இலங்கையின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு எதிராக தமிழர்கள் முன்னெடுத்த போராட்டம் குறித்து?
எம்மைப் பொறுத்தவரை இலங்கையின் சுதந்திர நாளான 1948 பிப்ரவரி 4 என்பது பிரித்தானியரிடம் அடிமைப்பட்டிருந்த நாங்கள் சிங்களர்களிடம் அடிமையாக்கப்பட்டதைக் குறிப்பதாகும். காலனிய ஆட்சியாளர்களான போர்த்துகீசியர், ஒல்லாந்தர், பிரித்தானியரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் ஆளப்பட்டபோது முள்ளிவாய்க்கால் போன்ற மாபெரும் படுகொலைகளுக்கு நாங்கள் உள்ளாகவில்லை. எங்கள் மீது விமானக் குண்டுவீச்சு நடத்தப்படவில்லை. நாடு, நாடாக நாங்கள் திரியும்படி ஏதிலிகள் ஆக்கப்படவில்லை. இவை அனைத்தையும் செய்வதற்கான அதிகாரத்தை சிங்களவர்களிடம் பிரித்தானியர் வழங்கியது தான் இலங்கையின் சுதந்திர நாளாகும்.
சிங்களவர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெற்றது இரண்டு சுதந்திரம் ஆகும். ஒன்று பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்றது. இன்னொன்று தமிழர்களை இனஅழிப்பு செய்வதற்கு கிடைத்த சுதந்திரமாகும்.
75 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக முழுநீள இனஅழிப்பை நடத்தி 50% ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டும் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டும் உள்ளனர். சுதந்திரத்திற்கு முன்பு தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதியான மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் 90% இருந்த தமிழர்கள், இன்று 30% ஆக சுருங்கிப்போகும் அளவுக்கு சிங்களக் குடியேற்றங் களை சிறீலங்கா பேரினவாத அரசு திட்டமிட்டு நகர்த்தி வருகிறது.
100-ஆவது சுதந்திர நாளை அடைந்து பொன்விழா கொண்டாடுவதற்குள் இலங்கை தீவில் ஈழத் தமிழர்களை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிங்கள இனவாத அரசு தமிழர்களுக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை தீவிரப்படுத்தி வருகிறது.
ஆகவே, இது சிங்களர்களுக்கு சுதந்திர நாளாகும். தமிழர்களுக்கு கறுப்பு நாளாகும். நாங்கள் தந்தை செல்வநாயகம் காலத்தில் இருந்தே சிங்கள இனவாத அரசின் சுதந்திர தினத்தைப் புறக் கணித்து எதிர்ப்புக் காட்டி வருகின்றோம்.
இந்த ஆண்டும் ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது உறவுகளும், சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் சுதந்திரநாளைக் கறுப்பு நாளாக அறிவித்து, மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். விசேடமாக எமது தாயகத்திலே யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுங்கமைப்புடன் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் மாபெரும் பேரணி இடம்பெற்றது. இந்தப் பேரணியை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று இலங்கை அரசு தனது உளவுத்துறையினர் மூலம் கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய போதிலும், எமது மக்கள் எந்தவொரு அச்சுறுத் தல்களுக்கும் அடிபணியாமல் பேரணியில் கலந்துகொண்டு தமிழர்களின் உரிமைக்காக விண்ணதிர கோசங்களை எழுப்பினார்கள்.
சிங்கள தேசத்தின் 75-ஆவது சுதந்திர தினத் திற்கு எதிராக தமிழர்கள் பேரெழுச்சியோடு முன் னெடுத்த போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் சிங்கள தேசத்துக்குரியவர்கள் அல்ல, அவர்கள் ஈழ தேசத்தின் பூர்விகக் குடிகள் என்பதையும், சிங்கள தேசத்திற்கு அரணாக விளங்கும் இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களின் உரிமைகளை இலங்கை அரசோ அல் லது பன்னாட்டு சமூகமோ ஒருபோதும் அடக்கி விட முடியாது என்ற வலுவான செய்தியை எமது மக்கள் மீண்டும் ஒருமுறை இலங்கை ஆட்சியாளர்களுக்கும், இந்தியா உள்ளிட்ட அனைத் துலக சமூகத்திற்கும் உரத்துக் கூறியுள்ளார்கள்.
