் துரைமுருகன். அதெல்லாம் வந்த மாதிரி தெரியவில்லை.

இதற்கிடையே, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023 இறுதிக்குள் நடத்தப்படும் என்றும், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் முதலீட்டாளர்களை விரைவில் சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் 110 விதி யின் கீழ் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த அறிவிப்பைக் கேட்டு ஆளும் கட்சியினர் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், நாங்களோ, துபாய் பயணத்தின் சுவடே இன்னும் மறையாத நிலையில் இன்னொரு வெளி நாட்டுப் பயணத்துக்கு முதல்வர் திட்டமிட்டுவிட்டார் என்று நினைத்துக் கொண்டோம்.

மறுநாள் 7-ந்தேதி. கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் சண்முகையா, தனது கேள்வியை கேட்பதற்கு முன்பாக ஸ்டாலின் மற்றும் உதயநிதியை வானளாவ புகழ்ந்து தள்ளினார். முதல்வருக்கே இது எரிச்சலாக இருந்தது. எதிர்க்கட்சிகளுக்கு எப்படி இருந்திருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள். புகழ்ச்சியை ஏற்காத முதல்வர், "நான் பல முறை சொல்லியும் என்னை புகழ்வதிலேயே நேரத்தை வீணடிக்கிறீர்கள். கேள்வி நேரத் தில் கேள்வியை மட்டும் கேளுங்கள்''’என்று கண்டித்தார்.

முந்தைய பேரவைக் கூட்டங்களிலேயே இதனை அழுத்தமாகச் சொல்லியிருந்தார் முதல்வர். அப்படியிருந்தும் புகழ்ந்து தள்ளு கிறார்கள் எனில் தவறு எங்கு இருக்கிறது என புரியவில்லை.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை பா.ம.க. கொண்டு வந்திருந்தது. இடஒதுக்கீட்டின் அவசியத்தை உணர்த்தும் வகையில் தீர்மானத்தின் மீது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் பேசினர். தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ், இந்த இடஒதுக்கீடு விவகாரத்தில் அ.தி.மு.க.வை குற்றம்சாட்டியது. இதற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பைக் காட்ட பேரவையில் சில நிமிடங்கள் சலசலப்பு.

உடனே, நீதிமன்றத் தீர்ப்பில் இருந்ததுதான் சுட்டிக்காட்டப்பட்டது எனச் சொல்லி காங்கிரஸ் சமாளிக்க, முதல்வரின் கவனத்தை ஈர்த்து அமருங் கள் என சபாநாயகர் அறிவுறுத்தி பிரச்சனையை அமைதிப்படுத்தினார். இறுதியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சமூகநீதி நிலைநாட்டப்படும்'' என்றார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, பெரிய கருப்பன் பதிலளித்தனர். அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது என்றும், தற்போது போதுமான அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், அம்மா உணவக திட்டத்தை முடக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும் எதிர்க்கட்சி கொறடாவான அ.தி.மு.க. எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார். இதனை மறுத்ததோடு, "கடந்த ஆட்சியில் நடந்த எந்த பணிகளும் முடக்கப்படவில்லை. அம்மா உணவக திட்டம் தொடர்ந்து செயல்படும்''’என்ற அமைச்சர் நேரு, "நகர்ப்புற உள்ளாட்சிகளில் ரூ.1,856 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப் படுவதாக' அறிவித்திருக்கிறார்.

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் குக்கிராமங் களில் ரூ.1,346 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் உள்பட பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை கொடுத்திருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். இந்த அறிவிப்புகளெல்லாம் ஏட்டளவில் நிற்குமா? செயல்பாட்டுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பொதுவாக, ஆரோக்கியமான விவாதங்களின் களமாக இருக்கிறது சட்டமன்ற நடவடிக்கைகள். எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு போதிய நேரங்களை ஒதுக்குகிறார் சபாநாயகர். பேரவையில் தற்போதுள்ள தி.மு.க. அமைச்சர்கள் பலரும் நீண்டகால அனுபவசாலிகள். சீனியர்கள். இதனாலேயே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் வாதங்களை அனாயசமாக எதிர்கொள்வதை கவனிக்க முடிகிறது.

Advertisment