மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்களிலிருந்து அங்கு சென்ற ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் தொடர் போராட்டம் பல அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருப்ப துடன், நடிகர்கள்-விளை யாட்டு வீரர்களின் ஆதரவும் தொடர்கிறது.
டெல்லியில் போரா டும் இந்திய விவசாயிகளுக்காக தமிழகத்தில் விவசாயிகளுக்கான தார்மீக ஆதரவு போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. பிரதான எதிர் கட்சியான தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, மறியல், தர்ணா, கறுப்புக்கொடி என பல கட்டப் போராட்டம் நடை பெற்றது. இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி யும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பொதுமக்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 8-ந் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு (பாரத் பந்த்) அகில இந்திய விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு நாடு இந்திய அளவிலான எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தன.
தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். ஒவ் வொருவருக்கும் உணவளிக்கும் "விவசாயிகள் அவர்களுக்காகப் போராடவில்லை, நமக்காகப் போராடுகிறார்கள்' என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு, பாரத் பந்த்திற்கு ஆதரவு கோரினார். இடதுசாரி களின் விவசாயத் தொழிலாளர் அமைப்பு முழு வீச்சில் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தமானது. தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசு, வேளாண் சட்டங்களை ஆதரித்து நிறை வேற்றித் தந்தது என்பதால் அது விவசாயிகளின் கோரிக்கைக்கு எதிராகவே இருந்தது. பஸ்கள் வழக்கம் போல இயங்கும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப் பட்டது. அதே நேரத்தில், கடை கள், மார்க்கெட், வணிக நிறுவனங்கள், ஆட்டோக்கள் ஓடாது என பல்வேறு சங்கங்கள் அறிவித்தன.
பொது வேலை நிறுத்த நாளான டிசம்பர் 8 அன்று டெல்டா மாவட்டங்களில் மழை-வெள்ளத்தையும் மீறி பல இடங்களில் சாலை மறியல் -ரயில் மறியல்கள் நடைபெற்று எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். திருச்சியில் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடைகள் பெருமளவில் அடைக்கப்பட்டிருந்தன.
ஈரோடு மாவட்டத்தில் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ.சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. அதேபோல் விவசாய சங்கங்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, உள்ளூர் வியாபாரிகளின் நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த தோடு பங்கேற்கவும் செய்தனர்.
மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினர் ஏற்பாட்டில் பேருந்துகள் இயங்கின. தனியார் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கவில்லை. பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேதாஜி தினசரி மார்க்கெட் ஒருநாள் அடைக்கப்பட்டிருந்தது. எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் மார்க்கெட் பகுதி, பன்னீர்செல்வம் பார்க், ஈஸ்வரன் கோவில் வீதி , கொங்காலம்மன் வீதி,ஆர் கே வி ஈரோடு போன்ற இடங்கள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் , தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் சூரம்பட்டி நால்ரோட்டில். சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதைப்போல் மூலப்பட்டறை பகுதியிலும் வீரப்பன் சத்திரத்திலும், கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதிகளிலும் மறியல் போராட்டம் நடந்தது.
விவசாயிகள் போன்று வேடமிட்டு மம்மூட்டி நெல் நாற்று உடன்நூதன முறையில் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதேபோல் கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, சென்னிமலை, பெருந்துறை சத்தியமங்கலம், தாளவாடி என மாவட்டம் முழுவதும் இடதுசாரி கட்சியினர் 100 இடங்களில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கான பொது வேலை நிறுத்தத்தில் பல்வேறு இயக்கங்கள் பங்கேற்றன. மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு போராட்டம் நடத்தியது ஆளும் ஆட்சியாளர்களை அதிர வைத்துள்ளது.
-ஜீவாதங்கவேல், பகத்சிங்