கடந்த ஏப். 11 நக்கீரன் (ஆன்லைன்) இதழில் கொரோனாவுக்குச் செக்வைக்கும் கேரளா அங்கீகாரம் பெறுமா ப்ளாஸ்மா சிகிச்சை எனும் தலைப்பில் கேரளா, ப்ளாஸ்மா தெரபி சிகிச்சையின் மூலம் கொரோனாவைப் போராடி முறியடித்ததையும் உயிர்ப்பலிகளை தடுத்து மக்களைக் காப் பாற்றியதையும் வெளிப்படுத்தியிருந்தோம். அப்போதே சுதாரிக்கவேண்டிய தமிழகம், கோட்டை விட்டதால் ஏராளமான உயிர்ப்பலிகளையும் அதிகமான கொரோனா தொற்றுகளையும் சந்தித்துவருகிறது. வெளிநாடுவாழ் மலையாளிகள் கொத்துக் கொத்தாகத் தொற்றுடன் திரும்பிக் கொண்டிருந்த நெருக்கடியான காலகட்டத்தில் முதல்வர் பினராய் விஜயன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலமாக கேரள மக்கள் கொடூர கொரோனாவின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். கொரோனாவுக்குப் ப்ளாஸ்மா சிகிச்சை செக் வைத்தது.
அப்போதைய நேரத்தில் தமிழகத்தில் தொற்றும் மரண விகிதமும் மிகவும் குறைவாகவே இருந்ததால் அண்டை மாநிலத்தின் ப்ளாஸ்மா சிகிச்சை முறையில் அக்கறை காட்டவில்லை. தற்போது தொற்றுப் பரவல் 2 லட்சத்து 26 ஆயிரத்தைத் தாண்டியதுடன் உயிர்ப்பலியும் 3409 என்ற அளவுக்குக் கட்டுப்படுத்த முடியாமல் உயர்ந்துகொண்டே போவதால், ப்ளாஸ்மா சிகிச்சை முறைக்கு மாறிய தமிழகம் தற்போது ப்ளாஸ்மா தானம் செய்வதற்கு அறைகூவல் விடுத்தவண்ணமிருக்கிறது.
கடந்த வருடம் நவம்பரில் சீனாவில் கொரோனாத் தொற்று ஏற்பட்டபோது மலையாளிகள் உயிர்தப்பிக்கும் பொருட்டு அலையலையாக தாயகம் திரும்பினார்கள். இப்படி வருபவர்களை முதல்வர் பினராய் விஜயனும் கேரள சுகாதாரத் துறையின் அமைச்சர் சைலஜா தலைமையிலான மருத்துவர் குழுவும் கண்காணித்ததில் கொரோனா எனும் உயிர்க்கொல்லியின் வீரியத்தை உணர்ந்ததால் டிசம்பரிலே சுதாரித்துக் கொண்டது.
நிபா வைரஸ், ஸ்வைன்புளு, பறவைக்காய்ச்சல் போன்ற பல்வேறு வைரஸ்களால் ஏற்கனவே அடிவாங்கிய கேரளா, வைரஸ் ஆராய்ச்சி நிபுணர்களான டாக்டர் அனுப், டாக்டர் ஷின்டோ பிரான்சிஸ் தெக்கூடன் தலைமையிலான டாக்டர்களை ஒருங்கிணைத்து வைரஸ் தடுப்பு முறையை மேற்கொண்டது. இந்த வைரஸ் முறையை மேலும் மேம்படுத்தியதில் பிறந்ததுதான் ப்ளாஸ்மா சிகிச்சைமுறை. இதன்மூலம் கொரோனா நோயாளி களின் குணமாகும் நாட்கள் வெகுவாகக் குறைந்திருக்கிறது. கொரோனாத் தொற்றால் பாதிக்கப் பட்டு குணமாகித் திரும்புகிறவர்களின் சம்மதத்துடன் 45-55 கிலோ எடைகொண்டவர்களிட மிருந்து 600 எம்.எல் ப்ளாஸ்மாவும், 55-க்கும் மேல் எடை கொண்டவர்களிடமிருந்து 1000 எம்.எல். ப்ளாஸ்மாவும் எடுத்து அதை ஆண்ட்டிபாடியாக் கித் தொற்றுப் பாதித்தவர்களின் உடலில் செலுத்தி சிகிச்சையளிப்பதால் மிக விரைவில் குணமாகித் திரும்பினர்.