அண்மையில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர், இனச்சிக்கலுக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த சொல்லியுள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் இதையே சொல்கின்றனர். இனச்சிக்கல் தீருமா?
கடந்த 33 ஆண்டுகளாக இந்திய அரசின் வெவ்வேறு ஆட்சியாளர்கள் இதை இலங்கை அரசுக்கு சொல்லி வருகின்றனர். புலிகள் இதற்கு தடையாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஆனால், இறுதிப் போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 13-ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரவில்லை. 13-ஆவது திருத்தச் சட்டம் இருக்கும் போதுதான் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அரங்கேறியது. சிங்களக் குடியேற்றத்தையும், பௌத்த விகாரைகள் முளைப்பதையும் அச்சட்டத்திருத்தம் தடுத்து நிறுத்தவில்லை. தமிழர் நலனில் அக்கறையுள்ளோர் இதுகுறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். 13-ஆவது திருத் தத்தின்படியான மாகாண சபைக்கு இலண்டன் நகரசபையின் அதிகாரத்தைவிடவும் குறைவான அதிகாரமே உண்டு என்று கடந்த சனவரி 26 அன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே அவர் வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருப்பது போல் மாகாண சபைகளுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அப்படி வழங்கவும் முடியாது. இலங்கை அரசமைப்பின் உறுப்பு 2. இலங்கை குடியரசு ஒற்றையாட்சியுடைய அர சாகும்’ என்கிறது. உறுப்புரை 76(1) நாடாளுமன்றத் திற்கு இருக்கும் சட்டவாக்க அதிகாரத்தை வேறு எதற்கும் பகிர்ந்தளிக்கக்கூடாது என்று அதிகாரப்பகிர்வுக்கு தடை போடு கிறது. எனவே, இந்த இரு பிரிவுகளும் இருக்கும்வரை, 13-ஆவது திருத்தம் என்பது ஒற்றையாட்சியை மாற்றாத, சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்காத சட்டத் திருத்தமாகும். வடக்கு -கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், தமிழர் கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்காத 13-ஆவது திருத்தத்தின் மூலம் இனச்சிக்கல் தீரப்போவதில்லை. மாறாக தமிழர்களையும் இந்தியாவையும் சிங்கள ஆட்சியாளர்கள் ஏமாற்றுவதற்கு வேண்டுமானால் அது உதவக்கூடும்.
13-ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது எப்படி இந்தியாவை ஏமாற்றுவதாகும்?
இந்தியா தனது பக்கத்து நாடான இலங்கையில் தன்னுடைய எதிரி நாடுகள் யாரும் கால் பதித்துவிடக் கூடாது என்று கருது கிறது. விடுதலைப் புலிகள் களத்தில் இருந்த கடைசி நிமிடம் வரை இலங்கையில் உள்ள தனது தூதரகத்திற்குள் முடங்கிக்கிடந்த சீனா, முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் அம்பந்தோட்டை, கொழும் புத் துறைமுகப் பட்டினம் போன்ற தென்னிலங்கைப் பகுதியில் மட்டுமின்றி கடல் அட்டைப் பண்ணை அமைப்பதன் பெயரால் தமிழர் பகுதிகளிலும் நுழைந்துவிட்டது. இந்தியப் பெருங்கடலுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத சீனா இப்போது இலங்கைத் தீவில் காலூன்றி, உளவுக் கப்பலில் வந்து இந்தியாவைக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டது. தமிழர் பகுதிகளில் சீனா நுழையாமல் தடுப் பதற்கு தமிழர் பகுதிகள் மீதான கட்டுப்பாடு அல்லது இறைமை தமிழர்களிடம் இருக்க வேண்டும். ஆனால், சீனாவை தமது பகுதி களில் நுழையவிடாமல் தடுப்பதற்கான அதிகாரம் தமிழர்களிடம் இல்லை. ஒற்றையாட்சி வழிவந்த 13-ஆவது சட்டத் திருத்தம் அத் தகைய அதிகாரத்தை தமிழர்களுக்கு வழங்கவில்லை. எனவே, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதால் தமிழர்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போவதில்லை என்பது மட்டுமின்றி தமிழர் பகுதிகளில் சீனா நுழைவதை தமிழர்களால் தடுக்கவும் முடியாது.
