கொரோனா நெருக்கடி களுக்கிடையே இலங்கை நாடாளு மன்றத்திற்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்திருக்கிறது. மீண்டும் மகிந்த ராஜபக்சே பிரதமர் ஆவார் என்பதையே இந்த தேர்தல் பிரதிபலித்திருந்தாலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங் கேவின் ஐக்கிய தேசிய கட்சி கடும் போட்டியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் யாருக்கு வெற்றி என்பது குறித்து சிங்கள கட்சிகளுக்குள்ளேயே வாக்குப்பதிவு நாள் வரை குழப்பங்களும் விவாதங்களும் நடந்தபடி இருந்தன.
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் இருக்கின்றன. இவைகளை கைப்பற்ற, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3,682 பேரும், சுயேட்சை களாக 3,800 பேரும் என மொத்தம் 7,452 பேர் வேட்பாளர்கள் போட்டியில் குதித்திருந் தனர். 225 எம்.பி.க்களை தேர்வு செய்ய இலங்கை முழுவதும் 12,985 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் நேரடியாக வாக்களித்து 196 எம்.பி.க்களும், கட்சிகள் பெறும் மொத்த வாக்குகள் சதவீதத்தின் அடிப்படையில் மீதமுள்ள 29 எம்.பி.க்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான தமிழின அழிப்பின் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையி லான ஐக்கிய தேசிய கட்சி, ரணிலோடு முரண்பட்டு வெளியேறிய சஜித்பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவையே பிரதான கட்சிகளாக களத்தில் நின்றன.
இலங்கையை பொறுத்தவரை சுதந்திரா கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும்தான் எப்போதும் போட்டி நடக்கும். ஆனால், சுதந்திரா கட்சியை உடைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என தனி கட்சி கண்டு வலிமையடைந்திருக்கும் மகிந்தராஜபக்சே அசுரபலத்துடன் தெரிகிறார். மகிந்தாவின் புதிய கட்சியை எதிர்த்து கடந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு கோத்தபாயவிடம் தோல்வியைத் தழுவிய சுதந்திரா கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்ரி பால சிறிசேனா, இந்த தேர்தலில் மகிந்தாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டதுதான் எதிர்பாராத திருப்பம்.
சிங்கள கட்சிகளுக்கிடையே நடந்த கடும் போட்டிக்கு மத்தியில், தமிழர்களின் தாயக பிரதேசமான வடகிழக்கு மாகாணங்களில் கோலோச்சும் தமிழ்க் கட்சிகள் பல குழுக்களாக தனித்தும், சிங்கள கட்சிகளு டன் கூட்டணி அமைத்தும் தேர்தல் களத்தை சந்தித்திருக்கின்றன. இதில் ஈழத்தமிழர்களின் ஆதரவை கடந்த காலங்களில் முழுமையாக பெற்றிருந்த இரா.சம்மந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிளவு கண்டு வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக உருவெடுத்திருந்தது. அந்த வகையில், ஈழத்தமிழர்களின் வாக்குகள் தமிழ்த்தேசிய கூட்டமைப் பிற்கா? தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கா? என்கிற போட்டியை அதிகரிக்கச் செய்திருந்தன வடகிழக்கு மாகாணங்கள். அதனால் இந்த முறை தமிழர்களின் வாக்குகள் யாருக்குச் செல்லும்? எதனை முன்னிறுத்தி வாக்களிக்க தமிழர்கள் முடிவு செய்வார்கள்? என்கிற கேள்விகள் எதிரொலித்தபடி இருந்தன.
கொரோனா நெருக்கடிகளால் இந்த முறை தேர்தல் பிரச்சாரம் களைகட்டவில்லை. வன்முறை வெறியாட்டங்களும் குறைந்திருந்தன. வடகிழக்கு மாகாணங்களில் கணிசமாக இருக்கும் இஸ்லாமியர்களின் வாக்குகள் கடந்த காலங்களில் பெரும்பாலும் சிங்கள கட்சிகளுக்கே பதிவாகி வந்த நிலையில், கடந்த ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு சிங்கள ஆட்சியாளர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே ஏகப்பட்ட அரசியல் உரசல்கள். இதனால் அவர்களின் வாக்குகளை கபளீகரம் செய்வதில் தடுமாறின சிங்கள கட்சிகள்.
