தமிழ்நாட்டிற்கு தமிங்கில நாடு என்று பெயர் சூட்ட வேண்டிய அளவுக்கு, நிலைமை போய்க்கொண்டிருக்கிறது என்று வேதனைப் படுகிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். காரணம்?
நெல்லையைச் சேர்ந்த சங்கரநாராயணன் சொல்கிறார்...
"இன்று தமிழ்மொழி ஆங்கிலத்துடன் கலந்து, தமிங்கில மொழியாக மாறிவிட்டது. உதாரணத்துக்கு சொல்வதென்றால், உள்ளாட்சி அலுவலகங்களில் “"தமிழ் வாழ்க'’என்று பெயர்ப் பலகையை வைத்திருக்கிறார்கள். ஆனால் அலுவல கத்திற்குள் சென்றால், தமிழை அழிக்கக்கூடிய அளவிற்கு தமிங்கிலத்தை வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உள்ளாட்சித் துறை அலுவலர் வழங்கும் தேர்தல் பணி ஆணை கூட தமிங்கிலத் தில்தான் உள்ளது. அரசுத் துறை அலுவலகங்களில் நடைமுறை ஆவணங்கள் எல்லாம் கூட இப்போது தமிங்கிலமாக ஆக்கப்பட்டுவிட்டன. இதற்காக யாரும் கூச்சப்படவில்லை. தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், அரசு அலு வலக நடைமுறைகள் அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். ஒன்றிய அரசு போன்ற தேவைப்படும் வெளித்தொடர்புகளுக்கு மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இங் குள்ள அரசு அலுவலகங்களில் பெரும்பாலான விண் ணப்பங்கள் ஆங்கிலத்திலே இருக்கின்றன. தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்ததை மீறி பிறமொழியைப் பயன்படுத்துவோருக்கு 15 ரூபாய் அபராதம் என்று இருந்தது. இதை, கடந்த ஆண்டு ரூ.50 ஆக மாற்ற முயற்சி செய்வதாகச் செய்தி வந்தது. அது என்ன வானது என்றே தெரியவில்லை''’என்றார் ஆதங்கமாக.
இது உண்மைதான் என்கிற போக்குவரத்துத் துறையின் அந்த அதிகாரி, "1988-ஆம் ஆண்டு நடுவண் அரசு ஊர்தி சட்டம், பிரிவு 4.1, உட்பிரிவு 6ன் கீழ் அறிவிப்பு எண் 827 (இ) 11-11-1992-ன் படி, ஒரு வாகனம் தமிழ்நாட்டிலேயே சுற்றும் பட்சத்தில், இருபுறம் உள்ள எண் பலகையில் தமிழ் மொழியிலேயே எண்ணை இடலாம். ஆனாலும் இதை எங்கள் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளே ஏற்பதில்லை. 0 முதல் 9 வரையிலான எண்களுக்கும், ஏ முதல் இசட் வரையிலான ஆங்கில எழுத்துக்களுக்கும் தமிழ் எண்களை கோடிட்டு அறிவிப்பாணை போடப்பட்டும், இது பற்றித் தெரியாத போக்குவரத்துக் காவல்துறையினர், தமிழ் எண்களை எழுதிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள். இதன் மூலம் தமிழ்மொழியையும், அரசின் அறிவிப்பாணையையும் ஒருசேர கேலி செய்கிறார்கள். அதேபோல் தேர்தல் நடத்தும் அலு வலர்களால் வழங்கப்படும் படிவங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன. வேட்பாளர் மற்றும் சின்னங்களுக்குக் கீழே மட்டும் தமிழில் உதயசூரியன், இரட்டை இலை, கை, தாமரை என அச்சிடுகின்றனர்''’என்கிறார் வருத்தமாக.
நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளு மன்றத் தொகுதிச் செயலாளர் சாயல் ராமோ, "சங்க இலக்கியத்தில் தமிழ் அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது என்பதும், தொல்லியல் அகழாய்வில் அதைக் கண்டுபிடித்துவிட்டோம் இதைக் கண்டு பிடித்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டு திரிவதாலும் என்ன பயன்? தரைக்கு மேலே தமிழை அழிக்கும் வேலையைச் செய்தபடியே, பலகோடி செலவு செய்து, தரைக்குக் கீழே தமிழின் பெருமையைத் தேடுவது எதற்காக? தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வெளியீடுகளைக் கூட முழுதாய்த் தமிழில் வெளியிடாததும் வருந்தத் தக்கது''’என்கிறார் வேதனையுடன்.
"தனியார் வணிக விளம்பரப் பலகை முதல் அனைத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும் என் கிறது ஆட்சிமொழிச் சட்டம். இது நடைமுறையில் இருக்கிறதா? தமிழ்நாட்டு அரசு நிறுவனங்களே “"ஓட்டல் தமிழ்நாடு', “"கோஆப்டெக்ஸ்'’என்று இருக்கும்போது இவர்கள் யாரைக் கேட்க முடியும்? அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் எழுதப்படுவது எல்லாமே தமிழில் முதலில் எழுதப்படவேண்டும். தேவைப்பட்டால் தமிழுக்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தில், தமிழில் இருப்பதைக் காட்டிலும் மூன்றில் ஒருபகுதி அளவுக்கு எழுதிக்கொள்ளலாம்'' என்கிற காரைக் குடி திராவிடர் கழக மா.செ. வைகறை...
"அங்கே மூன்றாவது மொழி அறிவிப்பும் தேவை எனக் கருதினால், அதற்கும் கீழே சின்ன அளவில் எழுதலாம். ஆனால் இங்கே சில வரிகள் தமிழிலும் பல வரிகள் ஆங்கிலத்திலும் இருக்கின்றன. பேருந்துகளில் வேகத்தையும் நிறுத்தத்தையும் குறிக்கப் பயன்படுத்தும் சொற்களில் ஒன்று கூடத் தமிழில் இல்லை. தமிழ் நாட்டை ஆள்பவர்கள் தமிழை எங்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது'' ’என்கிறார் அழுத்தமாக.
நம்மிடம் பேசிய தமிழாசிரியர்கள் சிலர், "தமிழ் நாடு அரசு வேலைவாய்ப்பில், தமிழ் வழியில் பயின்ற வர்களுக்காக ஒதுக்கீட்டு முறையும் மாற்றியமைக் கப்பட வேண்டும். தமிழ் வழியில் பயின்றோர்க்கு முதற்கட்டமாகக் குறைந்தது 50 விழுக்காடாவது இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத் துக் கல்வி நிறுவனங் களிலும் தமிழ் வழியில் பாடம் இருக்கவேண்டும். அப்போதுதான் தமிழைக் காப்பாற்ற முடியும்'' என்கிறார்கள்.”
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் புத்தகப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழாசிரியை கீதாவோ "தமிழ்நாட்டின் இப்போ தைய ஆட்சி மொழி தமிங்கிலம் - தமிழ்நாட்டில் இருப்பது தமிங்கில ஆட்சி மொழித் துறை. இதுதான் இன்றைய ஆட்சிமொழி. ஏறத்தாழ அனைத்துத் துறைகளின் கடிதங்கள் ஆணைகள் எல்லாம் மாற்றி அமைக்கப் பட்டுவிட்டன. மாநகராட்சிப் பலகைகளில் மட்டும் "யஆழஐஃஆ தமிழ்' என்று மாற்றம் செய்யாமல் இருக்கின்றனர். கர்நாடகத்தில் ஆட்சிமொழித் துறை ஆய்வின்போது உள்ளுர் மொழி அமைப்பினை அழைத்துச் செல்லவேண்டும் என்பது நடைமுறை. அதுபோல் தமிழ்நாட்டிலும் உள்ளுர் தமிழ் அமைப்பினரை அழைத்துச் செல்லவேண்டும்''’என்கிறார் அழுத்தமாக.
"தமிழ்நாட்டின தமிழ்த் தெருவில் தமிழ்தானில்லை' என்ற பாவேந்தரின் கவலை இன்றும் தொடர்வது அனை வருக்கும் கவலை யைத் தருகிறது. இந்த நிலையை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முன் வருவாரா?