13-ஆவது சட்டத்திருத்தம் என்பது ஒற்றையாட்சிப் பொறிக்குள் தமிழர்களைக் கிடத்தி, இந்தியாவின் கொல்லைப்புறத் தில் யாருக்கும் இடம் கொடுக்கவல்ல அதிகாரத்தைத் தன்னகத்தே வைத்திருக்கும் சிங்கள இராஜதந்திரம் ஆகும்.
இந்தியாவுக்குப் பகையான எந்தவொரு நாடும் இலங்கையில் கால்பதிப்பதால் ஏற்படக்கூடிய தீங்கு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும்தான். தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள்தான் முதலில் பாதிக்கப்படும். அதிலும் குறிப்பாக, முன்வரிசையில் இருக்கும் தமிழ்நாடும் கேரளாவும்தான் ஆபத்திற்கு உள்ளாகும். எனவே, 13-ஆவது சட்டத் திருத்தத்திற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தைப் பற்றி இந்திய மத்திய அரசு மட்டுமின்றி, தமிழ்நாடு -கேரள மாநில அரசுகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்கு அவர் களின் தாய்நிலத்தின் மீதான இறைமையை உறுதிசெய்யவல்ல அதிகாரப் பகிர்வு நடப்பதில்தான் அவர்தம் இருப்பும் இந்தியாவின் பாதுகாப்பும் தங்கியுள்ளது.
பிறகேன் இந்திய மத்திய அரசு 13-ஆவது திருத்தத்தை இனச் சிக்கலுக்கு தீர்வு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது?
தமிழ்நாட்டு அரசும் கட்சி களும் மக்களும் புவிசார் அரசியல் பரிமாணத்தில் இச்சிக்கலைப் புரிந்து கொள்ள தவறிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இது ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு பற்றியது மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர் களின் பாதுகாப்பு பற்றியதும் என்ற தொலைநோக்குப் பார்வை வேண்டும். ஈழத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு, தமிழர்களுக்கும் எது நன்மை பயக்கக்கூடியது, எது சரியானது என்று இந்திய மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண் டிய கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு.
ஆனால், ஈழப் பிரச்சனை தமிழ்நாட் டில் தேர்தல் கட்சி அரசியலாக முடக் கப்பட்டு, வெறும் உணர்ச்சி சார்ந்த பிரச்சனையாகப் பார்ப்பதைக் கடந்து தமிழர்களின் தலைமுறை தாண்டிய இருத்தல் பற்றிய பிரச்சனையாகப் பார்க்கப்படவில்லை. அப்படி பார்க்கப்படுமாயின், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் 13-ஆவது திருத்தத்தை இனச் சிக்கலுக்குத் தீர்வென்று சொல்வதை ஏற்கமாட்டா.
"13-ஆவது திருத்தத்தை தீர்வாக முன்வைப்பது பாக் நீரிணைக்கு இருபுறம் வாழும் தமிழர்களின் பாதுகாப்பைப் பலியிடுவதாகும்' என்று தமிழ்நாடு ஒரே குரலில் பேசினால் இந்திய மத்திய அரசு செவிசாய்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.