கடந்த ஏப்ரல் மாதத்திலேயே கேரளாவின் ப்ளாஸ்மா தெரபி சிகிச்சை முறையைக் கவனித்துவிட்ட டெல்லி முதல்வரான கெஜ்ரிவால் அதனைப் பயன்படுத்த அனுமதித்ததில், அங்கேயும் ப்ளாஸ்மா தெரபி முறை சிகிச்சை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது, இதன் அடுத்தகட்டமாக முதல்வர் கெஜ்ரிவால் அங்கு மூன்று ப்ளாஸ்மா வங்கியைத் திறந்திருக்கிறார்.
ப்ளாஸ்மா சிகிச்சை பற்றி அறிந்த திரிபுரா அரசு, தங்களது மாநிலத்தில் ப்ளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ஐந்தாயிரம் நிவாரணமும், அரசுப் பணியில் சேர முன்னுரிமை போன்ற சலுகைகளையும் அறிவித்திருக்கிறது.
அஸ்ஸாம் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சாரான ஹிமந்தா பிஸ்வா சர்மாவோ கொரோனா தடுப்பு மருந்து எங்களுக்கு போதுமான அளவில் சப்ளை செய்யப்படவில்லை. எனவே ப்ளாஸ்மா சிகிச்சையை நம்பியுள்ளோம் என்கிறார். மேலும் அசாம் அரசு ப்ளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசு வேலையும் இலவசமாக வீடும் தருவதாக ரத்தினக் கம்பளம் விரிக்கிறது.
அதேசமயம் தமிழகமோ தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு, தனிமை, என்ற முறையை மட்டுமே பின்பற்றியது. தமிழக உளவுப்பிரிவு ப்ளாஸ்மா சிகிச்சைபற்றி அரசின் கவனத்திற்குக் கொண்டுபோக அப்போதைய சுகாதாரத்துறையின் இயக்குனர் பீலா ராஜேஷும், அது பற்றித் தெரிவித்திருக்கிறார். அதையடுத்தே ஏப்ரல் 17-ஆம் தேதியன்று, தமிழகத்தில் ப்ளாஸ்மா தெரபி சிகிச்சை முறை கொரோனா நோயாளிகளுக்குத் தரப்படும் என்று அறிவித்தார் பீலா ராஜேஷ். ஆனால் அந்த அறிவிப்பிற்குப் பின்பு அவர் வேறு துறைக்கு மாற்றப்பட ப்ளாஸ்மா சிகிச்சை முறையும் கண்டுகொள்ளப்படவில்லை.
சென்னையில் மட்டுமே அதிகரித்துவந்த கொரோனா தொற்று பிற மாநிலங்களிலும் வேகமாக உயரத்தொடங்கியது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நிலையோ முறையான படுக்கை இல்லாத அளவுக்குத் தொற்று உயரத்தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில்தான் ஜூலை 11-ம் தேதி முதல் முதல்வர் கொரோனாத் தொற்றுக்கு ப்ளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருக்கிறார்.
ஜூலை 19 அன்று தூத்துக்குடி, நெல்லை வந்த சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர், கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த ப்ளாஸ்மா தெரபி சிகிச்சை முறை பயன்படுத்தப்பட உள்ளது. அதற்கான சிறப்பு மையம் 2 நாளில் துவங்கப்படும் என்றார்.
காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் விரைவாக மேற்கொண்டால், தமிழகம் தப்பும்.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்