ஜெயலலிதா ஆட்சியி லிருந்தபோது அனைத்து துறைகளிலும் அ.தி.மு.க.வினரின் ஆதிக்கமிருந்தது. குறிப்பாக, கரன்சிகள் மழையாகக் கொட்டுகிற டாஸ்மாக் மற்றும் அதன் பார்கள். ஜெ.வின் கட்டளையால் அ.தி.மு.க.வினருக்கே பார் டெண்டர்கள் தரப்பட்டன. பார் மூலம் கிடைக்கும் வருமானத்தால் தமிழகம் முழுக்க அ.தி.மு.க. வினர் வற்றாத வளம் கண்டனர்.
அதேசமயம் பார் டெண்டர் எடுக்கும் அ.தி.மு.க.வினர், காலப்போக்கில் பிறர் தலையிட முடியாதபடி பார் செயல்படுமிடத்தை தங்களின் சொந்தக் கட்டடங்களுக்கு மாற்றிக்கொண்டவர்கள், நாளடைவில் அந்த இடத்தைப் பாருக்கானது என்று தங்களின் பெயரிலேயே சட்டரீதியாகவும், துறைரீதியாக உரிமமும் பெற்றுக்கொண்டனர். ஜெ.வின் அனுக்கிரகத்தால் பார் நடத்துகிற இடத் திற்கான உரிமம்தான் அவர்களின் பிரம்மாஸ்திரம். இந்த அஸ்திரத்தால்தான் அவரவர் ஏரியாவில் வேறு புதிய புள்ளிகள் பார் டெண்டர் எடுக்கமுடி யாமல் முட்டுக்கட்டையானதுடன் அவர்களே நிரந்தர பார் நடத்துனர்கள் போல ஆனார்கள்.
பழைய பார் ஓனர் தவிர்த்து, புதிய புள்ளிகள் யாரேனும் ஒருவேளை பார் டெண்டர் எடுத்தால், அதனை நடத்துவதற்குரிய புதிய இடத்தை தேர்வு செய்துவிட முடியாது. பல்வேறு சட்டச் சிக்கல்கள், குறுக்கீடுகள் என்று சிக்கல்கள் போகும் என்பதால், பார் உரிமம் பெற்றவர்களின் கைகளுக்குள்ளேயே மீண்டும், மீண்டும் பார் டெண்டர் போகிற தவிர்க்கமுடியாத சூழல். ஜெ.வின் ஆட்சி என்பதால் ர.ர.க்கள் அந்தக் கவலையின்றி ஆட்சியின் பத்தாண்டு காலம் நிம்மதியாக ஓட்டினார்கள். இந்த வழிகளில்தான் தமிழகத்தின் 80 சதம் டாஸ்மாக் பார்கள் அ.தி.மு.க.வினரின் சொந்த இடத்திற்குள் சென்றிருக்கிறது.
இன்றைய காலகட்டத்திற்கேற்ப தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள டாஸ்மாக்குகளின் விற்பனையை அடிப்படையாகக் கொண்டு பார்களின் டெண்டர் தொகைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கிராமம் தொட்டு நகரம் வரை ஐம்பதாயிரம் முதல் ஐந்து லட்சம் வரை பார்களின் டெண்டர் தொகைகள் போகின்றன வாம். உதாரணமாக நான்கு லட்சம் மதிப்பு கொண்ட பார் ஒன்றை ஒருவர் எடுக்கும் பட்சத்தில் தற்போதைய நிர்ணயப்படி 4 லட்சம் வீதம் 12 லட்சத்திற்கான மூன்று தனித்தனி டிராப்ட்கள் ஒரே நேரத்தில் எடுத்து மாவட்ட டாஸ்மாக்கிடம் ஒப்படைக்க வேண்டும். அவைகளில் ஒரு டி.டி., டெண்டருக்கான டெபாசிட். மற்ற இரண்டு டி.டி.களும் ரன்னிங் டெபாசிட் என்ற அளவில் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் கணக்கில் வைக்குமாம். இவை தவிர வழக்கமான டேர்ம்ஸும் பேசப்படுகிறதாம்.
