"மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட முறப்பநாடு வி.ஏ.ஓ.விற்கு முன்பே, கொலையாகியிருக்க வேண்டியது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.யே! ஆனால் ஏனோ தப்பிவிட்டார்'' என்கின்றனர் விபரமறிந்த தூத்துக்குடிவாசிகள்.
கொலையாவதற்கு முந்தைய 13.04.2023 அன்று, முறப்பநாடு காவல் நிலையத்தில் ஆஜரான முறப்பநாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ், "நான் பணிபுரியும் வி.ஏ.ஓ. அலுவலக எல்லைக்குட் பட்ட கலியாவூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் ராமசுப்பிரமணியன் மற்றும் அடையாளம் காட்டக்கூடிய மேலும் சில நபர்கள் இணைந்து சட்ட விரோதமாக மணல் கடத்துகிறார்கள். அதனைத் தடுக்க வேண் டும்' எனப் புகாரளித் திருந்தார். அதன் தொடர்ச்சியாக அங்கிருக்கும் போலீஸார் ராமசுப்பிர மணியனை அழைத்து, "வி.ஏ.ஓ. வோட ஒரே ரோதனையா போச்சு. முன்ன போன்ல சொன் னான். இப்ப நேரிலேயே வந்து சட்டப்படி புகார் கொடுத்திருக்கான். அவனை முடிச்சு விடுலே'' எனக் கூறி வைக்க, 25-04-2023 அன்று வி.ஏ.ஓ. அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் நேர்மையான வி.ஏ.ஓ.
உள்ளூர் வழக்கறிஞர் ஒருவரோ, "தூத்துக்குடி மாவட்டத்தினைப் பொறுத்தவரை, தூத்துக்குடி ரூரல், ஸ்ரீவைகுண்டம் துணைச்சரகங்களில் தான் மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றது. 'தாமிரபரணி ஆறு மற்றும் ஆற்றுப்படுகைகள், கரையோரங்களில் மணல் அள்ளக்கூடாது. மணல் குவாரி அமைக்கக்கூடாது' என கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராசன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. எனினும் மணல் கொள்ளையர்கள் கொடுக்கும் வெகுமதி களுக்காக அந்த உத்தரவை தங்களது காலடியில் கிடத்தி யுள்ளனர் துணைச்சரகப் போலீசார். முன்பெல்லாம் சின்னச் சின்ன பஞ்சாயத்துக்களுக்காக வழக்கறிஞர் களும், ஊர் முக்கியஸ்தர்களும் காவல் நிலையங்களுக்கு சென்று பேசி முடிப்பார்கள். ஆனால் மேற்கண்ட இரு துணைச்சரக காவல் நிலையங்களிலும் மணல் கொள்ளை யர்கள் தான் போலீசாருடன் பஞ்சாயத்து பேசி வருகின் றனர். அந்தளவிற்கு அவர்கள் போலீசாருக்கு நெருக்கம்.
ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், ஆழ்வார் குறிச்சி, குரும்பூர், ஏரல், சாயர்புரம் மற்றும் சேரக்குளம் ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கிய ஸ்ரீவைகுண்ட துணைச்சரகத்தில் பால்குளம், ராஜ்பதி, மயிலோடை, நல்லூர், ஆத்தூரக்கால், சொக்க பழங்கரை, சேதுக்குவாய்த்தான், தென்திருப்பேரை மற்றும் குரங்கணி சுடுகாட்டுப் பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்துகின்றனர். பணம் தான் இங்கு பிரதானம். முன்பெல்லாம் போலீசார் மணல் கொள்ளையர்களிடம் மாதத் தவணையில் பணம் வாங்கி வந்த நிலையில், இப்ப "லோடுக்கு என அப்பப்ப பணத்தைக் கொடுத்திருப்பா' எனக் கேட்டே வாங்குகின்றனர் குரும்பூர் இன்ஸ்பெக் டர் ராமகிருஷ்ணனும், ஆழ்வார் திருநகரி இன்ஸ்பெக் டர் மணிவண்ணனும். ஒரு லோடு என்றால் ஒரு லாரி எனக் கணக்கில் வரும். இதற்காக இன்ஸ்பெக்டர் சார்பாக அங்க ஆள் நிறுத்தி பணத்தை வாங்கி வருகின்றனர்'' என்கிறார் அவர்.
இதே வேளையில், தாமிரபரணி ஆற்றங்கரை மணலுக்காகவா இத்தனை கொலைகள்? என்றால், "வெறும் கட்டடம் கட்டுவதற்காக இந்த மணல் கொள்ளை நடைபெறவில்லை. தாமிரபரணி ஆறு தொடங்கும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரை உள்ள ஆற்றுப்படுகைகளிலும், கரையோரங்களிலும் உள்ள மணல்களில் இல்மனைட், கார்னைட், சிர்கான், ரூடைல் மோனோசைட் போன்ற அரிய வகை கனிமங்கள் உள்ளன. அத்தனையும் உயர்தர கனிமம் மற்றும் தாதுக்கள் என்கிறது கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்றில் ஆய்வு நடத்திய இந்திய அணுசக்தி வாரியம். இதுகுறித்தும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது'' என்கிறார்கள்.
நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராசனோ, "தகவல் அறியும் உரிமைச் சட் டத்தின் மூலம் எனக்கு கிடைத்த தகவலில், முறப்ப நாடு காவல் நிலையத்தில் தான் 110 சட்டப் பிரிவின் கீழ் அதிகமான வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 110 சட்டப் பிரிவு என்பது குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவின் கீழ் ஒரு குற்றவாளி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தால், அந்த குற்றவாளி இனி எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபட்டால் அந்த குற்ற வாளிக்கு துணை கமிஷனர் ஒருவர் அதிக பட்ச தண்டனையாக 340 நாட்கள் சிறையில் அடைக்க அதிகாரம் உள்ளது. மாவட்டத்தி லேயே கோவில்பட்டிக்கு அடுத்தபடியாக கடந்த 2 வரு டங்களில் 195 வழக்குகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் பலன் பூஜ்யமே'' என்கிறார் அவர்.
"சின்னச் சின்ன பசங்க தான் இத்தொழிலுக்கு வருகின்றனர். இரண்டரை அல்லது மூன்று யூனிட் கொள்ளளவு கொண்ட 407ல் தான் இப்போது வரை மணல் கடத்துகிறார்கள். "ஐயா, இங்க மணல் கடத்துகிறார்கள்' என போலீசுக்கு போனில் தகவல் சொன்னால், சம்பந்தப்பட்ட மணல் கொள்ளை யனிடமே போனில் பேசி, "இந்த நம்பரிலிருந்து இன்னார் கம்ப்ளைண்ட் செய்கிறார்கள்' எனப் போட்டுக் கொடுத்துவிடு வார்கள். குறிப்பிட்ட அளவு பணம் அந்தப் பக்கமிருந்து வரவில்லையெனில் நம்மை போலீசே அழைத்து "புகாராகக் கொடுப்பா' எனக் கேட்டு வாங்கி அதனை வைத்து தொகையை கணிசமாக ஏற்றுகின்றனர். நம்முடைய உயிரை போலீசார் மதிப்பதேயில்லை. மீறி டி.எஸ்.பி. ஆபிஸுக்கு போன் செய்தால் டி.எஸ்.பி.க்கு லைன் கொடுக்க மாட்டார்கள். இதில் அனுபவப்பட்டவன்'' என்கிறார் அகரம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர்.
இது இப்படியிருக்க, "வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் சாதாரண ஆட்களே. இவர்களின் பின்னணியில் இருப்பது யார்?' என அறிய தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளார் தென்மண்டல ஐ.ஜி.யான அஸ்ரா கார்க்.
"விசாரணை அதிகாரியை நியமித்தால் மட்டும் போதுமா? இந்த மணல் கடத்தலையும், கொலைகளையும் எப்படி தடுப்பது என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும். "கேட்டால் நாதியில்லை. பின்புலம் இல்லை' என்கின்ற அடிப்படையிலேயே வருவாய்த்துறையை சேர்ந்த வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அடுத்து, இதே மணல் கொள்ளையர்கள் குறிவைத்தது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவனையே! பணியில் சேர்ந்த காலத்தில் ஸ்கூட்டி டைப்பிலான இரு சக்கர வாகனத்தைக் கொண்டு மணல் கொள்ளை நடக்கும் துணைச்சரக காவல் நிலைய எல்கைக்கு அடிக்கடி விசிட் அடித்திருக்கின்றார். இதனால் ஆரம்பத்தில் எரிச்சலடைந்த மணல் கொள்ளையர்கள், தங்களிடம் மாமூல் வாங்கும் துணைச்சரக காவல் அதிகாரிகளிடம் கோபமடைந்த வேளையில், "வரும்போது தட்டி விடுங்கள்' என ஐடியாவே கொடுத்திருக்கின்றனர் அவர்கள். முன்பே ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.க்கு குறிவைத்த நிலையில், தூத்துக்குடி ரூரல் எல்கைக்குட்பட்ட வி.ஏ.ஓ. கொலை செய்யப்பட் டுள்ளார். தங்களுக்கு, தங்களுடைய வருமானத் திற்கு இடையூறு என்றால் எந்த நிலைக்கும் செல்வார் கள் இந்த மணல் கொள்ளை யர்கள். எனினும் அரசு இரும்புக்கரம் கொண்டு இதனை தடுக்க வேண்டு மென்பது அனைவரின் விருப்பம்'' என்கிறார் தனிப்பிரிவு அதிகாரி ஒருவர்.
மணல் கொள்ளை மாஃபியா தமிழ்நாட்டையே சிலந்திவலை போல சுற்றிப் படர்ந்துள்ளது. இதோ, சேலம் ஓமலூர் அருகே மானத்தான் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமாரை மணல் கடத்தலைச் செய்யும் பொக்லைன் உரிமையாளர் வீச்சரிவாளுடன் வெட்டத்துணிந்த செய்தி வந்துள்ளது. இப்படியெல்லாம் அச்சுறுத்துவதன் மூலம் நேர்மையான அரசு அதிகாரிகளை அடக்கி ஒடுக்கி தங்கள் மணல் கடத்தலைத் தொடர நினைக்கிறார்கள். இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் தடுத்தாக வேண்டியது கட்டாயம்.