இப்படிப்பட்ட சூழலில், தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தேர்தலுக்கு பிறகு புதிய அரசியலமைப்பை உருவாக்குவேன் என்பதையும், அதற்கேற்ப அரசிய லமைப்பு சட்டத்தை மாற்றியமைப்பேன் என்பதையும் முன்னிறுத்தி சிங்கள பேரினவாதத்தின் முழுமையான ஆதரவை பெற்று விடும் நோக்கத்தில் தனது பிரச்சார உக்திகளை வகுத்திருந்தார் மகிந்த ராஜ பக்சே. இதற்காக, தனது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை வெற்றியை அதாவது 150 இடங்களை கைப்பற்றும் வகையில் தமக்கு ஆதரவளியுங்கள் என்பதை அழுத்தமாக வலியுறுத்தியிருந்தார். சிங்கள மக்களிடம் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் மூன்றில் இரண்டு பங்கு சாத்தியமில்லை என்கின்றனர் தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பினர்.
காரணம், விகிதாச்சார தேர்தல் முறையில் மூன்றில் இரண்டு பங்கு பெறுவது கடினமான விசயம். இந்த இலக்கை அடைய மகிந்தாவுக்கு சுமார் 65 சதவீத வாக்குகள் கிடைக்க வேண்டும். ஆனால், விடுதலை புலிகளை வெற்றிகொண்டதற்கு பிறகு நடந்த தேர்தலில் கூட 52 சதவீத வாக்குகளுடன் 144 இடங்களையே மகிந்தாவால் பெற முடிந்தது. புலிகளை வெற்றிகொண் டது போல எந்தஒரு பெரிய அலையும் தற்போது இலங்கையில் வீசவில்லை. இதனால், மற்ற கட்சிகளுடன் ரகசிய குதிரை பேரங்களை பிரச்சாரம் ஓய்வு பெற்ற நாளிலிருந்தே நடத்தி வருகின்றனர் போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்கள்.
இவர்களது வலையில் இரா.சம்மந்தனின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விழுந்து விட்டது என்கிற குற்றச்சாட்டுகளை முன்னிறுத்துகின்றன தமிழ்க் கட்சிகள். மேலும் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களிடமும் ராஜபக்சேக்களின் ரகசிய பேரங்கள் சூடு பிடித்துள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கிடைக்கும் தமது எம்.பி.க்களை தக்க வைத்துக்கொள்ள ரணிலால் முடியுமா என்கிற கேள்வியும் இலங்கை அரசியலில் எதிரொலிக்கிறது. இதனை உணர்ந்தே, புதிய அரசியலமைப்பை உருவாக்குவேன் என்கிற மகிந்தாவின் பிரகடனத்தை உடைக்கும் வகையில் சிங்களவர்களின் ஆதரவை திரட்டியுள்ள ரணில் விக்ரமசிங்கேவும், சஜீத்பிரேமதாசாவும், ’இலங்கையின் வலிமையை உலக அரங்கில் தூக்கி நிறுத்துவேன் என்பதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்குவேன் என மகிந்தா சொல்வதெல்லாம் பித்த லாட்டம். அரசியலமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் தங்களது அதிகாரங்களை விரிவுபடுத்திக்கொள்ளவும் அசைக்க முடியாத சக்திகளாக தங்களை நிலை நிறுத்திக் கொள்வதும்தான் ராஜபக்சேக் களின் இலக்கு. அப்படி ஒருநிலை உருவாவது இலங்கைக்கு ஆபத் தானது’ என்பதை தங்களது பிரச்சாரத்தில் முன்னிலைப் படுத்தியுள்ளனர்.
தேசிய அளவில் மும்முனை போட்டிகள் நடந்தாலும் தமிழர் தாயகமான தமிழீழத்தில் பலமுனை போட்டிகள் நடந்தன. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒரே கூட்டணியாக களத்தை சந்திக்காமல் விறுப்பு வெறுப்பு களுடன் ஆளுக்கொரு முகமாக போட்டியிட்டிருப்பது தமிழ்க் கட்சிகளுக்கு பலவீனம். இது, போர்க்குற்றவாளிகளுக்கு சாதகமாகும். குறிப்பாக, யாருடைய ஆட்சியில் தமிழர்கள் அதிக நெருக்கடி களுக்கு ஆளாகிறார்களோ அவர்களை உயர்த்திப் பிடிப்பதுதான் சிங்கள பேரினவாதத்தின் யுக்தி.
அந்த வகையில், ராஜபக்சேக்களை சிங்கள கடும்போக்காளர்கள் உயர்த்திப் பிடிக்கும் சூழலில், ராஜபக்சேக்களை வீழ்த்த இரா.சம்மந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்டவைகள் ஒன்றிணைந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனது ஈழத்தமிழர்களுக்கு துரதிர்ஷ்டம். தவிர கருணா, பிள்ளையான் ஆகியோரும் கிழக்கு மாகாணங்களில் தனித்தனியாக போட்டியிடுவது தமிழர் வாக்குகளை பிரிக்கவே உதவும்.
இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட கொழும்பு பத்திரிகையாளர்கள், ""225 எம்.பி.க்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 25 இடங்களைப் பிடிக்க தமிழர் கட்சிகளுக்கு வாய்ப்பு உண்டு. விடுதலைப்புலிகள் கோலோச்சிய காலக்கட்டத்தில் 2004-ல் நடந்த தேர்தலில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆதரவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 22 இடங்களை கைப்பற்றியது. தமிழர்களின் அரசியலை வென்றெடுப்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பிரபாகரன் உருவாக்கியதால் கிடைத்த வெற்றி அது. அதன் பிறகு நடந்த தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சரிவை சந்தித்தது.
2015-ல் நடந்த தேர்தலில் 16 இடங்களை மட்டுமே பிடித்தது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு. அப்போது எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருந்தும் ரணில் மற்றும் மைத்ரி அரசாங்கத்திற்கு இணக்கமாக இருந்து தங்கள் நலன்களை வளமாக்கிக் கொண்டதோடு தமிழர்களின் அரசியல் உரிமைகளை இரா.சம்மந்தனும் கூட்டமைப்பின் மற்ற தலைவர்களும் விட்டுக்கொடுத்து விட்டனர். இதனால் போர் முடிந்த இந்த 11 வருடங்களில் தமிழர்களின் அரசியல் வலிமை பல பிளவுகளை சந்தித்து பலகீனமாகியிருக்கிறது. சுமந்திரன் போன்றவர்களால் சிங்கள ஆதரவு கட்சியாகவே மாறிப்போயிருக்கிறது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு''’என்று சுட்டிக்காட்டு கிறார்கள்.
இதனைத்தான் இந்த தேர்தலில் தமிழர்கள் மத்தியில் வலிமையான பிரச்சாரமாக கொண்டு சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் விக்னேஸ்வரன், தமிழர்களின் வாக்குகளை பெற தேர்தல் சமயத்தில் ஒரு நிலைப்பாட்டையும், தேர்தலுக்கு பிறகு சிங்களவர்களுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்கும் தமிழ்த்துரோகிகளை இந்த தேர்தலில் அடையாளம் கண்டு புறந்தள்ளுங்கள்’என வலியுறுத்தியுள்ளார்.
இன அழிப்பு போர் முடிவுக்கு பிறகு அதற்கு காரணமான ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக தமிழர்களின் கோபம் ஒரு புள்ளியில் குவிந்திருந்தது. ஆனால், அதனை தமிழ்த் தலைவர்கள் தங்களின் சுயநலன்களுக்காகவே பயன்படுத்திக்கொண்டதால் ஒரு புள்ளியில் ஒருங்கிணைந்திருந்த தமிழர்களின் கோபம் இந்த தேர்தலில் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழர்களின் வாக்குகள் தமிழ் கட்சிகளில் யாருக்குச் செல்லும் என்பதை விட அவர்களின் வாக்குகள் சிதறுவதால் ராஜபக்சேக்களுக்கே சாதகமாகிறது.
சிங்கள நாடாளுமன்றத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு எந்த உரிமைகளும் நீதிகளும் கிடைக்கப்போவதில்லை. ஏற்கனவே அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்ட தமிழர்களிடம் இருப்பது வாக்குரிமை மட்டுமே. அதனால் இனப்படுகொலையாளிகளை மிரள வைக்கும் வகையில் தமிழர்களின் உரிமைக் குரலை சிங்கள நாடாளுமன்றத்தில் யார் சமரசமின்றி போர்க்குரல் உயர்த்துவார்களோ அவர்களை ஆதரித்து தமிழர்கள் வாக்களித்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பே மிகுந்திருக்கிறது. அதனால் தமிழர்கள் புத்திசாலிகளா என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்! இந்த நிலையில், இலங்கை யில் தங்களுக்கான அரசியலை மையப்படுத்த, தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆட்சி தலைமைகள்.
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இன்னமும் முழுமையான நிம்மதி ஏற்படவில்லை. தொழில்வளம், வேலைவாய்ப்புகள் இல்லை. இருக்கின்ற நிலத்தில் பாடுபட்டு பயிர் செய்யும் தமிழ் விவசாயிகள் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத் திற்கான வாக்குறுதிகளை அளித்த ஆட்சியாளர்கள் எதையும் செய்யவில்லை. உயிர்த்திருப்பதற்கானப் போராட்டத்தில் இருக்கும் தமிழர்களுக்கு இலங்கைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் பெயரிலான வெறும் சடங்குதான் என்கிற விரக்தி குரலே எதிரொலிக்கிறது.
-இரா.இளையசெல்வன்