இந்த வகையில் 4 லட்சம் தொகையுள்ள ஒரு பாரின் டெண்டரை எடுப்பவர் தோராயமாகப் பார்த்தாலும் ஆரம்பகட்ட முடக்கம் 14 லட்சம் வரை ஆகிவிடும். அப்படியே புதியவர் ஒருவர் டெண்டர் எடுத்தாலும் ஏரியாவில் புதிய பார் அமைப்பிற்கான செலவுகள் லட்சங்களைத் தாண்டிவிடும். ஒருவழியாக இத்தனை செலவு களையும் ஏற்க முன்வருபவர் உடனே புதிய இடத்தை அமைத்துவிட முடியாதாம். அவைகளில் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள், வருவாய்த்துறை யினரின் ஏகப்பட்ட விசாரணை ஃபார்மாலிட்டி களை எதிர்கொள்ளவேண்டிய நிலை. அதற்கும் தயார் என்றாலும், இதுபோன்ற நடைமுறைகள் முடிவதற்கு ஒரு வருடத்திற்கு மேலாகிவிடுமாம்.
ஆனால் பார் டெண்டர் எடுத்தவர், எடுத்த நேரத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் உரிய தொகையினை தவறாமல் டாஸ்மாக் நிர்வாகத் திற்குச் செலுத்தியாக வேண்டும். பார் அமைப்பதற்கான இடத்தின் முறையான, துறைகளின் உரிமத்தினை டெண்டரில் இணைக்கவேண்டும். முடியாவிட்டால் பார் டெண்டர் ரத்தாகிவிடும். எனவே பாருக்கான புதிய இடம் தேடிக் காத்திராமல் பார் உரிமம் வைத்திருக்கும் அந்தப் பழைய ஓனரிடம் (அந்த ஏரியாவின் பார் உரிமம் அ.தி.மு.க. புள்ளியின் வசம்தானிருக்கும்) அவரது உரிமத்தை தனக்கு லீசுக்குக் கேட்டு அவரின் ஒப்புதலை இணைத்தாலும் டெண்டர் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் ஏற்கனவே பார் நடத்திய இடத்தின் உரிமம் வைத்திருக்கும் பழைய ஓனர் அத்தனை சுலபத்தில் ஒப்புதல் தந்துவிடமாட்டார்.
பார் டெண்டர் டெபாசிட், பேரங்கள், பார் அமைக்க பல லட்சங்கள் என ஒரு பாருக்கு ஏகப்பட்ட லட்சங்கள் செலவு என்றிருப்பதால் பார் எடுக்க முற்பட்ட பல தி.மு.க.வினர் பின்வாங்கு கிறார்கள்... கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத் துடன் இருக்கின்றனர்.
தி.மு.க.காரர் ஒருவர், டெண்டர் எடுத்து பார் வைப்பதற்கு உரிமம் வைத்திருக்கும் பழைய புள்ளியிடம் ஒப்புதல் கடிதம் கேட்டுப் போனபோது அவரோ, இடத்திற்கானதுடன் பன்னிரண்டு லட்சம் பகடி கேட்டதால் திகைத்துப் போய்த் திரும்பிட்டேன் என நம்மிடம் வருத்தப்பட்டார்.
பார் டெண்டர் எடுத்தவர்கள் அதனுடன் பார் இருப்பதற்கான இடம், அதுதொடர்பான அக்ரிமெண்ட்கள் இணைக்கவேண்டும் என்கிறார் நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளரான கந்தன். இந்த நடைமுறைகள் முடிய கால அவகா சம் பிடிக்கும். இதுபோன்ற காரணங்களால்தான் பார் டெண்டர்கள் தி.மு.க.வினருக்குக் கிடைக்க வில்லை. அதன்காரணமாக பார் டெண்டர்கள் பற்றி, ஏரியாவில் பார்களுக்கான இடம் வைத்திருக்கும் அ.தி.மு.க.வினரிடம் பேசப்பட்டு வருகிறது. பல இடங்களில் அவர்களுக்கே டெண்டரும் முடிந்திருக்கிறது.
பார் விஷயத்தில், சரக்கு போல ஜிவ்வென்று இருக்கிறார்கள் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினர். ஆளுங்கட்சி உடன்பிறப்புகளோ, ஊறுகாய் நக்கும் நிலையில் உள்ளனர்.