கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ருக்குராய், நாராயண சேட்ஜி, விமல், தாலு, நிக்காலாய், டோலா, சுபான், கிருஷ்ணப்பா, விக்காராய், ஒசூரைச் சேர்ந்த காமராஜ், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் புனித்குமார் என 10 பேர் டாடா சுமோவில் பாண்டிச்சேரிக்கு 22-ஆம் தேதி சென்றனர்.

அவர்கள் அக்டோபர் 23-ஆம் தேதி ஊருக்கு திரும் பிக்கொண்டிருந்தனர். இரவு 9 மணிக்கு செங்கம் கிருஷ்ணா நகர் கூட்டுசாலை அருகே சுமோ வந்த போது, பெங்களுரூ விலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது சுமோ. இந்த விபத்தில் 7 பேர் மரணமடைந்தனர்.

ff

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ.கிரி, தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி காவியா. இவர்களுக்கு சர்வேஸ்வரன், சித்து என இரண்டு குழந்தைகள். சதீஷ்குமாரின் மாமனார் ஊத்தங்கரை செங்கம்பட்டியைச் சேர்ந்த சின்னபாப்பா, மாமியார் மலர், மச்சான் கள் மணிகண்டன், ஹேமந்த் என எட்டுப் பேரும் மஹாளய அமாவாசைக்காக மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குச் சென்றனர். சாமி தரிசனம் பார்த்துவிட்டு அக்டோபர் 15-ஆம் தேதி பெங்களூர்- பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் செல்லும்போது எதிரே வந்த லாரிமீது கார் மோதி விபத்தில் எட்டுப் பேர் பலியாகினர்.

இப்படி ஒரே வாரத்தில் ஒரே இடத்தில் இரண்டு விபத்துக்களில் 15 பேர் பலியாகினர். கடந்த 4 மாதத்தில் இந்தப் பகுதியில் மட்டும் 50 விபத்துகளில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். விபத்து நடந்த இடங்களை ஆட்சியர் முருகேஷ், வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. கார்த்திகேயன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வுசெய்துள்ளனர். அடிக்கடி விபத்து நடக்கும் இடத்துக்கருகில் ஒரு மசூதி இருந்தது. சாலை விரிவாக்கம் செய்ய அதனை இடித்துவிட, மசூதியை இடித்ததற்கு பழிவாங்குகிறது என சிலர் வதந்தியைக் கிளப்பிவிட்டு மக்களிடையே பயத்தை உருவாக்கியுள்ளனர்.

பாண்டிச்சேரி டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.-77) திண்டிவனம், செஞ்சி, திருவண்ணா மலை, செங்கம், ஊத்தங்கரை, மத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர் போன்ற நகரங்கள் உள்ளன. புதிய சாலையமைக்க டெண்டர் எடுத்த நிறுவனம் பாதியில் விட்டதால், 10 ஆண்டுகளாக இந்த சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், கட்சிகள் பலமுறை போராட்டங்கள் நடத்தின. திருவண்ணா மலை எம்.பி. அண்ணாதுரை, நாடாளுமன்றத்தில் இச்சாலைக்காக குரல்கொடுத்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து கோரிக்கை வைத்தபின் தடைகள் தகர்ந்து இந்த சாலைப்பணிகள் வேகமெடுத்து இப்போது 80 சதவிகிதம் முடிந்துவிட்டது.

Advertisment

ll

கர்நாடக மாநிலத்திலிருந்து திருவண்ணா மலை, மேல்மருவத்தூர், மேல்மலையனூர் கோவில்களுக்கும், இளையோர் பாண்டிச்சேரிக்கும் செல்கின்றனர். இதனால் சராசரி நாட்களைவிட வார இறுதி நாட்களில் மூன்று மடங்கு வாகனங்கள் இந்த சாலையில் பயணமாகின்றன. கட்டுப்பாடற்ற வேகம், ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்தவும், எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காமல் செல்வதாலுமே இச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன என்கிறார்கள் ரெகுலராகச் செல்லும் ஓட்டுநர்கள்.

இதுகுறித்து செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. மு.பெ.கிரியிடம் கேட்டபோது,

“"இந்த சாலையில் நடைபெற்ற இரண்டு பெரிய விபத்துகளில் முதல் விபத்து மேல் மலையனூர் சென்றுவிட்டு இரவெல்லாம் தூக்கம்மில்லாமல் மறுநாள் தூக்கக் கலக்கத்தோடு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டது. இரண்டாவது விபத்து, தன்னையறியாமல் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டது. இந்த சாலையில் வேகத்தைக் குறைப்பதற்காக என்ன செய்யலாம் என காவல்துறையுடன் இணைந்து நடத்திய ஆலோசனையில், மாவட்ட எல்லை தொடங்கும் கீழ்பென்னாத்தூர் முதல் எல்லை முடியும் மேல்செங்கம் வரை விபத்து நடக்கும் பகுதிகளில் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கலாம் என முடிவெடுக்கப் பட்டுள்ளது. செங்கம் பகுதியில் 15 இடங்களில் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க சாலைகளில் தடுப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக காவல்துறையுடன் இணைந்து எம்.எல்.ஏ. என்கிற முறையில் சொந்தச் செலவில் 100 பேரல்களில் மண் கொட்டி சாலையின் ஓரங்களில் வைப்பது, சோலார் ஒளிரும் மின்விளக்கு அமைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. பலமடங்கு அதிக வாகனங்கள் இச்சாலையில் பயணமாகின்றன. அதனால் விபத்துக்களை தடுக்க இச்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளார்''’என்றார்.

மக்களைத் தொடர்ந்து பலிவாங்கி மரணச்சாலை என பெயரெடுத்துள்ள இச் சாலையில் விபத்துக்களைக் குறைக்க, உயிர்ப் பலிகளை தடுக்க, வதந்திகளை விரட்ட உடனடி நடவடிக்கை தேவை.