ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து புத்தாண்டில் புதிய முடிவாக பா.ஜ.க., தென் மாநிலங்களைக் குறிவைத்துக் களம் இறங்குகிறது. ஜனவரி இரண்டாம் தேதி பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார்.
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பட்ட மளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர், அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளுடன் விமான நிலையத்தில் சந்திப்பு ஒன்றை நடத்துகிறார். அந்த சந்திப்பில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள் கிறார்கள். அதற்கான லிஸ்ட் பிரதமர் அலுவலகத்திலேயே முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
எப்படியாவது தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் முடிவுக்கு பிரதமரின் இந்த வருகை மிகப்பெரிய காரணியாக அமையும் என்கிறார்கள் பா.ஜ.க.வினர். மோடி இதுவரை தமிழக அரசியல் விவகாரங்களில் தலையிட்டதில்லை. முதல்முறை யாக தமிழக அரசியல் நிலவரங்களைப் பற்றி திருச்சி வருகையின்போது பேசப்போகிறார் என்பதால் பிரதமர் மோடி விசிட் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் மோடிக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எடப்பாடி. அவர் பா.ஜ.க. கூட்டணியை விட்டு விலகியது பற்றி மோடி இதுவரை எந்தக் கருத்தும் சொல்லவில்லை. எடப்பாடியை அழைத்துப் பேசவுமில்லை. பிரதமர் மோடி அழைத்துப் பேசினால் எடப்பாடி பா.ஜ.க. கூட்டணிக்கு சென்று விடுவார் என்கிற எதிர்பார்ப்பு பா.ஜ.க.விலும் அ.தி.மு.க.விலும் நிலவுகிறது. பிரதமரின் திருச்சி விசிட்டின் போது அதற்கான வாய்ப்புகள் அதிகம் என இரு முகாம்களிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், திருச்சி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவியுடன் கலந்து கொள்கிறார். சமீபத்தில் கவர்னரைச் சந்தித்த ஸ்டாலின், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதியை கேட்டிருந்தார்.
அந்த அனுமதியை கவர்னர் வழங்கும் பட்சத்தில், அது அ.தி.மு.க.வுக்கு எதிரான பா.ஜ.க.வின் தாக்குதல்களின் தொடக்கம் என்றே கருதப்படும். சமீபத்தில் பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை எதிர்த்துப் பேச ஆரம்பித்து விட்டார்கள். கவர்னர், அ.தி.மு.க.வின் ஊழல் வழக்குகளுக்கு தமிழக மாநில அரசுக்கு அனுமதி கொடுப்பதை தொடர்ந்து மத்திய அரசு சார்பிலும் சில வழக்குகள் அ.தி.மு.க. மேல் பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க. இப்படி அ.தி.மு.க. எதிர்ப்பு மனநிலைக்கு சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமலாக்கத்துறைக்கும் மாநில அரசுக்குமான மோதல் தீவிரமடைந்து வருகிறது. மாநில அரசு மீது மத்திய அமலாக்கத்துறை ஒரு புதிய தாக்குதலைத் தொடர்ந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அங்கித் திவாரி என்கிற அமலாக்கத்துறையின் விசாரணை அதிகாரி மீது லஞ்சம் பெற்றார் என வழக்கைப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த உதவி இயக்குனர் பிரிஜிஸ்ட் ஜெனிவால் மற்றும் அதுல் குப்தா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறையின் 35க்கும் மேற்பட்ட மூத்த உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. டாக்டர் சுரேஷ் பாபு போன்ற 75க்கும் மேற்பட்டோரிடம் பிளாக்கில் பணம் பெறுவதற்கு அங்கித் திவாரி திட்டமிட்டார் என மதுரை உயர்நீதி மன்றத்தில் அங்கித் திவாரியின் ஜாமீனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பதில் அறிக்கையில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஒரு சம்மனை மத்திய அமலாக்கத்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பியிருந்தது. அதற்குப் பதில் அளித்த அமலாக்கத்துறை "அந்த சம்மன் முறையாக அனுப்பப்படவில்லை எனவே ஆஜராக முடியாது' என தெரிவித்தது. அத்துடன் அங்கித் திவாரி மீது தனது பங்கிற்கு ஒரு வழக்கைப் போட்டு அவரை டெல்லிக்குக் கொண்டுபோக முயற்சி செய்து வருகிறது. இதில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் அதுல்குப்தா தீவிரமாகச் செயல்படுகிறார்.
அதுல் குப்தாதான் இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங் கியவர். அவரைக் குறிவைத்துதான் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அங்கித் திவாரியை கைது செய்த வழக்கின் மூலம் பழி வாங்கும் நட வடிக்கைகளை நடத்துகிறது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்தியபோது அமலாக்கத்துறை அதி காரிகள் தாக்கப்பட்டனர். இப்பொழுது அதுல் குப்தா உட்பட 75 அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றார்கள் என ஒரு லிஸ்ட்டை அங்கித் திவாரியின் அலுவலக கம்ப்யூட்டரில் இருந்தே எடுத்து தமிழக அரசின் லஞ்ச ஒழிப் புத்துறை, நீதிமன் றங்களில் அளித் துள்ளது.
அங்கித் திவாரி யைப் போன்றே லஞ்சம் பெற்ற வழக்கில் டெல்லி மற்றும் ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது மாநில அரசுகள் வழக்குகள் தொடர, அங்கித் திவாரி மீது போடப்பட்டது போல அமலாக்கத்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
தமிழக அரசு ஒட்டுமொத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் குறிவைப்பது ஒரு மிகப் பெரிய தாக்குதல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு வட்டாரங்களில் பேசி வருகிறார். தற்பொழுது தமிழக பா.ஜ.க.வின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா, அடிக்கடி தமிழகம் வருவதற்குக் காரணம் தி.மு.க. அரசு மத்திய அமலாக்கத்துறையை அசிங்கப்படுத்துகிறது என்பதுதான். இந்நிலையில் பிரதமர் விசிட்டின்போது இந்த விவகாரம் பெரிய அளவிலான விவகாரமாக எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கிடையில் இவர்கள் மேல் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் மற்றும் உதிரிக்கட்சிகள் ஆகியவற்றை எப்படி அணுகுவது என ஒட்டுமொத்த தமிழக அரசியல் சூழலையும் மோடி விவாதிப்பார்.
மோடியின் திருச்சி விசிட்டிற்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப் பெரிய நகர்வுகள் நிகழும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
_______
இறுதிச் சுற்று!
ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்வதற்காக ஜனவரி 1-ந் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டனர். இதனையறிந்த ரஜினி, காலை 9:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்தார். வெள்ளை நிற உடையில் காணப்பட்ட ரஜினி, வீட்டின் பிரதான வாசல் அருகே வீட்டுக்குள் நின்றபடியே இரு கைகளையும் உயர்த்தி கை கூப்பி ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அவரை பார்த்து, "தலைவா புத்தாண்டு வாழ்த்துகள் என சொல்லியும், "பறக்கும் முத்தம் கொடுத்தும்' ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அதனைக்கண்டு மகிழ்ந்த ரஜினி, ரசிகர்களின் உற்சாகத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில், அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அதன்பிறகு கலைந்து சென்றனர் ரசிகர்கள்.
-இளையர்